இந்தியாவுக்கு வெளியே இந்திய ராணுவத்தை உருவாக்கியவர்
இந்தியாவுக்கு வெளியே இந்திய ராணுவத்தை உருவாக்கியவர்
PUBLISHED ON : அக் 18, 2016

தேசத்தின் விடுதலைக்குப் பாடுபட்ட தலைவர்களில் முக்கியமானவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். நாடு சுதந்திரம் பெற, ராணுவ பலம் தேவை என்று கருதியவர். ஒடிசா மாநிலத்தில் உள்ள கட்டாக்கில் ஜனவரி 23, 1897ல் பிறந்தார். ஆரம்ப, கல்லூரி படிப்பை இந்தியாவில் முடித்தவர், லண்டன் சென்று ஐ.சி.எஸ். (Indian Civil Services -இண்டியன் சிவில் சர்வீஸ்) படித்தார். அதற்கான நுழைவுத் தேர்வில், தேர்ச்சியும் பெற்றார்.
ஆனால், அந்த வேலையில் சேர அவருக்கு விருப்பமில்லை . நம்மை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஆங்கிலேயரிடம், ஏன் வேலை செய்ய வேண்டும் என்று நினைத்தார். 1921ல் லண்டனில் இருந்து தாயகம் திரும்பினார்.
இங்கிலாந்தின் வேல்ஸ் இளவரசர் 1922ல் இந்தியாவிற்கு வந்தார். சுயாட்சி தரமறுத்த காரணத்தால், அவர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காந்திஜி தலைமையில் நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். நேதாஜி கொல்கத்தாவில் கலந்து கொண்டு, சிறை சென்றார்.
1938ல் இந்திய தேசிய காங்கிரசின் தலைவரானார். பிறகு, காந்திஜியிடம் கருத்து வேறுபாடு தோன்றியது. 1939ல் 'அகில இந்திய பார்வார்டு பிளாக்' கட்சியை தொடங்கினார். ஆங்கிலேயரிடம் 'சுதந்திரம் கொடு என்று கேட்பதை விட, நாமே எடுத்துக்கொள்ள வேண்டும்' என்றார். 'எனக்கு ரத்தம் கொடுங்கள், உங்களுக்கு சுதந்திரத்தை பெற்றுத் தருகிறேன்' என்று முழக்கமிட்டார். இவரின் இந்த, வீர முழக்கத்தைக் கேட்டு இளைஞர்கள் பலர், சுதந்திரப் போராட்டத்தில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
நேதாஜிக்கு நாடெங்கும் ஆதரவு பெருகியது. அதை ஒடுக்க, ஆங்கில அரசு அவரை, சிறையில் அடைத்தது. அவர் சிறையில் உண்ணா விரதம் இருந்தார். அவரின் உடல் பாதிக்கப்படுவதை அறிந்த அரசாங்கம், அவரை விடுதலை செய்தது. விடுதலையான சுபாஷ், வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றார். ஜெர்மனி, இத்தாலி என பல நாடுகளுக்குச் சென்று ராணுவ உதவி கோரினார். கிட்டவில்லை. கடைசியில் ஜப்பான் நாட்டிற்கு நீர்மூழ்கிக் கப்பலில் சென்றார். அவருக்கு ஜப்பான் அரசின் உதவி கிட்டியது. இந்தியாவிற்கு வெளியில் இருந்தபடியே, ராணுவத்திற்கு ஆட்கள் திரட்டினார். இந்திய தேசிய ராணுவத்தில் (ஐஎன்ஏ- Indian National Army - இண்டியன் நேஷனல் ஆர்மி) பெண்களுக்கென்று தனிப்பிரிவை உருவாக்கினார். அதற்கு 'ஜான்சிராணி படை' என்று பெயரிட்டார். அதன் தலைவியாக இருந்தவர் தமிழ்ப் பெண்ணான லட்சுமி சைகல்.
நேதாஜிதான் 'ஜெய் ஹிந்த்' என்ற வார்த்தையை பரவலாக்கினார். 'வெல்க பாரதம்' என்பதே அதற்கான பொருள்.
அவருடைய இந்திய தேசிய ராணுவம் பர்மாவிலிருந்து (1944) இந்தியாவிற்குள் நுழைந்தது. ஆனால் ஆங்கிலேயர்கள் இந்திய ராணுவ வீரர்களை கொன்று குவித்தார்கள். சுபாஷுக்கு ஆதரவாக இருந்த ஜப்பான், இரண்டாம் உலகப்போரில் தோற்றது.
நேதாஜியின் படை அப்போது தோற்றாலும், அவரின் லட்சியம் தோற்கவில்லை. மூன்றே ஆண்டுகளில் இந்தியா விடுதலை அடைந்தது.
