PUBLISHED ON : பிப் 01, 2016

கல்பனா சாவ்லா நினைவு நாள் - பிப்ரவரி 01
'வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள்' என்பது சிலப்பதிகார வரி. கண்ணகியின் சின்னக் கால்கள் பூமியிலேயே பட்டதில்லை என்பதை ஒரு சிறப்பாகச் சொல்லும் வரி. ஆனால், பெண்ணின் சின்னப் பாதங்களுக்கு, விண்ணைத் தீண்டவும் சிறகுகள் முளைத்தன. அதற்கு உதாரணம், கல்பனா சாவ்லா!
ஹரியானா (Haryana) மாநிலத்தில் கர்னால் (Karnal) என்ற ஊரில் 1961ஆம் ஆண்டு, மார்ச் 17ஆம் தேதி பிறந்தார் கல்பனா சாவ்லா (Kalpana Chawla). சிறு வயதில் ஆகாயத்தில் பறக்கும் விமானங்களை பார்த்துக்கொண்டிருப்பார். தானும் ஒரு நாள் விமானம் ஓட்ட வேண்டும் என்று ஆசை கொண்டார்.
சண்டிகரில், உள்ள பஞ்சாப் பொறியியல் கல்லூரியில், ஏரோநாட்டிக்கல் என்ஜினியரிங் (Aeronautical Engineering) படிப்பில், 1982 ல் சேர்ந்தார். ஆண்கள் மட்டுமே படித்து வந்த அந்தத் துறையில் கல்பனா சாவ்லாதான் முதல் பெண்!
இளங்கலை பட்டம் பெற்றதும் மேற்படிப்புக்காக அமெரிக்கா பறந்தார். டெக்ஸாஸ் (Texas) பல்கலைக் கழகத்தில் விண்வெளி ஆராய்ச்சிப் படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றார். வான ஊர்திப் பயிற்சியாளர் ஆனார்.
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் (நாசா/NASA) அவரை விண்வெளிக்கு அனுப்ப முடிவு செய்தது. கடும் பயிற்சிகளுக்குப் பிறகு 1997ல் 'ஸ்பேஸ் ஷட்டில் கொலம்பியா' (Space Shuttle Columbia) என்னும் விண்வெளிக் கலத்தில் பறந்தார். விண்வெளியில் பதினைந்து நாட்கள் இருந்தார். விண்வெளிக்குச் சென்று திரும்பிய முதல் இந்தியப் பெண் என்கிற பெருமையைப் பெற்றார் கல்பனா சாவ்லா.
இரண்டாவது முறை கல்பனாவுடன் ஆறு பேரையும் அனுப்பி வைத்தது நாசா. 2003ஆம் ஆண்டு ஜனவரி16ல் அந்த விண்கலம் பறந்தது. பிப்ரவரி முதல் தேதி பூமிக்குத் திரும்பியது. பதினைந்து நிமிடங்களில் பூமியைத் தொட்டுவிடும் என்கிற நிலையில், விண்கலம் வானத்திலேயே வெடித்தது. கல்பனா உள்ளிட்ட ஏழு பேரும் விண்கலத்துடன் வெடித்துச் சிதறினார்கள்.
கல்பனா சாவ்லாவைப் பெருமைப்படுத்தும் வகையில் தமிழக அரசு, ஒவ்வொரு வருடமும் வீர தீரச் செயல் புரியும் பெண்களுக்கு 'கல்பனா சாவ்லா' விருது வழங்கி சிறப்பித்து வருகிறது.
