தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/விருந்தினர் பகுதி/ எல்லாவற்றையும் மாற்றி விடாது

 எல்லாவற்றையும் மாற்றி விடாது

 எல்லாவற்றையும் மாற்றி விடாது


ADDED : மார் 15, 2026 05:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2026 05:25 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஓ வியர், சிற்பி என இருமுகம் கொண்டவர் சந்துரு. சென்னை ஓவிய கல்லுாரி முதல்வர் பணியை விட்ட பிறகு, அம்பாசமுத்திரத்தில் 'குருவனம்' என்ற திறந்தவெளி ஓவிய மற்றும் சிற்ப பள்ளி நடத்தி வருகிறார். கோவையில் மத நல்லிணக்க ஓவிய கண்காட்சியை துவக்கி வைக்க வந்தார். உரையாடலே செதுக்கலாக அமைந்தது...!

கலை என்பது என்ன ?

மனம் லயித்து செய்வது எல்லாமே கலைதான்.

ஓவியம் வரைவதை சொல்கிறீர்களா, சிற்பம் செதுக்குவதை சொல்கிறீர்களா?

சமையல் செய்வதும், முடி வெட்டுவதும் கலைதான்.

எல்லாருமே கலைஞர் என்றால் அதற்கென தகுதி வேண்டாமா?: எதை செய்தாலும் லயித்து, ரசித்து செய்பவன் கலைஞன். அவனுடைய படைப்பை ரசித்து மதிப்பவனும் கலைஞன். அந்த தகுதி போதும்.

மரபு ஓவியம்: உள்ளதை உள்ளபடி வரைவது மரபு ஓவியம். ஒன்று வரைய அரை நாள் ஆகும். இன்றைக்கு கேமராவில் ஒரு நிமிடத்தில் வரைந்து விடலாம். நவீன ஓவியம் மாடர்ன் ஆர்ட். பலர் அதை கோண மூஞ்சி ஓவியம் என்கிறார்கள். அப்படி அல்ல. ஓவியன் தன் உணர்வுகளை வெளிப்படுத்த வெவ்வேறு வழிகளை தேர்வு செய்கிறான். சிலருக்கு சட்டென புரியும். பலருக்கு தாமதம் ஆகும்.

மக்களுக்கு ஓவியங்கள் மீதான ரசனை மாறிவிட்டதா ?

ஓவியமே மாறும்போது ரசனை தேங்குமா? அது மனம் சார்ந்தது. மகிழ்ச்சி தருவதை போற்றுவது ரசனை. தீட்டுபவனுக்கும் திருப்தி தர வேண்டும். தரவில்லை என்றால் வரைய தேவையில்லை.

படைப்புகள் வழியாக உலகத்துக்கு ஓவியர்கள் சொல்ல நினைப்பது என்ன?: இதற்கான பதில் அந்தந்த ஓவியத்திடம் கிடைக்கும். சித்திரம் தீட்டுவது ஒருவகை தகவல் பரிமாற்றம். ஒரு வண்டு மலரில் அமரும் போது மலருக்கும், வண்டுக்கும் தகவல் பரிமாற்றம் நடக்கிறது.

இப்படி பிரபஞ்சம் முழுவதும் இயற்கையின் தகவல் பரிமாற்றம் நிகழ்கிறது. மொழி வழியான, எழுத்து வழியான தகவல் பரிமாற்றம் உருவாவதற்கு முன்பே ஓவியம் வழியான தகவல் பரிமாற்றம் இருந்தது. பாறை ஓவியங்கள் ஒரு சான்று.

அதன் பிறகு காட்சி வழி தகவல் பரிமாற்றம் எத்தகைய மாற்றங்களை சந்தித்தது?: ஆதியில் மனித உடல், முகம், விலங்கு, இயற்கை காட்சிகள் வரைந்தனர். கி.பி. 14ம் நுாற்றாண்டுக்கு பிறகு அறிவியல் பரவல், அதன் பிறகு 250 ஆண்டு கடந்ததும் இயந்திர கண்டுபிடிப்புகள், அதற்கு அப்புறம் உலக யுத்தம், வர்த்தகம், உலகமயம், பண்பாட்டு நெருக்கடி ஆகியவற்றால் மனிதனின் மனநிலையில் உருவான மாற்றங்கள், ஓவியங்களில் தாக்கத்தை உண்டாக்கின. படிப்படியாக பார்த்தால் புரியும்.

கலைக்கு எல்லைகள் இல்லை தானே?: கலை என்பது நாடற்றது மொழியற்றது மதமற்றது என்கிறார்கள். ஆனால், அதெல்லாம் இல்லாமல் கலை உருவாகாது. எல்லா மதங்களும் அன்பை பேசுகின்றன. எல்லா மதங்களிலும் மகான்கள் உள்ளனர். ஆனால் மதத்தின் பெயரால் கலவரங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. ஆகவே, கலை என்பது சுதந்திரமானது.

இன்றைய இளைஞர்களிடம் ஓவியம்: இன்று இளைஞர்கள் இந்த கலைகளின் அடிப்படையை கற்று கொண்டு, அங்கிருந்து தனக்கு பிடித்தமான வழியில் எடுத்து சென்று தொழில் செய்கின்றனர். சிலர் கலைக்கு உரிய மரியாதையை கொடுக்கின்றனர். சிலர் வெறும் வியாபாரமாக பார்க்கின்றனர். எது சரி, எது தவறு என்று ஆராய அவசியம் இல்லை.

ஏ.ஐ. தொழில்நுட்பம் வளர்ந்து வரும் வேளையில்: ஏஐ பிரமிப்பூட்டும் தொழில்நுட்பம். ஆனால் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றி விட முடியாது. மனமும், உடலும் விரும்பி செய்யும் கலையில்தான் புதிய வடிவங்களை படைக்க முடியும். மற்றவை எல்லாம் துணை கருவிகள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us