திருப்பரங்குன்றத்தில் முன்பிருந்த நிலையை ஆராய்வோமா?
திருப்பரங்குன்றத்தில் முன்பிருந்த நிலையை ஆராய்வோமா?
PUBLISHED ON : ஜூன் 15, 2026 06:17 AM

- டி.ஆர். ரமேஷ் - தலைவர், ஆலய வழிபடுவோர் சங்கம்
'திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முன்பிருந்த நிலையே தொடரும்' என கூறியிருக்கிறார், தமிழக சட்ட அமைச்சர் நிர்மல்குமார். நல்லது... அவர் கூறியவாறே, திருப்பரங்குன்றத்தில் முன்பிருந்த நிலை என்னவென்று சற்றே ஆராய்வோமா; அதாவது, சங்க காலம் முதல் 19ம் நுாற்றாண்டு வரை...
சங்க இலக்கியமாம் திருமுருகாற்றுப்படையில் பாடப்பெற்ற முதல் ஆற்றுப்படைவீடு தான், இத்திருத்தலம். பரிபாடல் இத்தலத்து திருவிழாவைக் காட்சிப்படுத்துகிறது.
சிலப்பதிகாரம் காடுகாண் காதையில், கோவலனும் கண்ணகியும் மதுரை நோக்கி வரும்போது இச்சேயோன் குன்று விழாக்கோலம் பூண்ட காட்சியும், அங்கு வேத முழக்கமும், இசை முழக்கமும் ஒலிக்கும் நிகழ்வையும், இளங்கோவடிகள் காட்சிப்படுத்துகிறார்.
திருப்பரங்குன்றம் ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக உள்ள முருகன் குன்று! இந்த வரலாற்று உண்மையை வந்தேறிகளின் அடிவருடிகள் மாற்றுவதற்கு இடம் கொடுப்பது, தமிழர் மரபிற்கும், பெருமைக்கும் இழுக்கு. குன்றின்மேல் இட்டவிளக்காகத்தான், திருப்பரங்குன்றம் கோவில் கார்த்திகை தீபம் விளங்கி வந்தது.
மதுரையை, 14ம் நுாற்றாண்டில் ஒரு பகுதியை ஆண்டு வந்த சுல்தான் ஆட்சி, விஜயநகர சாம்ராஜ்யத்தால் வீழ்த்தப்பட்டது. அந்த இடைப்பட்ட காலத்தில் கார்த்திகை தீபத்தை குன்றின்மேல் ஏற்றுவதில் இன்னல்கள் தோன்றி இருக்கும்.
அதன்பின் வெள்ளையர் ஆட்சியில், '-தமிழ்க்கடவுள் முருகன் குன்று இம்மலை' என, (மலையில் 33 சென்ட் நெல்லித்தோப்பைத்தவிர) வெள்ளையரின் மேலாண்நீதிமன்றம் (London privy council) தீர்ப்பளித்தது.
அதன்பின்னரும், குன்றின் மீது தீபமேற்றும் கோவில் நடைமுறை வழக்கத்தை நிறைவேற்ற மறுப்பது தமிழர் பண்பாட்டில், வழிபாட்டு உரிமையில் தலையிடும் செயலன்றி வேறென்ன?
குன்றத்தில், தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என்று, தமிழர் நெஞ்சை நிமிரச் செய்த தனி நீதிபதியின் தீர்ப்பு, உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வால் உறுதி செய்யப்பட்டது.
திருப்பரங்குன்றத்தில் வசிக்கும் இஸ்லாமியர் யாரும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததாக சொல்லமுடியாது. ஹிந்துக்கள் இடத்தில் தீபமேற்ற அவர்களுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை என்பதே உண்மை.
முறைகேடு
கடந்த 1937, மார்ச் 29ல், '1926 அறக்கட்டளைகள் சட்டம்' மூலம், அன்றைய ஹிந்து சமய வாரியம், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் நிர்வாகத்தை மேற்கொண்டிருந்தது. அந்த காலகட்டத்தில் திருப்பரங் குன்றம் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேவஸ்தானத்தின் ஓர் அங்கம்.
அதாவது, திருப்பரங்குன்றம் கோவில், மீனாட்சி கோவிலுக்குச் சொந்தமான கோவில். 1937ல் கோவிலை ஹிந்து சமய வாரியம் கைப்பற்றி, அதை 1951ல் அறநிலையத்துறை அறிவிக்கை செய்யப்பட்ட கோவில் என்று, அதன் நிர் வாகத்தை வைத்திருப்பது சட்டவிரோதம் என்று, 1971, டிச., 13ல் சென்னை உயர்நீதி மன்ற அமர்வு தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து அன்றைய ஆணையர் செய்த மேல்முறையீடு, உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வால் டிஸ்மிஸ் செய்யப்பட்டது.
நீதிமன்ற தீர்ப்பை மதித்து அப்பொழுதாவது கோவிலை விட்டு அறநிலையத்துறை வெளியேறி இருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு வெளியேறாமல் இன்று வரை தொடர்கின்றனர்.
மீனாட்சி கோவிலில் இருந்து திருப்பரங்குன்றம் கோவிலை தனிக்கோவிலாக பிரிப்பது என்று அறநிலையத்துறை செயலரும் , ஆணையரும் , 1979ல் சட்ட விரோதமாக முடிவெடுத்து அரசாணை (எண் 627) வெளியிட்டனர்.
மதிக்கப்பட வேண்டும்
திருப்பரங்குன்றம் கோவில் தனியாக செயல்பட, அதற்கு வருமானம் உள்ளது. மீனாட்சி கோவிலை சார்ந்து இருக்க வேண்டியது இல்லை என்றும் காரணம் சொல்லப்பட்டது.
ஒரு கோவிலின் பாரம்பரிய முறையை மாற்ற ஆணையருக்கோ, அரசுக்கோ துளியும் அதிகாரம் கிடையாது. கோவில் நிர்வாகத்தை மேற்பார்வை செய்யத்தான் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதில் முக்கியமான விஷயம், மீனாட்சி அம்மன் கோவிலில், 'அறநிலையத்துறை வேலைக்காரர்' செயல் அலுவலராக இருப்பதே சட்டவிரோதம்; நீதிமன்ற அவமதிப்பு. அதனால் தான், அமைச்சர் கூறியவாறே, நாங்களும் சொல்கிறோம், 'முன்பிருந்த நிலையே தொடர வேண்டும்!' திருப்பரங்குன்றத்தில் முன்பிருந்த நிலையே தொடர வேண்டும்.
திருப்பரங்குன்றம் கோவில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேவஸ்தானத்துடன் மீண்டும் இணைக்கப்பட வேண்டும். இக்கோவில் செயல் அலுவலர் வெளியேற்றப்பட வேண்டும்.
நுாற்றாண்டுகளாக குன்றின் மேல் இட்ட விளக்காக ஒளிர்ந்த கார்த்திகை தீபம், மீண்டும் திருப்பரங்குன்றின் மீது தீபத்துாணில் ஏற்றப்படவேண்டும்; நீதிமன்றத் தீர்ப்புகள் மதிக்கப்படவேண்டும்.
