PUBLISHED ON : செப் 03, 2018

பெண்களை வர்ணித்துச் சிறப்பிக்கும் பல சொற்களில் ஒன்று, 'பாவை'.
இளம்பெண்கள் மார்கழி மாதத்தில் அதிகாலையில் இறைவனை வழிபடுவதைப் 'பாவை நோன்பு' என்பர்.
பாவை நோன்பின்போது, பெண்கள் பாடுவதாகப் பல தமிழ் இலக்கியங்கள் எழுதப்பட்டுள்ளன, அவற்றுள் குறிப்பிடத்தக்கவை, ஆண்டாள் எழுதிய திருப்பாவை, மாணிக்கவாசகர் எழுதிய திருவெம்பாவை.
இப்பாடல்கள் அனைத்தும் 'பாவாய்' என்று முடிவதைப் பார்க்கலாம். 'பாவை' என்பதை விளிக்கும்போது (அதாவது, 'பாவையே' என்று அழைக்கும்போது) அச்சொல் 'பாவாய்' என்று மாறும். 'அன்னை' என்பது 'அன்னாய்' எனவும், 'தங்கை' என்பது 'தங்காய்' எனவும் மாறுவதைப்போல.
ஆண்டாள் திருப்பாவையில், முப்பது பாடல்கள் அமைந்துள்ளன. முதலில், ஆண்டாள் திருமாலுடைய பெருமைகளைச் சொல்லிப் பெண்களை நீராட அழைக்கிறார். அப்பாடலில் பாவை நோன்பின் முறைகளைச் சொல்கிறார்:
* இறைவன் திருவடிகளைப் பாடுதல்
* நெய், பால் உண்ணாதிருத்தல்
* அதிகாலையில் நீராடுதல்
* தவறான செயல்களைச் செய்யாதிருத்தல்
* பிறரைப்பற்றி வம்பு பேசாதிருத்தல்
* வறுமையில் உள்ளோருக்கு வேண்டியவற்றை வழங்குதல்
இவ்வாறு பாவை நோன்பிருந்தால் என்ன நன்மை?
நாட்டில் மாதம் மூன்று முறை மழைபொழியும், செல்வம் நிறையும் என்கிறார், ஆண்டாள்.
திருமாலுடைய பெருமைகளைப் பாடியபடி, தூங்கிக் கொண்டிருக்கும் மற்ற பெண்களையும் வழிபாட்டுக்காக அழைக்கிறார்.
பிறகு, திருமாலைப் போற்றி வணங்குகிறார்கள். தாங்கள் விரும்பும் வரத்தைக் கேட்கிறார்கள்.
அந்த வரம், பொன்னோ பொருளோ புகழோ இல்லை. என்றென்றும் இறைவனின் அடியாராக வாழவேண்டும், அவருக்குத் தொண்டு செய்யவேண்டும், மற்ற ஆசைகளை விடவேண்டும், எண்ணியபடி வாழவேண்டும்! இதுதான் அவர்களின் வேண்டுதல்.
பயிற்சிக்கு
1. பாவை நோன்பின்போது .............................மாதத்தில் அதிகாலையில் இறைவனை வழிபடுவார்கள்.
(தை, மார்கழி )
2. திருப்பாவை, திருவெம்பாவை இரண்டும் ...........................என்று முடியும் (பாவாய், அன்னாய்)
3. ஆண்டாள் பாடிய திருப்பாவை பாடல்கள் மொத்தம்.....................(30, 31)
4. மாணிக்க வாசகர் எழுதிய நூல்..................................(திருவெம்பாவை, திருவருட்பா)
ராஜேஷ்வர்
