தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/படம் எடுக்க பயிற்சி வேண்டாம் ஆர்வம் போதும்!

படம் எடுக்க பயிற்சி வேண்டாம் ஆர்வம் போதும்!

படம் எடுக்க பயிற்சி வேண்டாம் ஆர்வம் போதும்!


PUBLISHED ON : செப் 11, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 11, 2017


Follow on Google
அ நிறம் | அளவு

இன்றைய தலைமுறை தெளிவாக இருக்கிறது. மருத்துவம், பொறியியல் போன்ற தொழில்சார் படிப்புகள் மட்டுமே எதிர்காலமல்ல என்பதை உணர்ந்திருக்கிறது. பிடித்தமான துறையில் கோலோச்சவே அவர்கள் விரும்புகின்றனர். அவர்களில் ஒருவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்த தனுபரண்.

தந்தை அருணின் காட்டுயிர் ஆர்வமும், புகைப்படக் கலையும் சிறுவயதிலேயே தனு பரணைத் தொற்றிக் கொள்ள, 6 வயதில் ஹம்மிங் பேர்டை, தன் கேமராவுக்குள் சிறை பிடித்தார் தனுபரண். அருகிலுள்ள ஆனைமலை வனஉயிரின சரணாலயம் காட்டுயிர் ஆர்வத்தை அவருக்குள் தூண்டி விட்டது. காட்டுயிர்ச் சூழல் மனதுக்கு மிகவும் நெருக்கமாகிவிட, அவற்றைப் புகைப்படங்களில் பதிவு செய்யத் தொடங்கினார்.

ஏறக்குறைய அழிந்துவிட்டதாக கருதப்பட்ட நிலையில், இவர் எடுத்த நீல்கிரி மார்டின் (Nilgiri Marten) என்ற விலங்கின் புகைப்படம் இவருக்கு ஏராளமான பாராட்டுகளைப் பெற்றுத் தந்தது. அதன்பின், இந்தியாவின் பெரும்பாலான காட்டுயிர்களை தன் கேமரா கண்களில் பதிவு செய்துவிட்டார் தனுபரண். நேட்ஜியோ தொலைக்காட்சியின் டிராவல் ஃபோட்டோகிராபர் ஆப் தி இயர் மற்றும் பிபிசி காட்டுயிர் புகைப்பட போட்டிகளில், இறுதிக்கு முன்னேறியிருக்கிறார்.

காட்டுயிர் புகைப்படங்களுக்காக ஏராளமான விருதுகளை வென்றுள்ளார். லே, லடாக், மகாநந்தா, சாத்தல், மிஸ்டி ஹில் என இந்தியாவின் முக்கியமான வனஉயிரின சரணாலயங்களுக்குச் சென்று, புகைப்படங்களை எடுத்துள்ளார்.

கருஞ்சிறுத்தை, ராஜநாகம், சிறுத்தை, பறவைகள் என ஏராளமானவற்றை இவர் படம் பிடித்திருந்தாலும், இருவாச்சி (ஹார்ன்பில்) பறவைதான் இவருக்கு மிகவும் பிடித்தமானதாம். எந்தெந்த வன உயிரினம் எந்தச் சூழலில் அதிகமாக வசிக்கும், அதன் வாழிடம், பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறை என ஏராளமான தகவல்களைச் சேகரித்து வைத்துள்ளார்.

விரும்பி அழைக்கும் பள்ளிகளுக்குச் சென்று, காட்டுயிர் புகைப்படக் கலை குறித்து இலவசமாக பயிற்சி வகுப்புகளை நடத்தித் தருகிறார்.

“வனவிலங்குகளை அவற்றின் போக்கில் விட்டுவிட வேண்டும். நமக்கு நல்ல புகைப்படம் கிடைக்கும் என்பதற்காக அவற்றைத் தொந்தரவு செய்யக் கூடாது. அப்படி இடையூறு செய்து எடுப்பது உண்மையான புகைப்படக் கலை ஆகாது. காட்டுயிர் புகைப்படக்கலைஞராக, பொறுமை அவசியம். மணிக்கணக்கில், ஏன் நாட்கணக்கில் கூட காத்திருக்க வேண்டியிருக்கும். புகைப்படம் எடுக்க வேண்டும் எனில், பயிற்சி வகுப்புகளுக்குப் போகாதீர்கள். அடிப்படையைத் தெரிந்து கொண்டு களத்தில் இறங்குங்கள்” என்கிறார் தனு.

பறவைகள், விலங்குகளை, நீர்வாழ்விகள் என பெரும்பாலான காட்டுயிர்களை படம் பிடித்துவிட்ட நிலையில், அடுத்து பூச்சிகள் பக்கம் கவனத்தைத் திருப்பவிருக்கிறார் தனு. நேட்ஜியோ அல்லது பிபிசியில் காட்டுயிர் புகைப்படக் கலைஞராக பணியாற்றுவதுதான் இவரின் லட்சியம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us