/
வாராவாரம்
/
சிந்திப்போமா
/
வயிறு நிறையும்... ஆனால், ஆயுள் சுருங்கிவிடும்!
/
வயிறு நிறையும்... ஆனால், ஆயுள் சுருங்கிவிடும்!
UPDATED : ஜன 03, 2024 08:35 AM
ADDED : ஜன 03, 2024 01:09 AM

கல்கி கவியரசு
கட்டுரையாளர், ஒரு எழுத்தாளர். நீலகிரிமாவட்டம், வெலிங்டன் ராணுவ மையத்தில் உணவகம் நடத்துகிறார். பாரம்பரியஉணவு வகைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பவர்.
'மை ரெஸ்டாரன்ட் குரு' அமைப்பு சார்பில், 2022ம் ஆண்டின் சிறந்த பெண்
ஆளுமைகளுக்கான உணவக விருதை பெற்றார்.சென்னையில் நடந்த, 'எண்ணித் துணிக'
கலந்துரையாடலில் கவர்னர் ரவி, 120 பேரை கவுரவித்ததில், இவரும் ஒருவர்.
உயிர்களின் அடிப்படை தேவை உணவு. உணவுகளை சார்ந்தே, தங்களின் வாழ்விடங்களை உயிரினங்கள் அமைத்து கொள்கின்றன. வயிற்றை நிரப்ப உணவு எடுக்காமல், வைட்டமின், புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்புகள் கலந்த சரிவிகித உணவு கலவை அவசியம்.
ஆப்பிள், கொய்யா, வாழை, பச்சை பட்டாணி, பச்சைபயிறு, கருப்பு உளுந்து, கேரட், பீட்ரூட் உள்ளிட்ட நார்சத்து மிகுந்த உணவு; வெள்ளரி, புருக்கோலி போன்ற நீர்சத்து நிறைந்த உணவு எடுப்பதால் உடலுக்கு தேவையான சக்தி கிடைக்கிறது.
உடலுக்கு கொழுப்பு அவசியம் என்பதால் இறைச்சியையும் எடுத்து கொள்ளலாம். நாள் ஒன்றுக்கு, 200 கிராம் இறைச்சி உட்கொண்டால், 300 கிராம் காய்கறி உணவும் அவசியம்.
ஆயுள் நிர்ணயிக்கும்
சரிவிகித ஊட்டச்சத்து உணவை உட்கொண்ட மூதாதையர்கள், 100 வயதை கடந்து ஆரோக்கியமாக வாழ்ந்தனர். தற்போதைய தலைமுறையினர், 50 வயதை தாண்டுவதற்கு மருந்துகளையும், மருத்துவமனைகளையும் நாடி செல்கின்றனர். முன்பு இருப்பிடங்களின் அருகிலேயே உணவுப் பொருட்கள் விளைவித்து அறுவடை செய்து பயன்படுத்திய காலம் மாறி, சந்தை, கடைகளில் வாங்கும் பழக்கமாகி உள்ளது.
காய்கறிகளை வெட்டி வேக வைக்க, வெங்காயம் உரிக்க யாருக்கும் நேரம் இல்லை. இந்த சோம்பேறித்தனத்தை மூலதனமாக எடுத்து கொண்ட நிறுவனங்கள், பல்பொருள் அங்காடி மற்றும் ஆடம்பர மால்களில் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களை காற்று புகாத பிரிட்ஜ்களில் அடைத்து வைத்து விற்பனை செய்கின்றன.
உணவு பொருட்களில் உள்ள மருத்துவ குணம் சிதைக்கப்பட்டு செயற்கையான முறையில் அவை செறிவூட்டப்படுகின்றன. வெங்காயம், தக்காளி உள்ளிட்ட இயற்கை சார்ந்த உணவுகளும், இறைச்சி, கடல் உணவு வகைகள் கூட காற்று புகாத பிளாஸ்டிக் கவரில் அடைத்து பல நாட்கள் கழித்து விற்பனை செய்யப்படுகிறது.
சொந்த மண்ணில், சொந்த ஊரில் விளைவித்த ஊட்டச்சத்து நிறைந்த காய்கறி உள்ளிட்டவை விவசாயிகள், விற்பனையாளர்களிடம் பெறுவதை தவிர்த்து விட்டு, பிளாஸ்டிக் கவருக்குள் அடைக்கப்பட்டவற்றை, சமைத்து உண்ணும் நிலைக்கு மாறி வருகின்றனர். தற்போது மக்களை கவரும் நோக்கில் செறிவூட்டப்பட்ட மற்றும் அதிக நிறமிகள் சேர்த்த உணவு பயன்படுத்தப்படுகிறது.
நோய் பாதிப்பு அதிகம்
பச்சை முட்டையில் உருவாக்கும் மையோனஸ், சாஸ் போன்றவற்றை பயன்படுத்தி தயாரிக்கும் பீட்சா, சாண்ட்விச், பர்கர், ஷவர்மா போன்ற உணவுகளில், இளையோர் அளவு கடந்த ஈடுபாடு காட்டி உட்கொள்கின்றனர். இதனால் உடம்பில் தேவையற்ற கொழுப்புகள் தேங்கி உடல் பருமன், குழந்தையின்மை, நீர்கட்டி, தைராய்டு, மாரடைப்பு உட்பட பல வியாதிகளை விலை கொடுத்து வாங்கும் அவலம் ஏற்படுகிறது.
கர்ப்பிணிகள் இந்த உணவுகளை உண்பதால், பிரசவ காலத்தில் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்த பாதிப்புகளை சந்திக்கின்றனர். அதிலும் பிறக்கும் குழந்தைகள் கூட, சிறுவயதிலேயே சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகின்றனர். கண்ணில் கண்ட உணவுகளை வாங்கி, ருசிக்காக வயிற்றை நிரப்பும் கலாசாரத்தால், இன்று ஆரோக்கியமற்ற, சுகாதாரமற்ற சமுதாயத்தை நமது கண்முன்னே நாமே வடிவமைத்து கொண்டிருக்கிறோம்.
அழகாகவும், பகட்டாகவும் இருக்கும் உணவால் வயிறு நிறைந்து விடும். ஆனால் ஆயுள் சுருங்கிவிடும். பாரதத்தின் பாரம்பரிய உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதை அடுத்த தலைமுறைக்கும் எடுத்து செல்ல வேண்டும்.