PUBLISHED ON : ஏப் 25, 2016

'ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு' (திருக்குறள்: 1038)
வயலை உழுவதைக் காட்டிலும் உரம் இடுதல் நல்லது; களை எடுப்பதும், நீர் பாய்ச்சுவதும் மிகவும் நல்லது. பயிர்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுவது விவசாயத்தில் மிகவும் முக்கியமான பணி. ஆனால், பயிர்களுக்குச் சென்று சேரும் முன் பல்வேறு நிலைகளில் தண்ணீர் வீணாகிறது. இதைத் தடுத்து, தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி விவசாயம் செய்வதில் நுண் நீர்ப் பாசன முறைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
சொட்டுநீர்ப் பாசனம் (Drip Irrigation): இது ஒரு சிறந்த அறிவியல் முறைப்பாசனம். சரியான அளவு நீரை, சீரான இடைவெளியில் பயிர்களின் வேருக்கு அருகில் தேவைக்கேற்ப பாய்ச்சும் முறை. பயிர்க்காலம் முழுவதும் குறைந்த அழுத்தம் கொண்ட பெரிய மற்றும் சிறிய பக்கக் குழாய்களின் வழியாக, சொட்டுச் சொட்டாக நீர் செலுத்தப்படுகிறது. இந்த முறையில் தோட்டத்தின் ஈரப்பதம் ஒரே அளவில் இருப்பதால் பயிர்கள் சீராகவும் விரைவாகவும் வளர்கின்றன. காய்கறிகள், பூக்கள், தென்னை, கரும்பு, மாம்பழம், கொய்யா போன்ற பயிர்களுக்கு ஏற்ற பாசன முறை இது.
தெளிப்புநீர்ப் பாசனம் (Sprinkler Irrigation): மழை பெய்வதுபோலப் பயிர்களுக்கு நீரை வழங்கும் பாசனமுறை. மின் மோட்டார் உதவியுடன் நெடுங்குழாய் மற்றும் தெளிப்பான்கள் வழியாக வயல் முழுவதும் நீர் தெளிக்கப்படுகிறது.
இவ்வாறு தெளிக்கப்படும் நீர் சிறு சிறு துளிகளாக மாறி நிலத்தில் விழும். பல்வேறு திறன் கொண்ட தெளிப்பான்கள் கிடைப்பதால் எல்லாவிதமான நிலங்களுக்கும் ஏற்றது. கோதுமை, கொண்டைக்கடலை, காய்கறிகள், பருத்தி, சோயா, தேயிலை, காப்பி, தீவனப்பயிர்கள் போன்ற பயிர்களுக்கு ஏற்ற பாசன முறை இது.
