
இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக பயன்பட்டு வரும் ஓர் உணவுப்பொருள், தயிர். ஒவ்வொரு இந்தியக் குடும்பத்திலும் தயிர் இல்லாமல் அன்றைய நாள் நகராது. இந்தியா முழுவதிலும் தயிர் பயன்பாட்டில் இருந்தது என்பதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன. கி.மு.1000 ஆண்டுகளுக்கு முன், விருந்துகளில் ஏழாவது உணவாகத் தயிர் பரிமாறப்பட்டது.
தயிர் என்பது உடனே பயன்படுத்தி முடித்துவிடும் பொருள் இல்லை. எனவே, பண்டைய காலத்தில் தயிரைப் பாதுகாக்க தோலினால் ஆன பைகளைப் பயன்படுத்தினர். முதன்முதலில் பார்லியோடு, தயிரைச் சேர்த்துச் சாப்பிடும் கலாசாரம் இருந்தது. அதன்பின், அரிசி உணவோடு தயிரைச் சேர்த்து உண்ணும் பழக்கம் வந்தது.
இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும், வெவ்வேறு மாதிரியாகத் தயிரை உண்டு வந்திருக்கின்றனர். வடக்கில், தயிரை வைத்து சூப் தயாரித்துச் சாப்பிடுவது, தயிரில் கடுகு தாளித்துச் சேர்த்துச் சாப்பிடுவது போன்ற பழக்கங்கள் இருந்ததாக வரலாறுகள் தெரிவிக்கின்றன.
பண்டைய காலத் தமிழ் இலக்கியங்களில் தயிர் பற்றிய குறிப்புகள் நிறைய இருக்கின்றன. கடைந்த தயிருடன் மிளகு, பட்டை, இஞ்சி, வெள்ளரிக்காய், முள்ளங்கி, வெங்காயம் போன்றவற்றைச் சேர்த்து, பச்சடியாகத் தயாரிக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. நம்மூரில் தயிரை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் மோர்க்குழம்பு புகழ்பெற்ற ஓர் உணவு வகை ஆகும். தயிர், காய்கறிகள் சேர்த்துத் தயாரிக்கப்படும் “பலிதியா” என்கிற உணவு, கர்நாடகத்தில் பிரபலம்.
தயிருடன் புளித்த விளாம்பழங்களை சேர்த்துத் தயாரிக்கப்படும் இந்த உணவில், மிளகு, சீரகம் போன்றவையும் சேர்க்கப்படும்.
தயிரில் ஊறவைத்த மாமிசத்துடன் மசாலாவைச் சேர்த்து சமைக்கும் பழக்கம் முன்பு இருந்ததாக, மொகலாய இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. தயிரில் இருந்து இனிப்புகள் செய்ய முடியுமா? என தெரிந்து கொள்வோம்.

