/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
'நொய்யல்' நாவலுக்காக 28 ஆண்டு 'தவம்'
/
'நொய்யல்' நாவலுக்காக 28 ஆண்டு 'தவம்'
UPDATED : பிப் 22, 2026 09:41 AM
ADDED : பிப் 22, 2026 06:38 AM

காங்கயம், புதுவெங்கரையாம்பாளையத்தை சேர்ந்தவர், தேவி பாரதி(இயற்பெயர் ராஜசேகரன்). 1986 - 2006 வரை, 20 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றிய தேவிபாரதி, விருப்ப ஓய்வு பெற்று, 'காலச்சுவடு' பொறுப்பாசிரியராக பணியாற்றினார். சிறுகதைகள், கவிதைகள், அரசியல், இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் என இலக்கிய உலகில் தொடர்ந்து இயங்கி வருகிறார். இவர் எழுதிய 'நீர்வழிப்படூஉம்' நாவல், 2020ல் சாகித்ய அகாடமி விருது பெற்றது.
தந்தையிடம் கற்றேன்
திருப்பூரில், பொது நுாலக இயக்கம், பள்ளி கல்வித்துறை சார்பில் நடந்த இலக்கிய திருவிழாவில் பங்கேற்ற அவர், நம்மிடம் பகிர்ந்தவை:
ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்று, ஆசிரியர் பணியில் இணைந்தவர் என் தந்தை. என் எழுத்துகளுக்கு விதை போட்டது அவர் தான். 'எதையாவது நீ எழுதிக்கொண்டே இரு. ஒரு நாள் அது ஜொலிக்கும்' என என்னை ஊக்கப்படுத்துவார். ராணுவப்பணி, அதை தொடர்ந்து, ஆசிரியர் பணி, பணியின் போதே மரணம், நிலை குலைந்த குடும்பம் என அவரை பார்த்து நிறைய கற்றுக்கொண்டேன்.
வாசகரே விருது
எனது வாழ்க்கை அனுபவத்தை புரட்டிபோட்ட நொடிகளை ஒவ்வொரு நாளும் நினைவு கூர்ந்து கதை, கவிதை, கட்டுரையாக கதாபாத்திரங்களை வைத்து எழுதுவதை வழக்கப்படுத்திக் கொண்டேன். உடல்நிலை பாதிக்கப்பட்ட போதும் கூட தொடர்ந்து எழுதினேன். விருது என்பது ரொம்ப பெரிய விஷயம். கடுமையான முயற்சியால் அது கிடைக்க வேண்டும். விருதுக்காக மட்டும் எழுதக்கூடாது. ஒவ்வொரு வாசகரும் ஒரு விருது தான்.
பொறுமை முக்கியம்
புத்தகம் எழுத வேண்டுமெனில், அர்ப்பணிப்பு வேண்டும். கலைக்காக மட்டும் வாழ வேண்டும். பாரதி, புதுமைப்பித்தன் படைப்புகளை பார்த்து வளர்ந்தேன். எழுத்தாளர் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள, எழுத்தில் வலிமை இருக்க வேண்டும். 'நொய்யல்' என்ற நாவலை எழுத, 28 ஆண்டுகளாக தகவல்களை சேகரித்தேன். எழுத்தாளர்களுக்கு நிதானமும், பொறுமையும் மிகவும் முக்கியம்.
போராட்டமே எழுத்து
இப்போதெல்லாம் இரண்டு, மூன்று மாதங்களில் புத்தகம் எழுத நினைக்கின்றனர். புத்தகம் எழுதுவது, வணிகம் அல்ல. நாம் ஒருவரிடம் பேசுவதை, சொல்வதை விட, எழுதுவது அதிமுக்கியம். நாம் ஒருநாள் இல்லையென்றால், அந்தப் புத்தகம் இருக்கும். படிக்கும் போது எழுத்தாளன் நினைவு கூரப்பட வேண்டும். போராட்டங்கள் இல்லாமல் யாருக்குமே வாழ்க்கை இல்லை.
போராட்ட வாழ்க்கை தான் எழுத்தாக மாறுகிறது. எழுத்தாளர்கள் பலரின் வாழ்க்கையை மீட்டெடுக்கின்றனர். கற்பனை மட்டுமே எழுத்தாக மாறி விடாது. நேரடியாக நாம் அனுபவிப்பதை அப்படியே எழுத்தில் கொண்டு வருவது தான் சிறப்பாக இருக்கும். பெண் எழுத்தாளரின் உரிமை முழுமையாக தர வேண்டும். அவர்கள் எழுத முன்வருவதில்லை எனக்கூறினால் தவறு. எழுத்து சுதந்திரத்தில் ஆண், பெண் எழுத்தாளர் வேறுபாடு இல்லை. எழுத்து மூலம் எழுச்சியை ஏற்படுத்த வேண்டும். இலக்கியவாதிகளை கொண்டாடும் சமூகமாக நம் தமிழ் சமுதாயம் உள்ளது.
கடந்த, 2015ல், வெள்ளகோவில் அருகே நடந்த ஒரு சாலை விபத்தில் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டேன். வாய்பேச முடியாத நிலைக்கு சென்று, மீண்டு வந்து, எழுத துவங்கினேன். 2011ல், எனது முதல் நாவலான 'நிழலின் தனிமை' வெளியிட்டேன். 2020ல் வெளியான 'நீர்வழிப்படூஉம்' நாவல் சாகித்ய அகாடமி விருதை பெற்று தந்தது. 2022ல் 'நொய்யல்' நாவல் எழுதினேன். விபத்தில் என்னை தொலைத்தாலும், விடா முயற்சி என்ற வார்த்தை திரும்ப திரும்ப என் வாழ்க்கையை புரட்டி போட்டது. - தேவிபாரதி, எழுத்தாளர்.

