PUBLISHED ON : டிச 10, 2018

எழுத்து என்பது ஒலியைக் குறித்து வைக்கப் பயன்படும் வரி வடிவம். அ என்று நாம் சொல்வதைத்தான் எழுத்தில் குறித்து வைக்கிறோம். ஒன்றோ, ஒன்றுக்கும் மேற்பட்ட எழுத்துகளோ சேர்ந்து வருவதால் தோன்றுவது சொல்.
அம்மா என்பது ஒரு சொல். அம்மா என்ற சொல்லில் அ, ம், மா ஆகிய மூன்று எழுத்துகள் சேர்ந்து வந்தன. ஆ என்பதும் ஓர் எழுத்துத்தான். ஆ என்பது பசு என்னும் பொருளில் பயிலும் ஓரெழுத்துச் சொல்லும் ஆகும். ஓர் எழுத்தே சொல்லாகவும் பயில்வது ஓரெழுத்து ஒருமொழி எனப்படும். ஓர் எழுத்தோ ஒன்றுக்கும் மேற்பட்ட எழுத்துகளோ சேர்ந்து ஒரு சொல்லை உருவாக்குகின்றன.
'அம்மா பாடினாள்' என்னும்போது இரண்டு சொற்களும் ஒன்றாக வந்துவிட்டன. அம்மா என்ற சொல்லும் பாடினாள் என்ற சொல்லும் தனித்தனிச் சொற்கள். அம்மா என்பது ஒருவரைக் குறிக்கும் பொருளில் வந்தது. பாடினாள் என்பது, ஒரு செயலைச் செய்து முடித்த பொருளில் வந்தது. அவ்விரண்டு சொற்களும் அடுத்தடுத்துத் தொடர்ந்து வந்து, உணர்த்த வேண்டிய பொருளை முழுமையாக உணர்த்தின. இவ்வாறு இரண்டு சொற்கள் சேர்ந்து வருவது சொற்றொடர் எனப்படும். சொல் + தொடர் = சொற்றொடர். சொற்களின் தொடர் வரிசை. சொற்றொடரைத்தான் வாக்கியம் என்றும் சொல்கிறோம்.
இலக்கணத்தில் வாக்கியம் என்பதனை விடவும் தொடர் என்றே பெரிதும் பயன்படுத்துகிறார்கள். அதனால் தொடர் என்றே நாமும் பயன்படுத்துவோம். தொடர் என்பது சொற்றொடர்தான்.
இரண்டு சொற்கள் சேர்ந்து வந்தால் அதனைத் தொடர் என்று கூறவேண்டும். இரண்டு சொற்களுக்கிடையே வலிமிகுமா, மிகாதா என்பதைத்தான் நாம் பார்க்கவேண்டும். அப்படியானால் ஒரு தொடரில் வலிமிகுமா மிகாதா என்பதைப் பார்த்தால் போதும்தானே? இரண்டும் ஒன்றுதானே? ஆம். இரண்டு சொற்களுக்கிடையே வலிமிகுமா, மிகாதா என்று பார்ப்பதும் ஒரு தொடரில் வலிமிகுமா மிகாதா என்று பார்ப்பதும் ஒன்றுதான்.
'அம்மா பாடினாள்' என்பது சொற்றொடர். 'அம்மா பாடலைப் பாடினாள்' என்பதும் சொற்றொடர்தான்.
'அம்மா பாடினாள்' என்றபோது வலிமிகவில்லை. ஏனென்றால் அது எழுவாய்த் தொடர். எழுவாய்த் தொடருக்கு வலிமிகாது என்று முந்திய பகுதியில் பார்த்தோம்.
'பாடலைப் பாடினாள்” என்ற தொடருக்கு வலிமிகுந்தது. இங்கே எப்படி இரண்டு சொற்களுடையே வலிமிகுந்தது? ஏனென்றால் 'பாடலைப் பாடினாள்' என்பது 'இரண்டாம் வேற்றுமைத் தொடர்'. ஐ என்னும் வேற்றுமை உருபு, பாடல் என்ற சொல்லோடு ஒட்டி வந்தது. இரண்டாம் வேற்றுமைத் தொடருக்கு வலிமிகும் என்பது நமக்குத் தெரிந்திருந்தால் போதும், அங்கே மறக்காமல் வலிமிகுவிப்போம்.
- மகுடேசுவரன்
