PUBLISHED ON : ஆக 01, 2016

உலகின் சிறந்த கண்டுபிடிப்புகள் எல்லாம் தற்செயலாக நிகழும் என்பது என்னுடைய வாழ்விலும் நிஜமானது. அப்படி நான் கண்டுபிடித்த ஒன்று எண்ணற்ற மக்களின் உயிரைக் காக்கிறது என்பதுதான் எனக்குக் கிடைத்த மிகப் பெரியசந்தோஷம்!
நான் பிறந்து வளர்ந்த நாடு ஸ்காட்லாந்து. இளம் வயதில் தந்தையை இழந்து, வறுமையான சூழலில் படித்து வந்தேன். பாலிடெக்னிக் படிப்பை முடித்தபிறகு 16 வயதில் கப்பல் நிறுவனம் ஒன்றில் அலுவலராகப் பணியாற்றினேன். அந்த வேலை எனக்குப் பிடிக்காமல் உறவினர் ஒருவரின் உதவியால், மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தேன்.
மருத்துவப் படிப்பை முடித்த பிறகு, நோய்க் கிருமிகளுக்கு எதிரான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த ஆல்ம்ராத் ரைட் என்பவருக்கு உதவியாளரானேன். அங்கே, டைபாய்டு நோய்க்குத் தடுப்பூசி போடும் முறையைக் கண்டறிந்து, மருத்துவத் துறையில் பேராசிரியர் பொறுப்பிலும் இருந்தேன். 'லைசோசோம்' என்னும் நச்சு முறிபொருள் நோய்களைத் தடுப்பதையும் வெள்ளை அணுக்களுக்கு அதில் உள்ள பங்கு பற்றியும் விவரித்து முதல் உலகப்போரில் காயமடைந்த வீரர்களுக்கு உதவினேன்.
நுண்ணுயிர்கள் வளர்க்கப்பட்ட ஒரு தட்டை மூடாமல் சென்றுவிட்டார் என் ஆய்வக உதவியாளர். மறுநாள் அதை நோக்கிய போது, லைசோசோம் செய்யாத ஒரு செயலைக் காளான் செய்திருந்தது. கொப்புளங்கள், கட்டிகள், மூக்கு, தொண்டை, தோல் இவற்றில் ஏற்படும் தொற்றுநோய்களை வரவழைக்கும் 'ஸ்டபைலோகாக்ஸி' எனப்படும் கிருமிகளைக் காளான் அழித்திருந்தது. அது மட்டுமல்ல, அந்தக் காளான் வெள்ளை அணுக்களை அழிக்கவில்லை என்றும் வேறு திசுக்களைப் பாதிக்கவில்லை என்றும் தெரிந்துகொண்டேன். காளானில் பரவிய அந்தப் பொருளுக்கு 'பென்சிலின்' எனப் பெயர் வைத்தேன். தற்செயலாக, 1928ஆம் ஆண்டில் கண்டுபிடித்த இந்த மருந்தை பெரிய அளவில் என்னால் உற்பத்தி செய்ய முடியவில்லை. ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஹோவர்டு ஃப்ளோரே, எர்னஸ்ட் செயின் ஆகியோர் 14 ஆண்டுகள் கழித்து அதைச் சாதித்தார்கள். அதற்குப் பிறகு, 1945ஆம் ஆண்டில் எங்கள் மூவருக்கும் மருத்துவத்திற்கான நோபல் பரிசு கிடைத்தது. பெனிசிலினை, கடந்த ஆயிரமாண்டு காலத்தின் சிறந்த கண்டுபிடிப்பாக ஸ்வீடன் பத்திரிகைகள் 2000ல் அறிவித்தன.
அலெக்ஸாண்டர் ஃப்ளெமிங்
பிறப்பு: ஆகஸ்ட் 6, 1881
மறைவு: மார்ச் 11, 1955
