தரைமேல் பிறக்க வைத்தான்... எங்களை ‘கண்ணீரில்’ பிழைக்க விட்டான்!
தரைமேல் பிறக்க வைத்தான்... எங்களை ‘கண்ணீரில்’ பிழைக்க விட்டான்!
ADDED : ஆக 29, 2026 04:31 PM

இன்று தமிழகத்தில் தெருக்கூத்து கலை மெல்ல அழிந்து வருகிறது. வேறு வழியின்றி கலைஞர்கள் வேறு தொழிலுக்கு செல்லும் நிலை காணப்படுகிறது.
அதேசமயம், தலைமுறையாக சோறு போட்ட கலையை கைவிட மனமில்லாமல் கிடைப்பதை வைத்து பிழைப்பை நடத்தும் கலைஞர்களும் உண்டு.
அப்படி, கோபி செட்டிபாளையத்தை சேர்ந்த சண்முகம்–ஜெயந்தி தம்பதியர் காந்திபுரம் திருவள்ளுவர் பஸ் ஸ்டாண்ட் எதிரே நடனம் ஆடிக்கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது. 55 வயதை கடந்த இருவரும் எம்.ஜி.ஆர்.பாடல்களுக்கு நடனமாடினர்.
களைத்துப்போன இருவரும் மர நிழலில் அமர்ந்து டீ குடித்துக்கொண்டிருந்தனர். அவர்களிடம் பேசினோம்.
‘‘சொந்த ஊர் கோபி செட்டிபாளையம் அழுக்குழி அருகே எம்.ஜி.ஆர். நகர். இரண்டு பசங்களும், ஒரு மகளும் என வேலைக்கு செல்கின்றனர். நாங்கள் தினமும் ஒரு ஊருக்கு சென்று எம்.ஜி.ஆர்., சிவாஜி, ராமராஜன் பாடல்களுக்கு டான்ஸ் ஆடுவோம். நான் கோமாளி வேடம் போடுவேன்,’’ என்றார் சண்முகம்.
தொடர்ந்த ஜெயந்தி, ‘‘தினமும் தட்டில் விழும் காசு வாடகை, சாப்பாடு, போக்குவரத்துக்கு சரியாக இருக்கும். எங்களுக்கு இந்த டான்ஸ் வேலையை விட்டால் எதுவும் தெரியாது. உயிர் போகும் வரை விடமாட்டோம். நாங்கள் படும் கஷ்டத்தை பார்த்து சாய்பாபா காலனியை சேர்ந்த ஒருவர் சின்னதாக, ஒரு ஸ்பீக்கர் பொட்டி வாங்கி கொடுத்தார். மழை வந்துவிட்டால் எங்கேயும் போகமுடியாது; அன்றைக்கு பட்டினிதான்,’’
–அவர் பேச பேச, சண்முகம் எழுந்து சென்று ‘நாளை நமதே...இந்த நாளும் நமதே...’ என்ற பாடலை ஒலிக்க விட்டார்.
நம்பிக்கையுடன் ஸ்டெப்ஸ் போடத் துவங்கினார் ஜெயந்தி.
