PUBLISHED ON : அக் 19, 2016

பிரிட்டன் பிரதமராக இருப்பவர் தெரசா மே. இவர் அந்த நாட்டின் பிரதமராக இந்த வருடம் ஜூலையில் பதவி ஏற்றார். அவருக்கு முன் டேவிட் கேமரூன் பதவியில் இருந்தார்.
யூரோப்பியன் யூனியன் எனப்படும் ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் விலகக் கூடாது என்றார் அப்போதைய பிரதமர் கேமரூன். விலக வேண்டும் என்று கருத்து தெரிவித்தார் தெரசா மே. அதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 48.11 சதவீதம் மக்கள் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருக்க வேண்டும் என்றும், 51.89 சதவீதம் பேர் வெளியேறுவோமென்றும் வாக்களித்தார்கள். இதனால் கேமரூன் பதவி விலகினார். தெரசா மே பிரதமராக பதவி ஏற்றார்.
இவர், இங்கிலாந்தின் இரண்டாவது பெண் பிரதமர். இதற்கு முன், மார்க்கரெட் தாட்சர் மட்டுமே, பெண் பிரதமர் என்ற பெருமைக்கு உரியவராக இருந்தார்.
பிரதமராக பதவி ஏற்ற தெரசா மே, தனது தலைமையிலான அரசாங்கம், ஏழைகள், பெண்கள், சிறுபான்மை இனத்தவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக பாடுபடும் என்றார்.
இங்கிலாந்தில், அக்டோபர் 1, 1956ல் பிறந்த தெரசா 1977 முதல் 1983 வரை வங்கி ஒன்றில் பணியாற்றினார். பிறகு அரசியலில் ஈடுபட்டார். 1992, 1994 இரண்டு முறை, அவர் நாடாளு மன்றத்தேர்தலில் நின்று தோற்றுப்போனார். ஆனாலும் மனம் சோர்ந்து விடவில்லை. அடுத்து வந்த, 1997 தேர்தலில் அவர் வென்றார். பிறகு அந்த நாட்டு அரசில், பல்வேறு பதவிகளை வகித்தார், கடந்த ஜூலை 13 ல் இங்கிலாந்து பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர் நவம்பர் 6 ஆம் தேதி, இந்தியா வருகிறார். டெல்லியில், இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை சார்பில் நடத்தப்படும் மாநாட்டில் கலந்து கொள்கிறார். இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திரமோடியும் பங்கேற்கிறார்.

