PUBLISHED ON : மே 26, 2025 12:00 AM

சென்னையில்,போட்டோகிராபி சொசைட்டி ஆப் மெட்ராஸ் அமைப்பின் சார்பில் சர்வதேச அளவிலான புகைப்படக் கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் உலகம் முழுவதும் உள்ள சிறந்த புகைப்படக்கலைஞர்கள் எடுத்த படங்கள் காட்சிப்படுத்தப்படுகிறது.
1857 ஆம் ஆண்டு சென்னையில் நிறுவப்பட்ட உலகின் இரண்டாவது பழமையான புகைப்படக் கழகமான 'போட்டோகிராபி சொசைட்டி ஆப் மெட்ராஸ்' அமைப்பில் மருத்துவர்கள்,பொறியாளர்கள்,பேராசிரியர்கள், கணக்காய்வாளர்கள், வங்கியாளர்கள், திரைத்துறையினர், ஊடகத்துறையினர் என்று பல்வேறு துறையைச் சேர்ந்தவர்கள் உள்ளனர்.
500க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட இந்த அமைப்பின் உறுப்பினர்கள் எடுத்த சிறந்த புகைப்படங்கள் இந்த கண்காட்சியில் வைக்கப்பட உள்ளது மேலும் அமைப்பின் சார்பில் ஒரு தேசிய மற்றும் இரண்டு சர்வதேச புகைப்படப் போட்டிகள் சமீபத்தில் நடத்தப்பட்டது.சர்வ தேச போட்டியில் கலந்து கொண்ட அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜெர்மனி, ஹாங்காங், தாய்லாந்து உள்ளீட்ட 40 நாடுகளைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர்கள் கலந்து கொண்டனர், போட்டியில் வெற்றி பெற்றவர்களின் படங்களும் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது.
போட்டோகிராபி சொசைட்டி ஆப் மெட்ராஸ் (பிஎஸ்எம்) அமைப்பின் தலைவர் ராமசாமி, துணைத் தலைவர் நாராயணன்,செலாளர் லஷ்மி நராயணன், பொருளாளர் சிவலை செந்திந்நாதன், இயக்குனர் பாலு, நிகழ்ச்சி அமைப்பாளர் அசோக் விஸ்வநாதன் ஆகியோர் தலைமையில் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் நடந்துவருகிறது.
ஒப்பென் கலர், மோனோக்ரோம், லாண்ட்ஸ்கேப், சின்னங்கள் , வனவிலங்கு, ஸ்ட்ரீட் போட்டோகிராபி மற்றும் போர்ட்ரெய்ட் ஆகிய தலைப்பில் 80ற்கும் மேற்பட்ட உறுப்பினர்களின் 225 படங்கள் தேசிய மற்றும் சர்வதேச அளவில் வெற்றி பெற்ற படங்கள் என மொத்தம் 340 புகைப்படங்களைக் கொண்டு கண்காட்சி பிரம்மாண்டமாக அமைய உள்ளது.
சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள லலித்கலா அகாடமியில் வருகின்ற 1 ஆம் தேதி துவங்கி 7 ஆம் தேதி வரை நடைபெறுகிறது, பார்வை நேரம் பகல் 11 மணி முதல் இரவு 7 மணி வரை, அனுமதி இலவசம்.புகைப்பட விருந்தாக அமைய உள்ள இந்த கண்காட்சியை புகைப்பட ஆர்வலர்கள், பொதுமக்கள் கண்டுகளிக்கலாம் அதிலும் இந்த படங்கள் யாவும் பாடங்கள் என்பதால் 'விஸ்காம்' படிக்கும் மாணவர்கள் தவறவிடாமல் பார்த்து ரசிக்கலாம்.
மேற்கண்ட தகவல்களை பிஎஸ்எம் அமைப்பின் தலைவர் ஜி.என்.ராமசாமி தெரிவித்துள்ளார்.
-எல்.முருகராஜ்