PUBLISHED ON : டிச 11, 2017

''மதன், இங்கே வா'' என்று அழைத்தார் தமிழாசிரியர். ''நம்ம பள்ளி நூலகத்துக்கு என்னென்ன புத்தகங்கள் வாங்கணும்ன்னு மாணவர்கள்கிட்டே பேசி, ஒரு பட்டியல் தயாரிக்கச் சொன்னேனே, செஞ்சுட்டியா?'' என்றார்
''இன்னும் இல்லைங்கய்யா'' என்றான் மதன்.
''ஏன்? என்னாச்சு?''
மதன் கொஞ்சம் தயங்கினான், ''அது வந்து...'' என்று இழுத்தான்.
''என்ன பிரச்னை மதன்? எதுவானாலும் தயங்காம சொல்லு!''
''ஐயா, நீங்க இந்தப் பணியை நாலு பசங்ககிட்ட ஒப்படைச்சிருந்தீங்க, நாங்க நாலுபேரும் ஒண்ணாச் சேர்ந்து வேலைசெய்யணும்ன்னு சொன்னீங்க.''
''ஆமா, அதுக்கென்ன?''
''அங்கேதான்ங்கய்யா பிரச்னை'' என்றான் மதன். ''நீங்க தேர்ந்தெடுத்த நாலு பேருக்கும் ஒத்துப்போகலை. ஒவ்வொருத்தரும் ஒவ்வொருவிதமா இருக்கோம். எனக்கு மத்த மூணுபேரையும் பிடிக்கலை, மத்த மூணுபேருக்கும் என்னைப் பிடிக்கலை, அதனால வேலையும் ஒழுங்கா நடக்கலை.''
ஆசிரியர் சிரித்தார், ''உன்னைத் தவிர இந்தக் குழுவுல இருக்கிற மத்த மூணுபேரும் கெட்ட பசங்கன்னு நீ நினைக்கறியா?''
''சேச்சே, நான் அப்படிச் சொல்லலைங்கய்யா, ஆனா, சில விஷயங்கள்ல அவங்க நடந்துக்கற விதம் எனக்குப் பிடிக்கலை.''
''காரணம், அவங்க உன்னை மாதிரி நடந்துக்கலை. வேற மாதிரி வித்தியாசமா நடந்துக்கறாங்க. அப்படித்தானே?''
''ஆமாங்கய்யா.''
''அதேசமயம், அவங்களுக்கும் உன்னைப் பிடிக்கலை, ஏன்னா, அவங்க நினைக்கற மாதிரி நீ நடந்துக்கலை. அதுவும் உண்மைதானே?''
மதன் பதில் சொல்லாமல் தலையைக் குனிந்து கொண்டான். ஆசிரியர் புரிந்துகொண்டதுபோல், அவனைத் தட்டிக்கொடுத்தார். ''பரவாயில்லை, இது ஓர் இயல்பான விஷயம்தான், இதை நினைச்சு வருத்தப்படவேண்டியதில்லை'' என்றார்.
''எந்த ரெண்டு மனுஷங்களும் ஒரே மாதிரி இருக்கறதில்லை. வெவ்வேற பழக்கவழக்கங்கள், சிந்தனைகள், செயல்கள்ன்னு ஒருத்தருக்கொருத்தர் வெவ்வேறவிதமாதான் இருக்கோம். அதுமாதிரி வேறுபாடுகள்தான் உலகத்தோட தன்மை. அதுதான் இந்த உலகத்தையே சுவையாக்குது.''
''ஆனா நாம என்ன நினைக்கறோம்? நாம நடந்துக்கற விதம்தான் சரி, மத்தவங்க நடந்துக்கற விதமெல்லாம் தப்புன்னு நினைச்சுக்கறோம். அவங்க வேறவிதமா நடந்துக்கறதால, அவங்கமேல கோவப்படறோம், அவங்களோட சேர்ந்து வேலைசெய்யறது நமக்குப் பிடிக்கிறதில்லை.''
''இப்போ, நீயும் மத்த மூணு பசங்களும் ஒருத்தரோட ஒருத்தர் சேர்ந்து வேலைசெய்யத் தயங்கறதாலே யாருக்கு இழப்பு? நம்ம பள்ளிக்குத்தானே? நம்ம நூலகத்துக்குத்தானே?''
''இந்த மாதிரி ஒரு பொது விஷயம்ன்னு வந்துட்டா, நாம எலலோரோடும் இணைந்து பணியாற்றத் தயாரா இருக்கணும். மத்தவங்ககிட்ட இருக்கிற வேற்றுமைகளைப் பார்த்து விலகக்கூடாது. அப்படி விலகினா, எந்த நல்ல காரியமும் நடக்காது. இதை நான் சொல்லலை, மு. வரதராசனார் சொல்றார்.''
''புரிஞ்சதுங்கய்யா'' என்று தலையாட்டினான் மதன். ''நான் உடனே அந்தப் பசங்களோட பேசறேன், இதை விளக்கிச் சொல்றேன், நாங்க எங்களோட வேற்றுமைகளையெல்லாம் மறந்து, நம்ம பள்ளிக்காக ஒண்ணா வேலைசெய்வோம்.'' என்றான்.
''நல்லது'' என்று முறுவலித்தார் ஆசிரியர்.
என்.சொக்கன்
