/வாராவாரம்/விருந்தினர் பகுதி/வியக்க வைக்கும் விசில் இசை கலைஞர்  

வியக்க வைக்கும் விசில் இசை கலைஞர்  

வியக்க வைக்கும் விசில் இசை கலைஞர்  

வியக்க வைக்கும் விசில் இசை கலைஞர்  

வியக்க வைக்கும் விசில் இசை கலைஞர்  

ADDED : ஏப் 11, 2026 07:54 PM


Google News
Latest Tamil News
கோவை: துளை கருவி, தோல் கருவி, நரம்பு கருவி ஆகிய மூன்றும் அனைத்து இசைக்கருவிகளுக்கும் அடிப்படையாக உள்ளன.

புல்லாங்குழல், நாதஸ்வரம் உள்ளிட்ட துளை கருவிகளுக்கு மூச்சுக்காற்றே ஆதாரமாகும். இந்த கருவிகள் வழியாக செலுத்தப்படும் மூச்சுக்காற்று நாதமாகி, மனதை மயக்கும் இசையாக பரிணாமம் பெறுகிறது. இதுவே துளைக்கருவிகளின் மகத்துவம்.

ஓசையின்றி வெளியேறும் சுவாச காற்றை, எந்த கருவியின் துணையுமின்றி சங்கீதமாக்கி, இசை சாதனை படைத்து வருகிறார் விசில் இசைக்கலைஞர் சிவபிரசாத் குமாரவேலு. விசில் சந்தம் என்றால் விடலை பருவத்து இளைஞர்கள் குறும்பாக வெளிப்படுத்தும் கேளிக்கை ஒலியாகும். இதற்கு ஒருபோதும் இசைக்கான மரியாதை இருந்ததில்லை. ஆனால் அந்த விசில் சத்தத்துக்கு செவ்வியல் இசைக்கான அந்தஸ்தை பெற்று தந்திருக்கிறார் இவர். பல ஆண்டுகள் பயிற்சி செய்து, கர்நாடக இசை கச்சேரிகளில் இசைத்து வருகிறார். அதை கேட்பவர்கள், இது விசில் இசையா? குழல் இசையா ? என வியந்து போகின்றனர்.கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக விசில் இசை மூலம் கர்நாட சங்கீதத்தையும், நாமசங்கீர்த்தனத்தையும் அரங்கேற்றி வரும் சிவபிரசாத் குமாரவேலு, சமீபத்தில் ஸ்ரீசத்ய சாயி 100 வது பிறந்த தினத்தை முன்னிட்டு, கோவை ஆர்.எஸ்.புரம் காமாட்சி அம்மன் கோவிலில் நிகழ்ச்சி நடத்தினார். அவர் தினமலர் நாளிதழுக்கு அளித்த பேட்டி

* சாதாரண விசில் சத்தத்தை இசையாக மாற்றும் எண்ணம் உங்களுக்கு எப்போது தோன்றியது?

சிறு வயதில் விளையாட்டாக செய்ததுதான். எங்கள் வீட்டில், பழைய கிராமபோன் ரெக்கர்ட் பிளேயர் இருந்தது. அதில் எம்.எஸ்.சுப்புலட்சுமி, பட்டம்மாள், பாலமுரளி கிருஷ்ணா, ராஜத்தினம் பிள்ளை போன்றவர்களின் இசையை கேட்பேன். அந்த இசையை ஹம்மிங் செய்யும் பழக்கம் இருந்தது. விசில் அடிக்கும் ஆர்வம் இருந்ததால் விசிலாகவே ஹம்மிங் செய்தேன். கேட்டவர்கள் நன்றாக இருப்பதாக பாராட்டியதால் ஆர்வம் அதிகமானது.

* யாரிடம் இசையை முறையாக கற்றுக்கொண்டீர்கள், உங்களை ஊக்கப்படுத்தியது யார் ?

