தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/சிந்தனைக் களம்/ராமரின் பாதையில் நாமும் செல்ல வேண்டும்!

ராமரின் பாதையில் நாமும் செல்ல வேண்டும்!

ராமரின் பாதையில் நாமும் செல்ல வேண்டும்!


PUBLISHED ON : ஜன 21, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 21, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டாக்டர் மோகன் பாகவத், ஆர்.எஸ்.எஸ்.சர்சங்கசாலக்


நம் பாரதம் 1,500 ஆண்டுகளாக அன்னியரை எதிர்த்து போராடியது வரலாறு. அலெக்சாண்டர் உட்பட பலர் ஆரம்ப காலத்தில் நம் நாட்டின் மீது படையெடுத்தது செல்வத்தை கொள்ளையடிக்கவும், நிலத்தை ஆக்கிரமிக்கவும் தான். ஆனால், இஸ்லாம் பெயரில் மேற்கில் இருந்து வந்த தாக்குதல்கள், முற்றிலும் சீரழிவை கொண்டு வந்ததுடன், சமுதாய அழிவிற்கும் வித்திட்டன.

அன்னிய படையெடுப்பாளர்கள் நம்நாட்டில் பல கோவில்களை அழித்தனர். அவர்களின் குறிக்கோள், நம் சமுதாயத்தின் சுயநம்பிக்கையை சிதைத்து, பலவீனமாக்கி, பின் நிரந்தரமாக இங்கு ஆட்சி செய்வதாகவே இருந்தது.

அயோத்தியிலிருந்த ஸ்ரீராமர் கோவிலும் அதே எண்ணத்துடன் தான் அழிக்கப்பட்டது. அன்னிய படையெடுப்பாளர்களின் போர் தந்திரம் உலகம் முழுதும் இவ்வாறு தான் இருந்தது. நாடு பிடிக்கும் வேட்கையில் இப்படிப்பட்ட கொடுமைகளை நிகழ்த்தினர். ஆனால், நம் நாட்டில் அவர்கள் எதிர்பார்த்தது போல நடக்கவில்லை. அத்துடன், நம் மக்களின் நம்பிக்கை, உத்வேகம், அர்ப்பணிப்பு எதுவுமே குறையவில்லை; எதிர்த்து போராடினர்.

அந்த அடிப்படையில் தான், ராமர் பிறந்த இடத்தில் மீண்டும் கோவில் கட்ட வேண்டும் என தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. ராமருக்காக பல போர்கள், போராட்டங்கள் மற்றும் தியாகங்கள் நிகழ்ந்துள்ளன. ராமஜென்ம பூமி போராட்டம் என்பது ஹிந்துக்களின் மனதில் ஆழமாக பதிந்துள்ளது.

பரிமாற்றம்


கடந்த, 1857ல், ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக போர் நடைபெற்று வந்த நேரம், ஹிந்துக்களும், முஸ்லிம்களும் இணைந்து போராடுவது என்று தீர்மானித்தனர். இரு தரப்புக்கும் இடையே கருத்து பரிமாற்றங்கள் நிகழ்ந்தன. அந்த நேரத்தில், பசுவதை தடுப்பு மற்றும் ராமஜென்ம பூமி விஷயங்களில் கருத்தொற்றுமை ஏற்படும் சூழலும் உருவானது. பகதுார் ஷா ஜாபர், பசுவதையை தடை செய்ய உத்தரவாதம் அளித்தார். இதன் காரணமாக மொத்த சமுதாயத்தினரும் ஒன்றாக திரண்டு போரிட்டனர்.

இருப்பினும், அந்த சுதந்திர போர் தோல்வியில் முடிந்தது. பிரிட்டிஷ் ஆட்சி தொடர்ந்தது; ஆனாலும், ராமர் கோவிலுக்கான போராட்டம் நிற்கவில்லை. ஹிந்துக்கள் மற்றும்- முஸ்லிம்களை பிரித்தாளும் பிரிட்டிஷாரின் கொள்கை, 1857-க்கு பின் தீவிரம் அடைந்தது. இரு சமூகத்தினருக்கு இடையேயான ஒற்றுமையை குலைக்க, அயோத்திக்காக போராடிய தலைவர்களை பிரிட்டிஷார் துாக்கிலிட்டனர்.

