UPDATED : அக் 20, 2024 12:33 PM
ADDED : அக் 20, 2024 12:31 PM

டாக்டர், பரதநாட்டிய டான்சர் மற்றும் பயிற்சியாளர், வீணை கலைஞர்,
தொழில்முனைவோர், சமூக சேவகர், ஆலோசகர் என பல பரிமாணங்களில் ஜொலிக்கிறார்
டாக்டர் ரோஷிணி.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே எம்.புதுப்பட்டி என்ற குக்கிராமத்தைச் சேர்ந்த ரோஷிணி சென்னை சென்று கடும் உழைப்பால் 25 வயதிற்குள்ளாக இந்த சாதனைகளுக்கு சொந்தக்காரராக திகழ்கிறார். யுவ ஸ்ரீ கலா, சிறந்த கிளாக்சிக்கல் டான்ஸர், அறம் அறக்கட்டளையின் சாதனையாளர் என இவர் பெற்ற பல விருதுகளிலிருந்து இவரது திறமையை தெரிந்து கொள்ள முடியும்.
தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக இவருடன் பேசியதிலிருந்து...
அப்பா செல்வம் இசக்கியப்பன் பிசினஸ்மேன். அம்மா தங்கம் குடும்பத்தலைவி. குழந்தையாக இருக்கும் போதே டாக்டராக வேண்டும் என கூறுவேன். பள்ளிப்பருவத்திலிருந்து டாக்டருக்கு தயார்படுத்த எனக்காக பெற்றோர் சென்னைக்கு குடிபெயர்ந்து விட்டனர். பரதநாட்டிய வகுப்பிலும் பெற்றோர் சேர்த்து விட்டனர். சிறிய வயதில் வீடு உள்ளிட்ட எந்த இடங்களுக்கு சென்றாலும் ஆடிட்டேகிட்டே இருப்பேனாம். இது பரதகலை மீது ஈடுபாடு கொள்ள வைத்தது.
சென்னையில் பள்ளி படிப்பை துவங்கி, மருத்துவம் முடித்தேன். பரதத்தையும் விடவில்லை. பத்து வயதில் சென்னை மியூசிக் அகாடமியில் பரதநாட்டிய அரங்கேற்றம் நடந்தது. சரண்யாசாய் பிரசாத் என் குரு. அவர் கலை மீதான நுணுக்கங்களை கற்று கொடுத்தார்.
பரதகலையில் கலாஷேத்ரா, பங்கநல்லுார், மேலட்டூர் என பல்வேறு ஸ்டைல்கள் உள்ளன. இதில் பங்கநல்லுார் ஸ்டைல் பழமையானது. தஞ்சாவூர் பகுதியில் பிரபலம். ஒவ்வொரு ஸ்டைலிலும் முத்திரை, வேகம் வேறுபடும். இப்போதும் என்னால் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் எனர்ஜியுடன் பங்கநல்லுார் ஸ்டைலில் பரதம் ஆட முடியும். அந்தளவுக்கு திகழ என் குரு கொடுத்த பயிற்சி தான் காரணம்.
தற்போது இரண்டு மருத்துவமனைகளில் பணிபுரிந்து கொண்டே பரதநாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறேன். கம்போடியன் தமிழ் சங்கம், மகாபலிபுரம் இந்திய நடன திருவிழா, சிதம்பரம் நாட்டியாஞ்சலி, தஞ்சாவூர், சமீபத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார் ஆடிப்பூரத்திருவிழா வரை என் பரதநாட்டியம் நடந்து கொண்டு இருக்கிறது.
என் குரு நடத்தும் நடன பயிற்சி பள்ளியில் ஓய்வு நேரங்களில் பரதநாட்டிய கலையை கற்று கொடுத்தும் வருகிறேன். ஆன் லைன் வகுப்பும் உண்டு. தற்போது வெளிநாடுகளைச் சேர்ந்த பல இளம்பெண்கள் பயிற்சி பெறுவதுடன் பலர் வெளிநாடுகளிலிருந்து ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கின்றனர்.
இதற்கிடையில் நண்பர் டாக்டர் விமல்குமாருடன் இணைந்து ெஹல்த்கேர் நிறுவனம் ஒன்றையும் துவக்கியுள்ளேன். இதன் மூலம் அரசு பள்ளிகளுக்கு இலவசமாகவே மருத்துவ முகாம்களையும் நடத்துகிறேன். இந்த பணிகளுக்கு மத்தியில் வீட்டில் ஓய்வு தருணங்களில் வீணையும் இசைப்பேன். அதற்கும் சரண்யா சாய் பிரசாத் தான் குரு.
நான் பரதம் ஆடுவதை கண்டு என் அம்மா, அவரது 40 வயதில் என் குருவிடம் பரதநாட்டியம் கற்றார். தற்போது அவரும் சிறப்பாக பரதம் ஆடுகிறார். இளம்பெண்கள் நேரம் இல்லை, வாய்ப்பு இல்லை என வீடுகளில் முடங்கி விடக்கூடாது. ஆர்வம் இருந்தால் என் அம்மா போல 40 வயதிலும் கற்கலாம்.
மதுரையில் சில ஆண்டுகளுக்கு முன் ஸ்பாட்லைட் புக் ஆப் ரிக்கார்ட்ஸ், ைஹரேஞ்ச் புக் ஆப் வேல்ர்டு ரிக்கார்ட்ஸ் இணைந்து நடத்திய பரதநாட்டிய மாரத்தானில் பங்கேற்றதை மறக்க முடியாது. சில மாதங்களுக்கு முன் சிதம்பரம் கோயில் விழாவில் காய்ச்சலுடன் வேகம் குறையாமல் பரதம் ஆடினேன். என் நடனத்தை விழாவில் பங்கேற்ற கலைஞர்கள் பாராட்டிய போது காய்ச்சல் இருப்பதே மறந்து போனது.
இன்று பலர் வீடு, தொழில் என இருப்பதுடன் உடலுக்காக எந்த பயிற்சியும் எடுக்காதது நோய்களுக்கு காரணமாக இருக்கிறது. அவர்களிடம் உங்களுக்கு பிடித்த உடலுக்கு பயிற்சியளிக்க கூடிய விஷயத்தை செய்யும்படி, குறிப்பாக நடக்கலாம்; நடனமாடலாம். வேறு விஷயங்களில் ஈடுபடலாம் என ஆலோசனைகளை வழங்கியும் வருகிறேன். ஓடி ஆடி தங்களுக்கு பிடித்தமான விஷயங்களை செய்தாலே போதும் மனது 'பிரீ'யாகும். நோய்களும் அண்டாது.
இறுதி வரை மருத்துவத்தையும், பரதத்தையும் இணைந்தே கொண்டு செல்ல வேண்டும். முதுகலை மருத்துவம் பயிலவும் தயாராகி வருகிறேன்.
ஆன்லைன் வகுப்புக்கு நேரமாகிவிட்டது என்றவாறு நம்மிடமிருந்து விடைபெற்றார் இந்த சகல கலாவல்லி.