தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/வள்ளுவருக்குப் பிடித்த ஆமை

வள்ளுவருக்குப் பிடித்த ஆமை

வள்ளுவருக்குப் பிடித்த ஆமை


PUBLISHED ON : செப் 04, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 04, 2017


Follow on Google
அ நிறம் | அளவு

திருக்குறள் அதிகாரப் பெயர்களை அறிவீர்கள். அவற்றுள் பெரும்பான்மையானவை எப்படி இருக்கும் தெரியுமா? ஆமை ஆமை என்று முடியும் தலைப்பில் பெரும்பான்மையானவை இருக்கின்றன. கள்ளாமை, வெஃளாமை, நிலையாமை, இன்னா செய்யாமை, கொல்லாமை, கல்லாமை, அவையஞ்சாமை, பெரியாரைப் பிழையாமை, கள்ளுண்ணாமை, பிரிவாற்றாமை, அழுக்காறாமை, புறங்கூறாமை என்று அதிகாரப் பெயர்கள் இருக்கின்றன.

இப்பெயர்களுக்கு ஒரு சிறப்பு உண்டு. இவை எதிர்மறைப் பொருளைத் தருகின்றன. இவற்றின் நேர்பொருள் அவ்வினையைக் குறிக்கிறது. அதன் எதிர்பொருள் அவ்வினையாற்றாமல் இருக்க வேண்டிய நிலைமையைக் குறிக்கிறது.

கொல் என்பது கொல்கின்ற வினையைச் சொல்வது. அதனைக் கொல்லல், கொலை என்று தொழிற்பெயராக ஆக்குவோம். கொல் என்ற வினை, கொல்வதை மட்டுமே சொல்லுமா? அவ்வினையைச் செய்யாமல் இருப்பதற்கும் அதே வினைச்சொல்லைத்தானே பயன்படுத்த வேண்டும்? ஆம். அவ்வாறுதான் செய்தாக வேண்டும்.

வா என்று சொல்வதற்கு எந்த வினைச்சொல் பயன்படுகிறதோ, அதே வினைச்சொல்தான் வராதே என்று சொல்வதற்கும் பயன்பட வேண்டும். கொல் என்றும் சொல்லலாம். கொல்லாதே என்றும் அதே வினைச் சொல்லைப் பயன்படுத்தி, அவ்வினை நிகழாதும் பார்த்துக் கொள்ளலாம்.

ஒரு வினைச்சொல், அதன் வினைச்செயலைக் குறிக்கும் தொழிற்பெயரும் ஆகும். செய் என்பது வினைச்சொல் என்றால், செய்தல் என்பது அதன் தொழிற்பெயர். கல் என்பது வினைச்சொல் என்றால், கற்றல் என்பது தொழிற்பெயர். அஞ்சு என்பது வினைச்சொல் என்றால், அஞ்சுதல் தொழிற்பெயர். இப்படி ஒவ்வொன்றுக்கும் அதே வினைச்சொல்லைப் பயன்படுத்தி, ஒரு விகுதியைச் சேர்த்து தொழிற்பெயர் ஆக்குகிறோம்.

எப்படிச் செய் என்பதற்கும், செய்யாதே என்பதற்கும் அதே வினைச்சொல்லைக் கொண்டே சொல் ஆக்குகிறோமோ அவ்வாறே தொழிற்பெயரையும் ஆக்கலாம். செய் என்பது செய்தல் என்னும் தொழிற்பெயரும் ஆகும். செய்யாமை என்னும் தொழிற்பெயரும் ஆகும்.

செய்தல் என்பது நேர்மறைப் பொருளைத் தந்ததுபோல், செய்யாமை என்பது அதன் எதிர்மறைப் பொருளைத் தந்தது. செய்யும் வினை அங்கே நிகழாமையைக் குறித்தது.

இவ்வாறு ஒரு வினைச்சொல்லோடு ஆமை என்ற விகுதியைச் சேர்த்தால் அது, “எதிர்மறைத் தொழிற்பெயர்” ஆகிவிடும். ஆமை என்பது எதிர்மறைத் தொழிற்பெயர் விகுதி என்று அறிந்துகொள்ள வேண்டும்.

கட்டளைப் பொருள் தரும் வினைவேருடன் ஆமையைச் சேர்த்தால், எதிர்மறைத் தொழிற்பெயர் கிடைக்கும். அந்தத் தொழில், அந்த வினை நிகழாத நிலைமையை ஒரு பெயர்ச்சொல்லாக, ஆமை என்று முடியும் அச்சொற்கள் குறிக்கின்றன.

“இப்படிச் செய்யாமல் இருக்க வேண்டும், இப்படிச் செய்யாமல் இருந்தால் என்னாகும்” என்பதை உணர்த்தத்தான் திருக்குறள் அதிகாரங்களில் பல எதிர்மறைத் தொழிற்பெயர்களாக இருக்கின்றன. கொல்லாமல் இருக்க வேண்டும் என்பதை உணர்த்த கொல்லாமை.

அவைக்கு அஞ்சக்கூடாது என்பதை உணர்த்த அவையஞ்சாமை. கோபப்படக்கூடாது என்பதை உணர்த்த வெஃளாமை.

- மகுடேசுவரன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us