ADDED : மார் 15, 2026 05:29 AM

ஆ தரவற்ற குழந்தைகள், முதியோர் இருக்கும் இடங்களுக்கே சென்று சேவை செய்கிறார் ஒண்டிப்புதுார் மருதாசலமூர்த்தி.
முடி திருத்தும் கலைஞரான இவர் ஏழைகளுக்கு இலவசமாக சிகை அலங்காரம் செய்கிறார். ரத்த தானம், கண் தானம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார். இறந்தவரின் கண்களுக்கு ஓய்வில்லை என்று கண்களை தானமாக பெற்று பார்வையற்றவர்களுக்கு பார்வை கிடைக்க உதவுகிறார்.
''சிறு வயதிலேயே வறுமையில் வாடியவன் நான். அந்த கஷ்டத்தை என் கண்முன் குழந்தைகள் படக்கூடாது என்று நினைக்கிறேன். கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் உதவியுடன் இயன்ற உதவியை 27 ஆண்டுகளாக செய்கிறேன்.
யோகி ராம்சுரத்குமார் அருளால் காப்பகங்களில் தங்கியிருக்கும் குழந்தைகளுக்கு வெள்ளிதோறும் இலவசமாக சிகை அலங்காரம் செய்கிறேன். ரத்ததான முகாம்கள் நடத்துகிறேன். இதுவரை, 20 ஆயிரம் யூனிட் ரத்தம் தானமாக பெற்று உதவியுள்ளேன். மக்களிடம் துணி, அரிசி, காய்கறி சேகரித்து முதியோர் இல்லங்களுக்கு வழங்குகிறேன். 4,200 பேருக்கு கண் தானம் வழியாக ஒளி தந்துள்ளேன் என்கிறார் மருதாசலமூர்த்தி.
உதவிக்கு 98940 66569 என்ற எண்ணில் மருதாசல மூர்த்தியை தொடர்புகொள்ளலாம்.

