PUBLISHED ON : மார் 05, 2018

காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூக் காக்கைக்குக் கொக்கொக்க - கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா.
இது காளமேகப் புலவர் எழுதிய பாடல்.
'க' வரிசை எழுத்துகளை மட்டுமே வைத்து, எழுதப்பட்ட பாடல் இது. மொத்தமாகப் படித்தால் புரிவது கடினம். இதையே பிரித்துப் படித்தால், அற்புதமான கருத்து கிடைக்கும்.
காக்கைக்கா காகூகை
காக்கைக்கு ஆகா கூகை
கூகை என்பது ஆந்தை. அதாவது, காக்கையால், ஆந்தையை இரவில் வெல்ல முடியாது. இரவில் ஆந்தைக்கு கண் நன்கு தெரியும். பலமானதும் கூட.
கூகைக்கா காகாக்கை
கூகைக்கு ஆகா காக்கை
ஆந்தைக்கு பகலில் கண் தெரியாது என்பதால், பகலில் காக்கையை வெல்ல முடியாது.
கோக்கு-க்கூக் காக்கைக்கு
கோ என்றால் அரசன். காக்கைக்கு என்றால் காப்பதற்கு!
அரசனின் கைகள்தானே பகைவரிடம் இருந்து காக்கின்றன.
அதாவது, பகைவனிடமிருந்து அரசனைக் காக்கும் கைகளுக்கு!
கொக்கொக்க-
கொக்கு ஒக்க-
கொக்கைப் போல - அதாவது கொக்கைப் போல காத்திருக்கும் தன்மை வேண்டும்.
எதற்கு?
கைக்கைக்கு
பகையை எதிர்த்து
காக்கைக்கு
காப்பதற்கு
கைக்கைக்காகா
கைக்கு ஐக்கு ஆகா
ஐ என்றால் தலைவன்.
ஐ-யின் கைகளுக்கும் ஆகா.
தலைவனால் ஆகாமல்/இயலாமல் போய்விடும்.
'வலிமையான ஆந்தையால், காகத்தை பகலில் வெல்ல முடியாது. காகத்தால், ஆந்தையை இரவில் வெல்ல முடியாது. அதைப்போலவே, கொக்கைப் போல, உரிய காலம் கருதிச் செயற்படாவிட்டால், எவ்வளவு திறமையுள்ள தலைவனாலும், பகைவரிடமிருந்து காத்துக் கொள்ள முடியாது' என்பதுதான் இப்பாடலின் பொருள்.
க வரிசையைப் போலவே, வேறு எழுத்துகளின் வரிசையிலும் இதுபோன்ற சுவையான தனிப்பாடல்களை எழுதியுள்ளார் காளமேகம்.

