PUBLISHED ON : செப் 09, 2019

சீரகம்
ஆங்கிலப் பெயர்: குமின் (Cumin)
தாவரவியல் பெயர்: குமினம் சைமினம் (Cuminum cyminum)
தாயகம்: மத்தியத் தரைக்கடலை ஒட்டிய பகுதிகள், எகிப்து.
நம் வீடுகளிலும் உணவகங்களிலும் உப்பு, மிளகுத்தூள் எப்போதும் வைத்திருப்பார்கள். சூப் போன்ற சூடான உணவு வகைகளுக்கு சுவை சேர்க்க, இவை இரண்டும் பயன்படுகின்றன. அதேபோல், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள உணவகங்களில் உப்பும், சீரகத்தூளும் வைத்திருப்பார்கள். ஆம், அவர்களுக்கு சீரகத்தூள் முக்கிய வாசனைப்பொருள்.
நறுமணப் பொருட்கள் என்றாலே இந்தியாதான் தாயகம் என்று நினைக்கிறோம். அது உண்மையல்ல; நறுமணப் பொருட்கள் உலகின் பல்வேறு நாடுகளில் தோன்றியவை; இவற்றை வணிகர்கள் பிற கண்டங்களுக்கு அறிமுகம் செய்தனர். சீரகம், 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. சிரியாவில் நடந்த அகழாய்வில், 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சீரகத்துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
எகிப்து நாட்டின் புதிய ராஜ்ஜியத்தில், சீரகத்தின் பயன்பாடு இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. கிறிஸ்தவ இலக்கியங்களில் சீரகம் பற்றிய குறிப்புகள் உள்ளன. சீரகம் மெல்ல எகிப்து, சிரியா என, மற்ற மத்திய கிழக்குப் பகுதிகளுக்குப் பரவியது. சீரகத்தின் இனிய நறுமணம், மக்களை ஈர்த்தது. ஆகவே தான், அவர்களுடைய சமையலில் சீரகம் மிகுதியாகச் சேர்க்கப்பட்டது. சீரகம், ஈரானிலிருந்து இந்தியாவிற்கு வந்தது.
உலக நாடுகளின் பல்வேறு பகுதிகளிலும் சீரகம் பல்வேறு நிறங்களிலும், அளவுகளிலும் இருக்கும். அதேபோல், அதன் சுவையும் ஒரே மாதிரி இருக்காது. சில சீரக வகைகள், கடுமையான காரத்தன்மையோடும், சில வகைகள் நடுநிலையான நறுமணத்தோடும் இருக்கும். அப்படி இருக்கும்போது, அவற்றை சீரகம் என்று எப்படிச் சொல்வது? இதற்கு ஓர் சிறிய ஆராய்ச்சியை நாம் செய்யலாம். உலகின் பல்வேறு பகுதிகளிலுள்ள சீரகங்களை நுண்ணோக்கி மூலம் ஆராய்ந்து பாருங்கள். சீரகத்தின் நரம்புக் கோடுகள், மொத்தம் ஒன்பது. எல்லா நாட்டுச் சீரகத்தில் இருக்கும் கோடுகளும் ஒன்பதுதான். இது மிகப்பெரிய ஆச்சரியம் என்றாலும், அனைத்து ஊர்களில் விளைவதும் சீரகம்தான்.
உங்களுக்கு வெளிநாட்டில் உறவினர் இருந்தால், அவர்களிடம் அடுத்த முறை சீரகத்தை எடுத்துவரச் சொல்லுங்கள். அதனுடைய ருசியைத் தெரிந்து கொள்வது அவசியம். --சீரகம், எல்லா வகை நிலங்களிலும் விளையும். இந்தியாவில் இராஜஸ்தானில் உள்ள பாலைவனத்திலும் விளைகிறது. அதிக ஊட்டச்சத்தற்ற மண்ணிலும் வளரும்.
சீரகச் செடியின் வேர், தேவையான ஈரப்பதத்தை உள் இழுத்துக்கொள்ளும் தன்மையுடையது. அதனால், குறைவான தண்ணீர் போதுமானது. தமிழகத்தில் மலைப்பகுதிகளில் விளைகிறது. எந்த இடத்தில் விளைந்தாலும், சீரகத்தின் சிறப்பே அதன் நறுமணம் மாறாத இயல்புதான்.
தெரியுமா?
கருஞ்சீரகத்தின் வாசனை மிகவும் வித்தியாசமாக இருக்கும். காஷ்மீர், லடாக் பள்ளத்தாக்குப் பகுதிகளில் கருஞ்சீரகம் அதிக அளவில் விளையும். அதிக அளவில் என்பதை, உங்களுக்குப் புரியும் விதத்தில் சொல்ல வேண்டும் என்றால், ஸ்ரீநகர் விமான நிலையத்தை விட்டு வெளியே வரும்போது இருக்கும் புதர்கள், அடர்த்தியாக வளர்ந்திருக்கும். அந்த ஊர் மக்கள், இதைத்தான் சமையலுக்குப் பயன்படுத்துவார்கள். இந்தியாவின் பிற பகுதிகளில் கிடைக்கும் சீரகத்தைச் சேர்க்க மாட்டார்கள். ஆனால், இப்போது, மற்ற மாநில ஆட்கள் அங்கு செல்வதால், அவர்களும் பழுப்பு நிற சீரகத்தை உணவில் சேர்த்து வருகிறார்கள்.

