பழங்கால நாணய சேகரிப்பு... : கைகளில் தவழும் காலப்பெட்டகம்!
பழங்கால நாணய சேகரிப்பு... : கைகளில் தவழும் காலப்பெட்டகம்!
UPDATED : ஜூலை 11, 2026 09:09 PM
ADDED : ஜூலை 11, 2026 06:50 PM

'இன்றைய நிகழ்வுதான் நாளைய வரலாறு' என்பதற்கு மிகச்சிறந்த சான்று நாணயங்கள்.
ஒரு சிறிய உலோகத் துண்டு, அது அச்சடிக்கப்பட்ட காலத்தின் அரசியல், பொருளாதாரம், கலை மற்றும் பண்பாட்டை தன்னுள் சுமந்துகொண்டு நிற்கும் ஒரு காலப் பெட்டகமாகும். நாணயங்கள் வெறும் பணம் மட்டுமல்ல; அவை கடந்த கால மனிதர்களின் வாழ்க்கை முறையையும், வரலாற்று நிகழ்வுகளையும் நமக்கு நேரடியாக உணர்த்தும் ஆதாரங்களாக உள்ளன. புழக்கத்தில் இருந்து மறையும் நாணயங்கள், காலப்போக்கில் நாட்டின் அரிய வரலாற்றுப் பொக்கிஷங்களாக மாறுகின்றன.
''நாணய சேகரிப்பு என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல. அது நம் வரலாற்றையும் பண்பாட்டையும் எதிர்கால சந்ததிக்காக பாதுகாக்கும் உன்னதமான கலை. இதில் மாணவர்கள் ஈடுபடுவது, அவர்கள் வரலாற்றைப் பாதுகாப்பவர்களாக மாறுவதற்கு வழிவகுக்கும்,'' என்கிறார், கடந்த 30 ஆண்டுகளாக நாணய சேகரிப்பில் ஈடுபட்டு வரும் திருப்பூர், கருப்பகவுண்டன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி வரலாற்று ஆசிரியர் வாஞ்சிநாதன்.
அவர் கூறியதாவது:
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முதுகலை வரலாறு படித்துக்கொண்டிருந்தபோது, 1997-ம் ஆண்டு சுந்தரம்பிள்ளை என்ற வழக்கறிஞரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் சில பழமையான நாணயங்களை எனக்கு வழங்கினார். அவற்றைப் பற்றிக் கேட்டபோது, மதுரை வைகை ஆற்றங்கரையில் உள்ள செல்லூர், கோரிப்பாளையம் பகுதிகளில் தங்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் மண்ணைச் சலித்துக் கொண்டிருப்பார்கள்; அப்போது சில பழைய நாணயங்களும் கிடைக்கும் என்று தெரிவித்தார்.
அதன்பின், அங்கு சென்று மக்களைச் சந்தித்து சில நாணயங்களைப் பெற்றேன். மேலும், பழைய நாணயங்கள் யாரிடம் உள்ளன என்று விசாரித்து, சிலவற்றை விலைக்கு வாங்கினேன். வரலாற்று ஆசிரியராக மாணவர்களுக்குக் காட்டி கற்பிக்க உதவும் என்பதற்காகவே நாணயங்களை சேகரிக்கத் துவங்கினேன்.
காலத்தின் கண்ணாடி
எனது சேகரிப்பில் முகலாய மன்னர்கள் வெளியிட்ட நாணயங்கள் உள்ளிட்ட பல அரிய நாணயங்கள் உள்ளன. 1808-ம் ஆண்டு ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி வெளியிட்ட நாணயங்களும், 1736-ம் ஆண்டு டச்சு கிழக்கிந்திய கம்பெனியால் 'நெதர்லாந்து' பெயரில் வெளியிடப்பட்ட '10 காசு' நாணயமும் சேகரிப்பில் இடம்பெற்றுள்ளன.
நமக்குத் தெரிந்த ஒரு அணா, இரண்டா, நாலணா (25 பைசா), எட்டணா (50 பைசா) ஆகியவற்றுடன், காலணா, அரை அணா போன்ற அரிய நாணயங்களையும் சேகரித்துள்ளேன். அக்காலத்தில் நாணயங்கள் காணாமல் போகாமல் இருக்க, மக்கள் அவற்றை அரைஞாண் கயிற்றில் கோர்த்து இடுப்பில் கட்டிக்கொள்வார்கள். பெண்கள் சேலையில் கோர்த்து வைத்துக்கொள்வர். அதற்காகவே நடுவில் துளையுடன் ஓட்டை நாணயங்கள் தயாரிக்கப்பட்டன.
வரலாற்றை எழுதுவதற்கும், ஒரு காலகட்டத்தின் பொருளாதார முன்னேற்றத்தை அறிந்து கொள்வதற்கும் ஆதாரங்கள் மிகவும் முக்கியமானவை. எழுதப்பட்ட மற்றும் தொல்பொருள் ஆதாரங்கள் என இரண்டு வகை ஆதாரங்கள் உள்ளன. அவற்றில் தொல்பொருள் ஆதாரமாக நாணயங்கள் மிக முக்கிய இடம் பெறுகின்றன. நாணயங்கள் தயாரிக்கப்பட்ட உலோகத்தை அடிப்படையாகக் கொண்டு, அக்கால மக்களின் பொருளாதார நிலை, செழிப்பு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை அறிய முடிகிறது.
இன்றைய தொழில்நுட்ப வசதிகள் இல்லாத சங்ககாலத்திலேயே, வடிவமைப்பு எளிமையாக இருந்த நாணயங்களில் கூட முத்திரைகள் பதிக்கப்பட்டிருப்பது மாணவர்களை ஆச்சரியப்படுத்துகிறது. அவற்றில் காணப்படும் எழுத்துக்கள் தமிழ்- பிராமி எழுத்துகளாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 'இன்றைய நிகழ்வுதான் நாளைய வரலாறு' என்ற அடிப்படையில், இன்று நாம் பயன்படுத்தும் நாணயங்கள்கூட எதிர்கால தலைமுறைக்கு அரிய வரலாற்று ஆவணங்களாக மாறக்கூடும்.