இதனால், ராமஜென்ம பூமி விவகாரம் தீர்க்கப்படாமல் இருந்து வந்தது; ராமர் கோவிலுக்கான போராட்டமும் தொடர்ந்தது. நாடு சுதந்திரம் பெற்றதும், சோமநாதர் கோவில் விவகாரத்தில் ஒருமித்த தீர்வு ஏற்பட்டதை அடுத்து பிற கோவில்கள் பற்றியும் விவாதங்கள் துவங்கின. ராமஜென்ம பூமி விஷயத்திலும் இந்த முறையில் தீர்வு ஏற்பட்டிருக்கும்.

அரசியல் காரணங்களால் அது திசை மாறியது. பாகுபாடு காட்டுதல், ஒரு பிரிவினரை திருப்திப்படுத்துதல் போன்ற சுயநல அரசியல் நடவடிக்கைகள் காரணமாக, பிரச்னை அப்படியே நீடித்தது. சுதந்திரத்திற்கு முன்பே துவங்கிய சட்டப் போராட்டம் தொடர்ந்தது. அது 1980-களில் துவங்கி 30 ஆண்டுகள் நடைபெற்றது.

கடந்த 1949-ல் ஸ்ரீராமரின் விக்ரகம் ராமஜென்ம பூமியில் நிறுவப்பட்டது. 1986-ல் நீதிமன்ற உத்தரவுப்படி கோவிலின் பூட்டுகள் அகற்றப்பட்டன. இதை தொடர்ந்து ஹிந்து சமுதாயம் பல்வேறு போராட்டங்கள் மற்றும் கரசேவையில் ஈடுபட்டது. 2010-ல் அலகாபாத் நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியது.

அதற்கு ஒரு இறுதி தீர்வு கிடைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 2௦19 நவம்பர், 9 ல், 134 ஆண்டு சட்டப் போராட்டத்திற்கு பின், உச்ச நீதிமன்றம் பல்வேறு சான்றுகளை ஆய்வு செய்து, அனைவரும் ஏற்கத்தக்க தீர்ப்பை வழங்கியது.

இரு தரப்பு நம்பிக்கைகள் மற்றும் எண்ணங்களுக்கும், இந்த தீர்ப்பு மதிப்பளித்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. இதன்பின், ராமர் கோவில் கட்ட அறக்கட்டளை அமைக்கப்பட்டது. கோவில் கட்டுவதற்கான பூமிபூஜை 2௦2௦ ஆகஸ்ட், 5ல் நடைபெற்றது. தற்போது சோபகிருது ஆண்டு, தை மாதம், 8ம் தேதி (2024 ஜனவரி 22) சுக்லபட்ச துவாதசி அன்று பால ராமர் விக்ரகத்தின் பிராண பிரதிஷ்டை நடைபெற உள்ளது.

சத்தியம், வலிமை மற்றும் துணிவு


ஆன்மீக ரீதியாக பார்த்தால், பெருவாரியான மக்கள் வழிபடும் கடவுள் ஸ்ரீராமர். அந்த கடவுளின் வாழ்க்கை ஒரு நெறியான வாழ்க்கை என, ஒட்டு மொத்த சமுதாயமும் போற்றுகிறது. எனவே, இந்த விவகாரத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் எழுந்துள்ள விவாதங்களை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.

அதனால், எழுந்துள்ள கசப்புணர்வுகளும் மறைய வேண்டும். சமுதாயத்தில் உள்ள பெரியவர்கள், சச்சரவுகள் முடிவுக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும். அயோத்யா என்றால், 'போர் இல்லாத நகரம், சச்சரவுகள் இல்லாத நகரம்' என்று பொருள். இந்த நேரத்தில், ஒட்டுமொத்த நாடும், அயோத்தியை எப்படி மீண்டும் நிர்மாணம் செய்வது என்பது பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டும்; இது நம் கடமையாகும். ஸ்ரீராமர் கோவில் கட்டப்பட்டுள்ள இந்த தருணம், நம் தேசத்தின் பெருமையை மீண்டும் எழச் செய்துள்ளது. ஸ்ரீராமரின் வாழ்க்கை முறைகளை நம் சமூகம் ஏற்றுக் கொண்டதன் அடையாளமாகவும் இது விளங்குகிறது.

