ADDED : ஜூலை 12, 2026 09:05 AM

பளபளக்கும் கன்னம், பால் முகம், பளிச்சிடும் கண்கள், பட்டான இதழ்கள், பன்னீர் பூவின் மென்மையாய் பறக்கும் கூந்தல் என அனைத்திலும் ரசனையை எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டோம். அதனால் 'ஸ்கின் கேர்' பொருட்களின் விற்பனையும் எகிறி விட்டது.
கலை, இலக்கியம், கலாசாரத்தில் மட்டுமின்றி 'ஸ்கின் கேர்' பொருட்களிலும் அமெரிக்கன், கொரியன் தயாரிப்புக்கு இளசுகளிடம் வரவேற்பு அதிகரித்துள்ளது. அந்தந்த நாட்டு மக்களின் சருமத்திற்கேற்ப தயாரிக்கப்பட்ட பொருட்கள் இந்திய மக்களுக்கு முழுமையாக பொருந்தாது. நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் தான் நமக்கு செட் ஆகும் என்கிறார் திண்டுக்கல் பட்டிவீரன் பட்டியைச் சேர்ந்த ஆங்கில மொழி ஆராய்ச்சியாளர் வசுமதி.
ஆங்கிலத்தில் ஆராய்ச்சிப்பட்டம் (பிஎச்.டி.,) முடித்த கையோடு தொழில்முனைவோர் ஆன கதையை விவரித்தார்.
சொந்த ஊர் ஈரோடு. பெற்றோர் சரவணன், கார்த்தீஸ்வரி இருவரும் பேராசிரியர்கள். நானும் கல்லுாரியில் உதவி பேராசிரியையாக மூன்றாண்டுகள் வேலை பார்த்தேன். புதுச்சேரி சென்ற போது அங்கு கையால் தயாரிக்கப்படும் சோப்புகளை வாங்கினேன். அதன் வாசனை வித்தியாசமாக இருந்ததால் என்னைக் கவர்ந்தது. இயற்கை சோப் தயாரிப்பு பற்றி பயிற்சி பெற்றேன். லண்டனில் உள்ள நிறுவனத்தில் ஆன்லைன் மூலம் ஆறுமாத கால 'ஹெர்பல்' பொருட்கள் தயாரிப்பு பயிற்சி பெற்றேன். அதன்பின்பே சுயமாக தொழில் தொடங்க நினைத்தேன்.
கணவர் ஸ்ரீபதிபாண்டியனின் சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியில் 'செட்டில் ஆகி' வத்தலக்குண்டில் ஹெர்பல் தயாரிப்பு யூனிட் ஆரம்பித்தோம்.
வெப்பமில்லாத குளிர்பதன (கோல்டு பிராசஸ்) முறையில் தயாரிக்கப்படும் சோப்பிற்கு நல்ல வரவேற்பு இருந்தது.
எண்ணெய், வெண்ணெயுடன் சோடியம் ஹைட்ராக்ஸைடு சேர்க்கும் போது அவை கெட்டியாகி அந்த வேதிப்பொருள் ஆவியாகி விடும். இதில் வெப்பப்படுத்தும் வேலையில்லை. முன்னோர்கள் கண்டுபிடித்த பாரம்பரிய சோப்பு தயாரிக்கும் முறை இது. இந்த வகை சோப்பில் வாசனை, மூலப்பொருள் மட்டும் மாற்றி நிறைய வகைகள் தயாரிக்கிறேன். இது முழுக்க தாவரப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்டது என்பதால் உடலுக்கு தீங்கில்லை.
ஸ்ட்ராபெரி, மாதுளை, பப்பாளி சாறெடுத்து பவுடராக்கி பேஸ்வாஷ் தயாரிக்கிறோம். ஷியா பட்டர், மா விதை எண்ணெய், ரோஷிப் எண்ணெய், ஸ்வீட் ஆல்மண்ட் ஆயில் ஆகியவற்றை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்கிறோம். கடையில் வாங்கும் சென்ட் பாட்டிலில் ஆல்கஹால் கலந்திருப்பதால் அதற்கு மாற்றாக கோகோ பட்டர், தேங்காய் எண்ணெய், வாசனை மூலிகைகள் கலந்து 'சாலிட் சென்ட்' தயாரிக்கிறோம். அதை 'டியோரன்ட்' போல தடவினால் வாசனையாக இருக்கும்.
இங்குள்ள தாவரங்கள், பூக்கள், பழங்களில் இருந்து அழகுப்பொருட்கள் தயாரிக்கிறோம்.
எனது தயாரிப்புகளை முதலில் நான் பயன்படுத்தி அதன் ரிசல்ட் பார்த்தபிறகே விற்பனை செய்கிறேன்.
விருப்பத்திற்காக பிஎச்.டி., முடித்தாலும் தொழில்முனைவோர் என்று சொல்வதில் எனக்குப் பெருமை என்றார் வசுமதி.
இவரிடம் பேச 81229 14277.
