PUBLISHED ON : டிச 16, 2019

ஒன்றுக்கும் மேற்பட்ட பொருள் வருமாறு செய்யுள் இயற்றுவது இரட்டுற மொழிதல் எனப்படும். அதைச் சிலேடை என்றும் கூறுவர். ஒரு பொருளை எடுத்துக்கூறுவதுபோல் இருக்கிற அதே வேளையில் இன்னொரு பொருளுக்கும் பொருத்தமாக இருக்கும்.
தனிப்பாடல் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் சொக்கநாதப் பிள்ளை இயற்றிய இந்தப் பாடல், மரத்திற்கும் பிய்ந்துபோன குடைக்கும் சிலேடையாக அமைந்துள்ளது.
'பிஞ்சு கிடக்கும் பெருமழைக்குத் தாங்காது
மிஞ்ச வதனுள் வெயிலொழுகும் - தஞ்சமென்றோர்
வேட்டது அருள் முத்துசாமித் துரைராஜேந்திராகேள்
கோட்டுமரம் பீற்றல் குடை.'
பாடலிலே யாரை மகிழ்விப்பதற்காகப் பாடுகிறார்களோ, அவரின் பெயரையும் சேர்த்தே குறிப்பிடுவார்கள். முத்துசாமித்துரை ராஜேந்திரன் என்பவர், சொக்கநாதப் பிள்ளையை ஆதரித்த புரவலரில் ஒருவர். அவரிடம் கூறுவதுபோல் அமைந்தது இப்பாடல். மரத்துக்கும் பிய்ந்த குடைக்கும் பொருந்துவது போல் அமைந்துள்ளது இப்பாடல்.
மரத்துக்குப் பொருந்தும் பொருள்: மரத்தில் பிஞ்சு பிடித்திருக்கும். பெருமழை பெய்தால் மரம் தாங்காமல் முறிந்து விழுந்துவிடும். வெயில் மிகுதியாக இருக்கும் நண்பகலில் மரத்தின் இலை, இடுக்குகள் வழியாக சூரியனின் ஒளிக்கதிர்கள் ஊடுருவும்.
பிய்ந்த குடைக்குப் பொருந்தும் பொருள்:
பீற்றல் குடையும் பிய்ந்து (பிஞ்சு என்பது பேச்சு வழக்கு) கிடக்கும். பெரிய மழைக்குத் தாங்காது ஒழுகும். பிய்ந்த குடையின் ஓட்டைகள் வழியாகவும் சூரியனின் கதிர்கள் தெரியும்.
-- தமிழ்மலை