விசில் இசையில் என்னை ஊக்கப்படுத்தியவர் ஆந்திரா கவர்னராக இருந்த கோன பிரபாகரராவ். இவர் எங்கள் குடும்ப நண்பர். என் விசிலிசை கேட்டு பாராட்டினார். ஆனால் இது வேண்டாம், ஏதாவது ஒரு கருவியை கற்றுக்கொள் என்றார். ஹைதராபாத்தில் பாலமுரளி கிருஷ்ணா கச்சேரி நடந்த போது, கவர்னர் பிரபாகரராவ் தலைமை வகித்தார். அந்த மேடையில் பாலமுரளி கிருஷ்ணா முன்னிலையில் எனக்கு வாசிக்கும் வாய்ப்பு கவர்னர் மூலம் கிடைத்தது. விசில் இசை கேட்ட பாலமுரளி கிருஷ்ணா வியந்து பாராட்டினார். சுருதி, லயம் எல்லாம் சுத்தமாக இருக்கிறது. நானே சீடனாக சேர்த்து பயிற்சி கொடுக்கிறேன் என்றார். சென்னைக்கு வந்து இரண்டு ஆண்டுகள் பாலமுரளி கிருஷ்ணாவிடம் குருகுலம் இருந்து கற்றுக்கொண்டேன். ''ராகத்தையும், ஸ்வரத்தையும் கற்றுக்கொள்ளலாம், ஆனால் சுருதியும், லயமும் பிறவியிலேயே வருபவை. அது உனக்கு இருக்கிறது'' என்று அவர் கூறியதை என்னால் மறக்க முடியாது.

* விசில் இசை குறித்து விமர்சனங்கள் எழுந்ததா ?

ஆரம்பத்தில் பாரம்பரிய இசைக்கலைஞர்கள் மத்தியில் விமர்சனம் செய்தனர். இசை தட்டுகளை நகலெடுப்பது போல் இருப்பதாக கூறினார். அந்த விமர்சனங்கள் என்னை மேலும் திறனை வளர்த்து கொள்ள உதவியது. ஆழ்ந்த ஈடுபாட்டுடன் பயிற்சி செய்து சுருதி, லயத்தை மேம்படுத்தி கொண்டேன்.

* ஸ்ரீசத்ய சாய்பாபா உடனான உங்கள் அனுபவங்கள் பற்றி சொல்லுங்களேன் ?

சுவாமிஜி முன்னால் பலமுறை வாசித்து இருக்கிறேன். ஒவ்வொரு முறைகேட்கும் போதும் ஒரு தங்க செயினை பரிசாக கொடுப்பார். எல்லா தசரா பண்டிக்கும் புட்டபர்த்தி போய் பாடி சுவாமிஜியின் ஆசிர்வாதத்தையும் பரிசையும் பெறுவேன். பக்தர் மனதுக்குள் என்ன நினைக்கிறாரோ அதை அறிந்து பாபா கொடுத்து விடுவார். நினைக்காதையும் கொடுப்பார். எனக்கு பல முறை இந்த அனுபவம் நேர்ந்துள்ளது. பாபா மந்திர் உள்ள எல்லா இடங்களுக்கும் சென்று, 2000 நிகழ்ச்சிகள் செய்து இருக்கிறேன்.* இதுவரை எத்தனை கச்சேரிகள் நடத்தி இருக்கிறீர்கள் ?எனது 12 வயதில் இந்த இசை பயணத்தை துவங்கினேன். இந்த 55 ஆண்டுகளில் இந்தியா மட்டுமில்லாமல், 30 நாடுகளுக்கு சென்று, 15 ஆயிரம் இசை கச்சேரிகளை நடத்தி இருக்கிறேன். பல விருதுகளை பெற்று இருக்கிறேன். 20 மாணவர்களுக்கு விசில் இசையை கற்றுக்கொடுத்து இருக்கிறேன். எனது விசில் இசைப்பயணம் நிற்காமல் தொடர்கிறது.

பாண்டி