PUBLISHED ON : மார் 26, 2018

பல்வேறு வரலாற்றுச் செப்பேடுகள், நாணயங்கள், ஓலைச்சுவடிகள், மண்பானைகள், பறவைகள், விலங்குகள் என்று பல அரிய தகவல்களைச் சேமித்து வைக்கும் இடமாக அருங்காட்சியங்கள் இருக்கின்றன.
சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் தொல்பொருளியல், மானிடவியல், தாவரவியல், நாணயவியல், கலை, விலங்கியல், புவியமைப்பியல், குழந்தைகள் அருங்காட்சியகம், வேதியியல் பாதுகாப்பு ஆகிய பிரிவுகளில் பொருட்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.
தொல்லியல் [Archeology] என்பது, பழங்காலக் கட்டடக்கலை, தொல்பொருட்கள், தொல்லுயிர் எச்சம், மனித உடலின் மிச்சங்கள், நிலத் தோற்றங்கள் உள்ளிட்ட பொருட்கள் பற்றியது.
மானிடவியல் (Anthropology) என்பது, கடந்த காலத்திலிருந்து நிகழ்காலம் வரை உள்ள மனித இனத்தின் சமூக, பண்பாட்டு நிலை மற்றும் உயிரியல் நிலை பற்றியதாகும்.
கலை [Art] என்பது, மனித இனத்தின் நுட்பமான திறமையை உள்ளடக்கியது. மனிதனின் கற்பனை வளத்தின் வெளிப்பாடாகும். பிற உயிரினங்களிலிருந்து மனிதனைத் தனித்துக்காட்டுவதில் கலை முக்கிய பங்கு வகிக்கிறது.
நாணயவியல் [Numismatics] என்பது, பழங்கால நாணயங்கள் முத்திரைகள் பற்றியது.
சென்னை அருங்காட்சியகத்தின் உள்ளே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, சேர, சோழ, பல்லவ மன்னர்கள் காலங்களில் உருவாக்கப்பட்ட சிலைகள், சிற்பங்களைக் காணலாம்.
மேல் தளத்தில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட கல்வெட்டுகள், பவளப்பாறைகள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. தமிழ் எழுத்துகள் வடிவம் பெற்ற விதங்கள் இடம்பெற்றுள்ளன.
விலங்கினங்களின் எலும்புக் கூடுகள், மிகப் பெரிய திமிங்கிலத்தின் எலும்புக்கூடு முதலியன உள்ளன. டைனோசர் ஒன்று உயிருள்ளதைப் போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
மானிடவியல் பகுதியில் வைக்கப்பட்டுள்ள போர்க் கருவிகள், தமிழர்களின் வீரத்தைப் பறைசாற்றுகின்றன. பழங்கால இசைக் கருவிகளும் இடம்பெற்றுள்ளன.
படிமக் கூடத்தில் வெண்கலச் சிற்பங்கள் உள்ளன. கி.பி. 9 முதல் 16ஆம் நூற்றாண்டு வரையிலான சிலைகள், கண்ணாடிப் பெட்டிக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. மன்னர்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயங்களும் உள்ளன.
சிறுவர் அருங்காட்சியகத்தில், சிறுவர்களை மகிழ்விக்க பல்வேறு பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. சிறுவர்கள் அறிவியல், தொழில்நுட்பத்தின் சிறப்புகளை அறிந்து கொள்வதற்காக, அறிவியல் விளையாட்டுச் சாதனங்களுடன் விளையாட்டுப் பூங்காவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தேசிய ஓவியக் காட்சிக்கூடக் கட்டடம் உள்ளது. அங்கே அனைத்து வகையான ஓவியங்களையும் காணலாம்.
அருங்காட்சியகத்தை முழுவதும் சுற்றிப் பார்த்துவிட்டுத் திரும்பும்போது, சுமார் மூவாயிரம் ஆண்டுகளை, மூன்று மணி நேரத்தில் கடந்து வந்த பிரமிப்பு ஏற்படும்
- த.சங்கர்

