/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
பாட்டு பாடவா வலியை போக்கவா: மகன் நினைவாக தம்பதியின் கருணை
/
பாட்டு பாடவா வலியை போக்கவா: மகன் நினைவாக தம்பதியின் கருணை
பாட்டு பாடவா வலியை போக்கவா: மகன் நினைவாக தம்பதியின் கருணை
பாட்டு பாடவா வலியை போக்கவா: மகன் நினைவாக தம்பதியின் கருணை
ADDED : ஆக 18, 2024 12:18 PM

சோக குரலும், நலம் விசாரிப்பும் கேட்டுக்கொண்டிருக்கும் மதுரை அரசு மருத்துவமனை புற்றுநோய் சிகிச்சை பிரிவில் ரம்மியமான இசை வாரந்தோறும் கேட்கிறது. மனதை வருடும் பாடல்களை அம்மருத்துவமனை நர்ஸ் ஜெயாவும், ராம்போ குமார் என்பவரும் பாட, நோயாளிகள் வலியை மறந்து தங்களை தேற்றிக்கொண்டு நிம்மதியாக உறங்குகின்றனர். ஒவ்வொரு வாரமும் 2 நாட்கள் நோயாளிகளுக்காக இவர்களும், கல்லுாரி மாணவர்களும் ஒரு சேவையாக 'மியூசிக் தெரபி' கவுன்சிலிங் கொடுத்து வருகின்றனர்.
இதற்கு வேராக இருப்பது அஸ்வின் மகராஜ் அறக்கட்டளை. இதன் நிறுவனர்கள் டாக்டர் ராமசுப்பிரமணியம், மனைவி மனோன்மணி. சென்னை தி.நகரில் வசிக்கும் இவர்கள் தங்கள் மகன் நினைவாக இந்தியா முழுவதும் குறிப்பிட்ட அரசு மருத்துவமனைகளில் தன்னார்வலர்கள் மூலம் 'மியூசிக் தெரபி' அளித்து வருகின்றனர்.
தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக மனோன்மணி கூறுகிறார்.
''என் 2வது மகன் அஸ்வின் மகராஜ். 22 வயதில் ரத்தபுற்றுநோயால் இறந்தான். ஹரியானா சட்ட கல்லுாரியில் படித்தவன். கால்பந்து வீரர். இறுதியாண்டு படிப்பின்போது நோய் தாக்குதலுக்குள்ளானான். அமெரிக்காவில் சிகிச்சையின்போது அவனுக்கு 'மியூசிக் தெரபி' கொடுத்தனர். வலி மறந்து நிம்மதியாக துாங்கியதாக தெரிவித்தான். தன்னை மாதிரி இந்தியாவில் உள்ளவர்களுக்கும் 'மியூசிக் தெரபி' கொடுக்க வேண்டும். அதற்கான வழிமுறைகளை அமெரிக்க டாக்டர்களிடம் அவன் கேட்டபோது, 'சின்ன வயசில் சமூகநல பொறுப்புடன் இருக்கிறாரே' என ஆச்சரியப்பட்டனர். 2015 அக்டோபரில் அஸ்வின் இறந்தான். நாங்கள் அவனது பெயரில் அறக்கட்டளை ஆரம்பித்தோம்.
அடையாறு கேன்சர் சென்டர் டாக்டர் சாந்தாவிடம் ஆலோசித்தோம். அவர் கொடுத்த ரெசிபி அடிப்படையில் புற்றுநோயாளிகளுக்கு சத்தான மாவை தயாரித்து மதுரை, நெல்லை உட்பட இந்தியா முழுவதும் குறிப்பிட்ட அரசு, மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை நோயாளிகளுக்கு இலவசமாக மாதந்தோறும் வழங்குகிறோம். என் மகனுக்கு கிடைத்த 'மியூசிக் தெரபி' மற்றவர்களுக்கும் கிடைக்க தன்னார்வலர்கள், கல்லுாரி மாணவ, மாணவியரை வாரம் 2 நாட்கள் மருத்துவமனை சென்று பாடச்செய்து நோயாளிகளுக்கு தன்னம்பிக்கை அளிக்கிறோம். இதுவரை 4000 பேர் பாடுவதில் பங்கேற்று நோயாளிகளை ஆறுதல்படுத்தி உள்ளனர். அவர்களுக்கு சான்றிதழ் வழங்கியுள்ளோம்.
நிறுவனங்களில் அவர்கள் பணியில் சேரும்போது 'சமூக சேவை செய்துள்ளீர்களா' என கேட்கும்போது இந்த சான்றிதழ் கைகொடுக்கும். இந்தியா முழுவதும் 200 பேர் இச்சேவையில் ஈடுபட்டுள்ளனர். ஆண்டுதோறும் 'ஆடிஷன்' வைத்து சிறப்பாக பாடுவோரை தேர்வு செய்கிறோம். மதம் சம்பந்தமான பாடல்கள் பாடுவது கிடையாது. மனதை வருடும் சினிமா பாடல்கள், கிராமிய பாடல்களை பாடச்செய்கிறோம் என்றார்.
இவர்களை வாழ்த்த: www.ashwin maharajfoundation.org

