PUBLISHED ON : ஜூன் 11, 2018

நான்கு ஆண்டுகளாக நல்ல விளைச்சல் இல்லை. ஆனால் வயலுக்கான செலவுகளோ அதிகம். அடைமழையால் ஓராண்டு விளைச்சல் எல்லாம் அழிந்து போனது. அடுத்த ஆண்டு வெயிலின் கொடுமையால் பயிர்கள் எல்லாம் கருகிப் போயின. சென்ற ஆண்டு பெயருக்கு விளைந்தது. போதுமான பொலி (விளைச்சல்) காணவில்லை. கொக்கு என்னும் கொடிய நோய் பயிர்களில் பரவி, எங்கள் குடியைக் கெடுத்தது. இந்த ஆண்டு ஆவணி, புரட்டாசி மாதங்களில் விளையும் கார் காலப் பயிரும் விளையவில்லை. மாசி, பங்குனி மாதங்களில் விளையும் நெல்லும் கரிந்து போயிற்று.
மழை மிகுந்தாலும், மழை இல்லாமல் போனாலும் பாதிக்கப்படுவது விவசாயிகள்தான். காலம் செய்த கோலத்திற்கு எங்களை நொந்து என்ன செய்ய முடியும்?
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, சுமார் நூறாண்டுகளுக்கு முன்பு 'நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம்' என்ற நூலில் எழுதியது இது.
கவிமணியின் சோகக்குரல் விவசாயிகளுக்கு இப்போதும் பொருந்துகிறதுதானே!
கவிமணி இந்தக் கதையை எழுதும்போது, அவருக்கு வயது 40. (இவர் ஜூலை 27, 1876 இல் பிறந்தார். செப்டம்பர் 26, 1954இல் மறைந்தார்). இந்தப் புத்தகம் அச்சில் ஏறியது அவருடைய 66ஆம் வயதில். வட்டார வழக்கின் நுண்ணிய அழகுகளைத் தொட்டு இலக்கியமாக்கும் திறன் அவருக்கு இருந்தது. நூல் முழுக்க பெண்களின் உலகம் மிக அழகாக சித்தரிக்கப்பட்டிருக்கும். நாஞ்சில் நாட்டுப் பெண்களின் சொத்துரிமை பற்றியது இந்தக் கதை. நாஞ்சில் நாடு என்பது குமரி மாவட்டத்தைக் குறிக்கும்.
