PUBLISHED ON : மார் 26, 2018

''பண்டைய இந்தியாவிலும், பாரசீகத்திலும் மிகப்பெரிய எண்களை அறிமுகப்படுத்தும் கேளிக்கைப் புதிர்கள் பல இருந்துள்ளன. பெரிய எண்களைப் பற்றிய பயம் அந்தச் சமூக மக்களிடம் இல்லை என்பதை இந்தக் கதைகள் தெரிவிக்கின்றன.' என்று விளக்கத் தொடங்கினார் பெனாய்ட் ரிட்டாட் (Benoit Rittaud).
இவர் ஒரு பிரெஞ்சுக் கணிதவியலாளர். எண்ணியலில் (Number Theory) முக்கிய பங்களிப்புகளைச் செய்து வருகிறார். கடந்த திங்கட்கிழமை சென்னையில், பை கணித மன்றத்தின் நிறுவனர், இரா. சிவராமன் எழுதிய 'Cracking Crimes' நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, கணிதத்திலும், நிஜவாழ்விலும் மிகப்பெரிய எண்கள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதைப் பற்றி அவரது உரை அமைந்தது.
ஒரு சதுரங்கப் பலகையின் முதல் கட்டத்தில் ஒரு கோதுமை மணியை வைக்க வேண்டும். இரண்டாம் கட்டத்தில் ஏற்கெனவே வைத்த அளவை இரட்டிப்பாக்கி இரண்டு மணிகளை வைக்க வேண்டும். இப்படியே ஒவ்வொரு கட்டத்திலும் இரட்டிப்பாக்கி, இறுதியில் 64ஆம் கட்டம்வரை கோதுமை மணிகளை இரட்டிப்பாக்க வேண்டும்.
இப்படிச் செய்தால், 64ஆம் கட்டத்தில்
264 - 1 = 1,84,46,74,40,73,70,95,51,616 - 1
கோதுமை மணிகள் இருக்கும். இந்தப் புதிருடன் தனது உரையைத் தொடங்கி, பெரிய எண்களைப் பற்றி விளக்கமளித்தார்.
'மடங்குகளில் அதிகரிக்கும் எண்கள் பற்றிய சிந்தனை, 16ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு, கேளிக்கை கணிதத்தில் இருந்து கணிதவியலுக்குள் நுழையத் தொடங்கியது. 17ஆம் நூற்றாண்டு, கனடாவில், பிரெஞ்சுக்காரர்கள் வசித்த பிரெஞ்சு கனடாவிற்கும், ஆங்கிலேயர்கள் வசித்த பிரிட்டிஷ் கனடாவிற்கும் இடையே மோதல்கள் வலுத்தன.
தங்களுடைய மக்கட்தொகை குறிப்பிட்ட வேகத்தில் வளர்ந்தால்தான், பிரிட்டிஷ் ஆதிக்கத்தை வெல்ல முடியும் என்று பிரெஞ்சுக்காரர்கள் நினைத்தார்கள். ஒவ்வோராண்டும் இவ்வளவு மடங்கு அதிகரித்தால் 2000ஆம் ஆண்டில் பிரெஞ்சுக் கனடாவில் இவ்வளவு மக்கள் இருப்பார்கள் எனக் கணித அடிப்படையில் அவர்கள் கணித்து வைத்தார்கள்.
1976ஆம் ஆண்டில் எவ்வளவு மக்கட்தொகை இருக்கும் என்ற அவர்களது கணிப்பு, 1976ஆம் ஆண்டின் மக்கட்தொகைக் கணக்கெடுப்புடன் மிகச்சரியாக ஒத்துப்போனது.”
இப்படி, ஆச்சரியப்பட வைக்கும் தகவல்கள் மூலம் மக்கட்தொகை, உற்பத்தி சார்ந்த விஷயங்களில் பெரிய எண்கள் வகிக்கும் பங்கை மிக எளிமையாக விளக்கினார் ரிட்டாட். அதுவும், ஒரு கேளிக்கைக் கலைஞருக்கு உரிய சுவாரசியமான பாணியில்!

