PUBLISHED ON : மே 16, 2016
இந்தியாவின் புதிய நம்பிக்கை நட்சத்திரம் திரிபுரா மாநிலத்தை சேர்ந்த திபா கர்மாகர். இவருக்கு, பிரதமரிடம் இருந்து மட்டுமல்ல பட்டிதொட்டி எங்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து கொண்டிருக்கின்றன. ஏன் இத்தனை புகழ்? அப்படி என்ன சாதித்தார்?
ரியோ டி ஜெனிரோவில் இந்த ஆண்டு நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றிருக்கும் இந்தியாவின் முதல் ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை என்கிற ஒரு சாதனை போதாதா...
அதுமட்டுமில்லாமல் சர்வதேச மற்றும் இந்திய அளவில் 77 பதக்கங்களை வென்றிருக்கிறார். அதில் 67 தங்கப் பதக்கங்கள்! இது போதுமா? இல்லை, இன்னும் வேண்டுமா!
'நான் சிறுமியாக இருந்தபோது நண்பர்களுடன் விளையாடுவேனே தவிர விளையாட்டில் எனக்கு விருப்பம் இருந்தது இல்லை. பளு தூக்கும் வீரரான என் அப்பா என்னை ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சியில் சேர்த்து விட்டார்.
பயிற்சியின் போது, சிறப்பாக விளையாட வேண்டும் என்பதற்காக தட்டையான எனது பாதங்களின் வடிவத்தை வளைவாக மாற்ற மிகவும் சிரமப்பட்டேன். தேவையான பயிற்சி உபகரணங்களும் இல்லை. மழைக் காலங்களில் பயிற்சி அறை முழுவதும் தண்ணீர் புகுந்துவிடும். இதுபோன்ற பல சிரமங்களுக்குப் பின்னரே என்னால் இந்த உயரங்களைத் தொட முடிந்திருக்கிறது.
ஆரம்ப காலத்தில் என்னிடம் நல்ல காலணிகள் இல்லை. அது ஒரு துரதிர்ஷ்டமான காலம். ஆனால், 2014ல் வெண்கலப் பதக்கம் வென்ற பின்பு என்னை எல்லாருக்கும் அடையாளம் தெரிந்தது. திரிபுரா மக்கள் இப்போது என்னைக் கொண்டாடுகிறார்கள். ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வாங்கி கௌரவிப்பதுதான் அவர்களுக்கு நான் செலுத்தும் நன்றிக்கடன்' என்று
நெகிழ்ந்து சொல்கிறார் திபா.
* காமன்வெல்த் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் இவர்தான். உலக சாம்பியன்ஷிப் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகளில் பங்கேற்ற முதல் இந்தியப் பெண் என்கிற பெருமையும் திபாவுக்கு உண்டு.
* ஜிம்னாஸ்டிக்ஸில் பிராடுநோவா (Produnova) வகைப் போட்டியில் உலகிலேயே அதிகமான ஸ்கோர் இவருடையதுதான். இதுவரை உலகில் இந்த பிராடுநோவா சவாலை மூன்று பெண்கள் மட்டுமே முடித்துள்ளனர். அதிலும் இவர் எடுத்த புள்ளிகள்தான் அதிகம்.
