இங்கு காட்சிப்படுத்தப்பட்டிருப்பவை அனைத்தும் பழமையான வின்டேஜ் கார்கள், ஒவ்வொன்றும் காலத்தின் சாட்சியாய் நிற்கின்றன.
இந்த கார் பூங்காவின் பின்னணியில் உள்ளவர் மைக்கேல் புரோலிச், ஒரு பழமையான கார் சேகரிப்பாளர். அவர் தனது 50வது பிறந்தநாளை முன்னிட்டு, 2000 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் இருந்து வின்டேஜ் கார்கள் சேகரிக்கத் தொடங்கினார். ஜாகுவார், ரோல்ஸ்-ராய்ஸ், போர்ட், ஆஸ்திரேலிய ஹோல்டன், வோல்க்ஸ்வேகன் பீட்டில், மெர்சிடிஸ், பியூஜோ, ஓபெல் போன்ற பல பிரபல நிறுவனங்களின் 1950களில் தயாரிக்கப்பட்ட கார்கள் அவரது சேகரிப்பில் இடம்பெற்றன.
ஆரம்பத்தில் அவை அனைத்தும் ஓடும் நிலையிலும் பராமரிப்புடனும் இருந்தன. ஆனால், வருடங்கள் செல்லச் செல்ல அவற்றை பராமரிப்பது சிரமமாகிவிட்டதால், புரோலிச் அவற்றை இயற்கையோடு கலந்தவாறே இருக்கட்டும் என்ற எண்ணத்தில் நியாண்டர்தால் பள்ளத்தாக்கின் காட்டு பகுதியில் நிறுத்தினார்.
இப்போது அந்த காடுகளில், மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு நிற இலைகளின் மத்தியில் இவை இயற்கையின் ஓர் பகுதியாக கலந்துள்ளன. சில கார்கள் செடிகளாலும் கொடிகளாலும் மூடப்பட்டு காணப்பட, சில கார்கள் விழுந்த இலைகளின் மேல் மென்மையாகப் புதைந்தபடி நிற்கின்றன. இந்த காட்சிகள் இயற்கையும் இரும்பும் சந்திக்கும் ஒரு கலை அனுபவமாக மாறியுள்ளன.
புகைப்படக் கலைஞர்களும் சுற்றுலா பயணிகளும் இங்கு அதிகம் வரத் தொடங்கியுள்ளனர். சில ஐரோப்பிய புகைப்படக் கலைஞர்கள் இந்த இடத்தை “மெட்டமான் கார் கல்லறை” (Metmann Car Cemetery) என்று அழைக்கின்றனர், ஏனெனில் இங்கு உள்ள ஒவ்வொரு காரும் தன் சொந்த வரலாற்றைச் சொல்லுகிறது.
பாரம்பரிய வின்டேஜ் கார்களை நேசிக்கும் நபர்களுக்கும், கார் வரலாற்றில் ஆர்வமுள்ளவர்களுக்கும், இந்த இடம் ஒரு நினைவூட்டும் காலப் பயணமாக அமைந்துள்ளது.
— எல். முருகராஜ்