ஸ்ரீராமரை கோவிலில் வணங்க சொல்லப்பட்டுள்ள முறைகள் பத்ரம், புஷ்பம், பலம், தோயம் (இலை, பூ, பழம், தண்ணீர்). அதுமட்டுமின்றி, ராமரின் உருவத்தை நம் மனதில் பதித்து, அந்த நெறிப்படி நம் வாழ்க்கையை அமைத்து ராமரை பூஜிக்க வேண்டும். சிவோ பூத்வா சிவம் யஜேத், ராமோ பூத்வா ராமம் யஜேத் என்பர்; அதாவது, சிவனை வணங்க வேண்டும் என்றால் சிவனாக இரு, ராமனை வணங்க வேண்டும் என்றால் ராமனாக இரு என்று பொருள்.

'மற்றவர் மனைவியை தாயாக பார்ப்பவன், பிறர் சொத்தை ஒரு பிடி மண்ணாக பார்ப்பவன், அனைத்து ஜீவராசிகள் உள்ளேயும் தன்னை காண்பவன் பண்டிதன்' என்ற சொல் வழக்கு உள்ளது. நம் கலாசாரம் வலியுறுத்துவதும் இதையே. இதேபோன்று ராமரின் பாதையில் நாமும் செல்ல வேண்டும்.

வாழ்க்கையில் சத்தியம், வலிமை மற்றும் துணிவுடன் மன்னிக்கும் மனம், நேர்மை, அடக்கம், அனைவர் மீதும் அன்பு பாராட்டல், துாய்மையான எண்ணம், கடமையை நிறைவேற்றுவதில் கண்டிப்பு உள்ளிட்ட பண்புகள், ராமனிடம் இருந்து கற்று நாம் அனைவரும் பின்பற்றக்கூடியதாகும். இவற்றை நம் வாழ்வில் கொண்டு வர நேர்மை, அர்ப்பணிப்புடன் கடுமையாக உழைக்க வேண்டும்.

ஆரம்பம்


நம் தேசிய கடமைகளை மனதில் கொண்டு, இந்த பண்புகளை நம் சமுதாய வாழ்விலும் நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த பண்பின் அடிப்படையில் தான், ராமர், லட்சுமணர், 14 ஆண்டுகள் வனவாசம் முடித்ததுடன் வலிமையான ராவணனையும் வீழ்த்தினார்.

ஸ்ரீராமரின் குணங்களை பிரதிபலிக்கும் நீதி, கருணை, சமத்துவம், சமூக நல்லிணக்கம், நேர்மை, சமுதாய நடத்தை ஆகியவற்றை பரப்புவதையும்; துணிச்சலான, சுரண்டல் இல்லாத, சமநீதி உடைய வலிமையான சமுதாயம் உருவாவதையும் உறுதி செய்வோம்.

பால ராமர் அயோத்தியில் எழுந்தருள்வதும், அவரது பிராண பிரதிஷ்டை நடத்தப்படுவதும், பாரத பூமியின் புனர் நிர்மாணத்தின் ஆரம்பம். இது, எல்லோருக்கும் நன்மை பயக்கக் கூடியது, எவர் மீதும் விரோதம் பாராட்டாதது. நல்லிணக்கம், ஒற்றுமை, வளர்ச்சி, அமைதிக்கான வழியை காட்டவல்லது. நாம் இதை பின்பற்றி எடுத்து செல்லும் பக்தர்கள்.

ஜனவரி, 22ம் தேதியான நாளை, ராமர் கோவில் எழுந்ததற்கான ஆன்மிக கொண்டாட்டங்களில் பங்கேற்கும் அதே வேளையில், பாரதத்தை புனர் நிர்மாணம் செய்து, அதன் வாயிலாக உலகின் புனர் நிர்மாண பணியில் ஈடுபட உறுதி எடுத்துக் கொள்வோம். இந்த பேரொளியை மனதில் வைத்து, முன்னேறி செல்வது காலத்தின் கட்டாயம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us