PUBLISHED ON : செப் 16, 2019

''வாழ்க்கையில் தன்னம்பிக்கை தான் மனிதனுடைய சக்தி என்ற மையக்கருத்தை வலியுறுத்தி, மாயக்குதிரை என்ற நாடகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சமூக கருத்துகளைக் கொண்ட புது மாதிரியான கூத்து நாடகங்களை வடிவமைத்து அரங்கேற்றம் செய்வதே எங்கள் நோக்கம்” என்று பேசத் தொடங்கினார், காஞ்சிபுரத்தில் உள்ள 'கட்டைக்கூத்து குருகுலத்தை' நடத்திவரும் பி. இராஜகோபால்.
இவரிடம் கட்டைக்கூத்து குருகுலம், 'மாயக்குதிரை' குறித்து பேசியதிலிருந்து:
“கட்டைக்கூத்து என்பது தெருக்கூத்து போன்ற ஒரு கலைதான். ஆடல், பாடல், வசனம் என, அனைத்துமே இதில் முக்கிய அம்சங்கள். ஒப்பனை, உடையலங்காரம் ஆகியவையும் முக்கியமானவையே.
பெரும்பாலும், மகாபாரதச் சம்பவங்களை ஒட்டி, கட்டைக்கூத்து நாடகம் அமைக்கப்படும். அரசர்கள், முனிவர்கள், கடவுள்கள் என, பல்வேறு வேடங்களிட்டு, கலைஞர்கள் நடிக்க, கட்டைக்கூத்து நடைபெறும்.
'மாயக்குதிரை' என்ற நாடகம் சற்று வித்தியாசமானது. இது எங்களுடைய குருகுலத்தின் மிகவும் பிரபலமான நாடகம். ஒவ்வோராண்டும், இதில் மாணவர்கள் நடிப்பார்கள்.
தன்னம்பிக்கை என்ற மையக்கருத்தை ஒட்டியே இந்த நாடகம் எழுதப்பட்டுள்ளது. 1:15 மணிநேரம் நடக்கும் இந்த நாடகத்தில், 9 சிறுவர்கள் நடிக்கிறார்கள்.
பெண்கள், ஆண்கள் இருபாலரும் பங்கேற்கும் இந்நாடகத்தில், நடிப்பு, பின்னணி இசை, ஒப்பனை என, அனைத்திலும் அவர்களுடைய பங்களிப்பு உண்டு.
சென்னையில் முதன்முறையாக 'ஷ்ரத்தா' நாடக அமைப்பின் உதவியோடு 'மாயக்குதிரை' நாடகம் மேடை ஏறப் போகிறது.
எங்கள் குருகுலப் பாடத்திட்டத்தில் இந்த நாடகம் ஏற்கெனவே சொல்லிக் கொடுக்கப்பட்டாலும், பெரிய அரங்கத்தில், ஏராளமான பார்வையாளர்கள் முன்னிலையில் நடத்த இருப்பதால், இரண்டு மாதங்களாக மாணவர்களுக்குச் சிறப்புப் பயிற்சியளிக்கப்பட்டது. நிச்சயம் இது ஒரு புதுவிதமான கூத்தாக இருக்கும்.
எங்கள் குருகுலத்தில் நடிகர், நடிகைகள் எல்லாமே 7 வயது முதல் 17 வயது நிரம்பிய மாணவர்களே. 2002இல் கட்டைக்கூத்து குருகுலம் தொடங்கப்பட்டது. இந்த மாணவர்கள் பெரும்பாலும், சமுதாயத்தில் பின்தங்கியவர்கள். அதனால், அவர்களிடம் பணம் வாங்குவதில்லை.
கலையும் கல்வியும் இணைந்தது எங்கள் பள்ளி. இசை, நடனம், மொழிப்பயிற்சி, பேச்சாற்றல், உடல் மொழி என, அனைத்துமே சொல்லித் தரப்படுகிறது. கலை மீது ஆர்வம் இருக்கும் குழந்தைகளுக்கு, நாங்கள் பயிற்சியளித்து வருகிறோம்.
கூத்து என்றால், எப்போதுமே ஆண்களின் ஆதிக்கம் இருக்கும். எங்கள் குழு அப்படிப்பட்டது அல்ல. இருபாலருக்குமே சம வாய்ப்பு வழங்கப்படுகிறது. பெண்களும் குருகுலத்தில் தங்கிப் பயிற்சி எடுத்து வருகின்றனர்.
செப்டம்பர் 20, 21, 22 ஆகிய நாட்களில் 'மாயக்குதிரை' நாடகம் சென்னை தி.நகர் வாணி மகாலில் இரவு 7 மணிக்கும், பெசன்ட் நகரில் ஸ்பேசஸ் அரங்கில், 23ஆம் தேதி இரவு 7 மணிக்கும் நடக்கவிருக்கிறது” என்றார் இராஜகோபால்.
