PUBLISHED ON : டிச 10, 2018

தமிழில் சுவையான பழமொழிகள் எண்ணற்றவை இருக்கின்றன. நாம் கற்றறிந்த பழமொழிகளைத் தவிர, மக்களின் பேச்சு வழக்கிலும் அரிய பழமொழிகள் கலந்திருக்கின்றன. பழமொழிகள் மக்களிடமிருந்தே தோன்றின. பாமர மக்கள் தம் பாடுகளையும் அறிவுக்கூர்மையும் ஏற்றிக்கூறிய தொடர்கள்தாம் பழமொழிகளாயின. பிற்காலத்தில் அப்பழமொழிகளைக் கற்றறிந்த புலவர்கள் தாம் எழுதிய செய்யுள்களில் எடுத்தாண்டனர்.
எடுத்துக்காட்டாக, மக்களிடம் வழங்கப்படும் பழமொழி ஒன்றைப் பாருங்கள்.
“கூத்தாடி கிழக்கே பார்ப்பான், கூலிக்காரன் மேற்கே பார்ப்பான்”
இந்தப் பழமொழியை நாம் கேள்விப்பட்டிருக்கமாட்டோம். இதன் பொருளும் எடுத்த எடுப்பில் நமக்கு விளங்கவில்லை.
கூத்தாடி ஏன் கிழக்கே பார்க்க வேண்டும்?
கூலிக்காரன் ஏன் மேற்கே பார்க்க வேண்டும் ?
மக்கள் உருவாக்கும் பழமொழித்தொடர்கள் எளிதில் விளங்கத்தக்க வகையில் இருக்க வேண்டுமே. இத்தொடரில் ஒன்றும் பிடிபடவில்லையே.
இந்தப் பழமொழியைச் சொன்ன தாத்தாவிடமே இதற்குரிய விளக்கத்தையும் கேட்ட போது அவர் கூறியது வியக்க வைத்தது.
கூத்தாடிகள் கூத்துக் கட்டுபவர்கள். கூத்துகள் இரவில் நடப்பவை. திருவிழாக்களில் முன்னிரவில் ஆடத்தொடங்கிய கூத்தினை விடிகாலை நேரத்தில் முடிப்பார்கள். அதனால் கூத்தாடிக்கொண்டிருப்பவர்கள் எப்போது விடியும் என்று கிழக்கு வானத்தினைப் பார்த்துக்கொண்டே இருப்பார்கள். கிழக்கே வெளுக்கத் தொடங்கியதும் கூத்தினை முடித்துக்கொள்வார்கள். அதனால் எப்போது விடியும் என்று கூத்தாடி கிழக்கே பார்ப்பான்
கூலிக்கு வேலைக்கு வந்தவர்கள் காலையில் வேலையைத் தொடங்கி மாலையில் முடிப்பவர்கள். அவர்களுக்குப் பொழுது இறங்கினால்தான் வேலை முடியும். அதனால் எப்போது மாலை ஆகும், பொழுது இறங்கும் என்று மேற்கு வானத்தைப் பார்த்துக் கொண்டே இருப்பார்கள். அதனால்தான் கூலிக்காரன் மேற்கே பார்ப்பான் என்றார்கள்.
எப்போது வேலை முடிந்து வீட்டுக்குச் செல்லலாம் என்ற ஆர்வத்தில் கூத்தாடி கிழக்கே பார்ப்பான், கூலிக்காரன் மேற்கே பார்ப்பான்.
இப்போது இந்தப் பழமொழியின் பொருள் அழகு விளங்குகிறதா?
- தமிழ் மலை
