PUBLISHED ON : செப் 23, 2019

உலகெங்கும் பாம்புக்கடி பற்றி, போதிய விழிப்புணர்வு இல்லை. பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமலேயே பலர் இறக்கின்றனர். இதற்காகவே, ஆண்டுதோறும் செப்டம்பர் 19ஆம் தேதி சர்வதேச பாம்புக்கடி விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
பாம்பு கடித்தால் செய்ய வேண்டியவை:
1. பதற்றம் ஆகாமல் நிதானமாக இருக்க வேண்டும். ஏனெனில், பாம்புக்கடி என்பது மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கக் கூடியதுதான்.
2. பாம்பு கடித்தால், உடனடியாக அருகில் இருப்பவர்களை உதவிக்கு அழைக்கவும். நாமாகவே ஓடிச்செல்ல முயற்சிக்கக் கூடாது. அவ்வாறு செய்தால் இதயத்துடிப்பு கூடுவதோடு, விஷம் உடலில் வேகமாகப் பரவும்.
3. சுயமாக முதலுதவி செய்ய அதிக நேரம் கடத்தக்கூடாது.
4. காலம் கடத்தாமல் விரைவாக பாம்புக்கடி விஷமுறிவு மருந்து கொடுக்கப்படும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவும்.
5. கடிபட்ட நபருக்கு, கடிபட்ட இடத்தில், வீக்கமோ, இரத்தக் கசிவோ, வாந்தி, மயக்கம், தலைசுற்றல் போன்ற அறிகுறிகள் தோன்றினால், மருத்துவரிடம் தெரிவிக்கவும். இந்த அறிகுறிகள் இருந்தால், அது விஷப்பாம்புக் கடியாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.
செய்யக் கூடாதவை:
1. முதலுதவி செய்வதாகக்கூறி, கடிபட்ட இடத்தை அறுக்கவோ அல்லது வாய் வைத்து உறிஞ்சித் துப்பவோ கூடாது. அவ்வாறு செய்தால், விஷம் வேகமாகப் பரவுவதோடு, உதவுபவருக்கே ஆபத்து நேரலாம்.
2. கைவைத்தியம் செய்பவர்களிடம் செல்லாதீர்கள்.
3. கடிபட்ட இடத்தை விட்டு, இரத்த ஓட்டத்தை நிறுத்தும் வகையில் கயிறு கட்டக் கூடாது. கயிற்றை இறுக்கமாகக் கட்டும்போது, இரத்த ஓட்டம் தடைபடும். இதனால், விஷம் வேகமாக திசுக்களை அழுக வைக்கும்.
4. கடிபட்ட இடத்தில் அணிகலன்கள் இருப்பின் (மோதிரம், வளையல், கொலுசு, கை கடிகாரம், கயிறுகள்) அகற்றவும். விஷக்கடி ஏற்பட்ட இடத்தில் வீக்கம் ஏற்படலாம். அதனால் அணிகலன்களால் கூடுதல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. எல்லா அரசு மருத்துவமனை/கல்லூரி ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பாம்பு விஷமுறிவு மருந்து, இலவசமாக வழங்கப்படுகிறது.
- ந.ச.மனோஜ்
www.user.org.in
