தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/புலிவருது...

புலிவருது...

புலிவருது...


PUBLISHED ON : ஏப் 02, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 02, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நேருக்கு நேர் புலிகளைப் பார்க்கும் ஆர்வம் கொண்டவரா நீங்கள்? மகாராஷ்டிர மாநிலம் சந்திரபூர் மாவட்டத்தில் அமைந்துள்ள 'தடோபாஅந்தாரி புலிகள் சரணாலயம்' செல்லுங்கள்! புலிகளை அவற்றின் வாழ்விடத்திலேயே காணலாம்.

பயணச் செலவு

சென்னையில் இருந்து இரவு 7:15 மணிக்குக் கிளம்பும் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸில் சென்றால், அடுத்த நாள் காலை மகாராஷ்டிர மாநிலம் பல்ஹர்ஷா ரயில் நிலையத்தை அடையலாம். அங்கிருந்து தடோபா 52கி.மீ.

தொலைவில் உள்ளது. வாடகைக் கார் கிடைக்கும். ஒரு மணிநேரத்தில் சென்றுவிடலாம்.

சரணாலயத்தில், மகாராஷ்டிர சுற்றுலா வளர்ச்சிக்கழக ஹோட்டல் இருக்கிறது. இரு நபர்கள் தங்கக்கூடிய தனிஅறையின் வாடகை நாள் -ஒன்றுக்கு 2,200 ரூபாய். ஆன் லைன் மூலம் முன்பதிவு செய்ய வசதி உள்ளது.

2 பகல்கள், 2 இரவுகள் தங்கி, 4 சஃபாரி ஜீப் பயணங்கள் மேற்கொள்ள, நபர் ஒருவருக்கு ஆகும் செலவு 10,000 ரூபாய்.

நிஜமாவே புலி வருது

புலிகள்தான் தடோபாவின் சிறப்பம்சம். சுமார் 75 புலிகள் இருக்கின்றன. வனத்துறையின் ஜீப்பில் காட்டிற்குள் பயணம் செய்து, புலிகளை நேரடியாகப் பார்க்கலாம்.

தடோபா சரணாலயம், தடோபா, மொஹர்லி, கோல்சா என மூன்று சரகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பொதுவாகக் காடுகளை 'மையப் பகுதி' (Core zone), அதைச் சுற்றியுள்ள' இடைப் பகுதி' (Buffer zone) என வனத்துறையினர் இரு பகுதிகளாகப் பிரித்துள்ளனர்.

மையப் பகுதி, வனவிலங்குகளின் பிரத்யேகப் பகுதி. அங்கு மனிதர்கள் வசிக்க அனுமதி இல்லை. இடைப் பகுதியில், பழங்குடியினரின் வசிப்பிடங்களைக் காணலாம். மையப் பகுதியில் இடப்பற்றாக்குறையோ, உணவுப் பற்றாக்குறையோ ஏற்பட்டால், இடைப் பகுதியைத்தேடி விலங்குகள் வரும்.

பழங்குடி மக்கள், விலங்குகளுடன் ஒத்திசைந்து வாழப் பழகி இருப்பவர்கள். விலங்குகளின் நடவடிக்கைகள் அவர்களுக்கு அத்துபடி. இதனால், சுற்றுலா பயணிகளின் வழிகாட்டிகளாகவும், சஃபாரி ஜீப்ஓட்டுனர்களாகவும்செயற்பட, அவர்களுக்கு வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

தடோபாவில் மூங்கில் அதிகம். அதனால், இந்தியக் காட்டெருமை, சாம்பார் மான், புள்ளி மான், பன்றி போன்ற விலங்குகள் அதிக அளவில் இருக்கின்றன. இவைதான் புலிகளின் இரை விலங்குகள். எனவே, புலிகளின் சிறப்பான வாழ்விடமாகத் தடோபா இருக்கிறது.

என்ன இருக்கிறது?

இதன் பரப்பளவு 625 சதுர கி.மீ. இங்கு, புலிகள் உட்பட 45க்கும் மேற்பட்ட பாலூட்டி இனங்களும், 280க்கும் மேற்பட்ட பறவை இனங்களும் இருக்கின்றன.

சஃபாரி பயணம்

ஒரு நாளில் இரண்டு சஃபாரி பயணங்கள் மட்டுமே சாத்தியம். மையப் பகுதி, இடைப் பகுதியில் தலா இரண்டுமுறை பயணம்செய்தால்,புலிகளைப் பார்ப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது.

எப்படிப்பட்டவை?

பொதுவாகவே, புலிகள் கூச்சசுபாவம் கொண்டவை. சரணாலயங்களில் இருக்கும் புலிகள், சிறுவயதிலிருந்தே ஜீப்புகளைப் பார்த்துப் பழகியவை. அவற்றுக்கு ஜீப்புகளும், காடுகளில் இருக்கும் ஒருவகைப் பொருள். அதனால் ஜீப்பையும், அவற்றில் வரும் மனிதர்களையும் பொருட்படுத்தாது.

வயதுவந்த புலிகள், காட்டின் ஒரு குறிப்பிட்ட பகுதியைத் தேர்ந்தெடுத்து, அதன் எல்லையில் ஆங்காங்கே சிறுநீர் கழித்தும், நகங்களால் பிராண்டியும் 'இது என்னோட ஏரியா' என நிறுவிக்கொள்ளும். ஆண் புலியாக இருந்தாலும், பெண் புலியாக இருந்தாலும் தனித்தனி இடம்தான்.

இனப்பெருக்க காலத்தில் மட்டுமே ஒரு பெண் புலி, இன்னொரு ஆண் புலியைத் தன்னுடைய இடத்திற்குள் வர அனுமதிக்கும். கருவுற்ற பிறகு ஆண் புலி வெளியேறிவிடும். ஒரு பிரசவத்தில் நான்கு குட்டிகள் வரை ஈனும். 15 - 20 மாதங்கள் வரை குட்டிகள், தாயின் பாதுகாப்பில் இருக்கும். அதன் பிறகு தாய்க்கும் சரி, குட்டிகளுக்கும் சரி தனிவாழ்க்கைதான்.

மாயா

ஒவ்வொரு புலியும் தனித்துவமான வரிகளுடன் பிறக்கும். ஒவ்வொரு புலியும் தனி எண்களால் அடையாளப்படுத்தப்படுகின்றன. புலிகளுக்குப் பெயர்கள்கூட உண்டு. ஏதேனும் ஒரு காரணத்தின் அடிப்படையில் அந்தப் பெயர்கள் சூட்டப்படுகின்றன. உதாரணமாக, மாயா என்ற புலிக்கு, இடது கண்ணத்தில் சூல வரிவடிவம் இருந்ததால், அந்தப் பெயர் சூட்டப்பட்டது.

'மாயா' என்ற அந்தப் புலியின் வயது 12. கம்பீரமாக இருக்கும் மாயா, 'தடோபாவின் ராணி' என்று வர்ணிக்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us