PUBLISHED ON : ஜன 28, 2026 03:19 PM

சென்னை புத்தகத் திருவிழா என்பது வெறும் புத்தகங்களின் விற்பனைத் தளம் மட்டுமல்ல; அது கலை மற்றும் இலக்கியத்தின் கொண்டாட்ட மையம். இந்த ஆண்டு விழாவில், தமிழ் வளர்க்கும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கேறினாலும், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் வழங்கிய 'தமிழோசை' நிகழ்ச்சி, தனித்துவமான ஓர் அடையாளத்தைப் பதித்தது.

'தாதிதூது தீது தத்தைதூது ஓதாது தூதிதூது ஒத்தித்த தூததே - தாதுஒத்த துத்தி தத்தாதே தேதுதித்த தொத்துதீது'
கிளித் தூது, பணிப்பெண் தூது, தோழி தூது என ஒவ்வொன்றிலும் உள்ள குறைபாடுகளை விளக்கி, இறைப்பணியின் அவசியத்தைச் சொல்லும் இந்தப் பாடலை நவீன இசையில் கேட்டபோது, பழமைக்கும் புதுமைக்கும் இடையிலான இடைவெளி மறைந்தது.
சங்கத் தமிழும்... புரட்சிக் கவியும்... அவ்வையாரின் 'நாலு கோடி பெறும்' பாடலும், கலித்தொகை, குறுந்தொகை பாடல்களும் மெல்லிசையில் நனைந்து வந்து செவிகளை நிறைத்தன. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற கனியன் பூங்குன்றனாரின் உலகளாவிய தத்துவமே தமிழர்களின் தேசியப் பாடலாக மாற வேண்டும் என்ற முழக்கத்தோடு அந்தப் பாடல் பாடப்பட்டது.
பழந்தமிழ் மட்டுமன்றி, பாரதிதாசனின் 'தமிழுக்கு அமுதென்று பேர்' பாடலை நவீன மெருகேற்றலுடன் வழங்கியபோது பார்வையாளர்களின் பாராட்டு மழை பொழிந்தது. அதேபோல், நாமக்கல் கவிஞரின் 'கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது' என்ற வரிகள் ஒலித்தபோது, நம் சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் தீரம் நினைவுக்கு வந்து மெய்சிலிர்க்க வைத்தது.
ஏன் ஆங்கிலத்தில் வாழ்த்த வேண்டும்? 'நம் குழந்தைகளின் பிறந்தநாளின் போது 'ஹாப்பி பர்த் டே' என ஏன் அந்நிய மொழியில் பாட வேண்டும்?' என்ற ஜேம்ஸ் வசந்தனின் கேள்வி நியாயமானதாக இருந்தது. அதற்கு மாற்றாக, அவர்கள் பாடிய இனிமையான 'தமிழ் பிறந்தநாள் வாழ்த்துப் பாடல்' பெற்றோர்களைச் சிந்திக்க வைத்தது.
துள்ள வைக்கும் நாட்டுப்புற இசை நிகழ்ச்சியின் இறுதியில், மண்ணின் மணம் கமழும் நாட்டுப்புறப் பாடல்களை ஜேம்ஸ் வசந்தன் குழுவினர் பாடியபோது, உணர்ச்சிப் பெருக்கில் அவையில் இருந்தவர்கள் அனைவரும் எழுந்து நின்று உற்சாகமாக நடனமாடினர். ஒன்றரை மணி நேரத் தமிழ் இசைப் பயணம், ஒரு புதிய நம்பிக்கையை விதைத்தது.
முடிவுரை ஜேம்ஸ் வசந்தனின் இந்த முயற்சி வெறும் இசை நிகழ்ச்சி அல்ல; இது இளைய தலைமுறையினரிடம் தமிழை ரசனைமிக்க முறையில் கொண்டு செல்லும் ஒரு பண்பாட்டுச் சேவை. தமிழோசை திக்கெட்டும் ஒலிக்கட்டும், நம் மொழியின் பெருமை உலகுக்கு இசையாய் பரவட்டும்!
- எல். முருகராஜ்

