உடலை இரும்பாக்கும் கர்லா கட்டை பயிற்சி தமிழகத்தின் முதல் பெண் பயிற்சியாளர் ஸ்வாதி கிருஷ்ணன்
உடலை இரும்பாக்கும் கர்லா கட்டை பயிற்சி தமிழகத்தின் முதல் பெண் பயிற்சியாளர் ஸ்வாதி கிருஷ்ணன்
ADDED : அக் 01, 2023 07:46 AM

இ .ந்த காலத்தில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஜிம், யோகா, ஓட்டம் என எதையாவது பிடித்து மக்கள் ஓடிக்கொண்டிருக்கின்றனர். குறிப்பாக கொரோனாவுக்கு பிறகு வாழ்வியலை மாற்ற வேண்டும், ஆயுளை பெருக்க வேண்டும் என்று பல உடற்பயிற்சி முறைகளை பின்பற்றி வருகின்றனர். அந்த வகையில் தமிழர் மரபில் தோன்றிய கர்லா கட்டை பயிற்சி பலரால் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. இதில் தமிழகத்தின் முதல் சர்வதேசபெண் பயிற்சியாளராகவும், உலக சாதனை செய்தவராகவும் உள்ளவர் ஸ்வாதி கிருஷ்ணன்.
இவர் கூறியதாவது....
சொந்த ஊர் ஈரோடு சத்தியமங்கலம். எம்.பி.ஏ., பட்டதாரி. 2016ல் தொழில்முனைவோராக என் பயணத்தை துவங்கினேன். அதற்கு முன் வரை ஐ.டி., பணியில் இருந்தேன். 2019ல் பிசினஸ் இறங்குமுகமானது. எனது ஆரோக்கியமும் பாதிக்கப்பட்டதை உணர்ந்தேன். மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் சிக்கி தவித்தேன்.யோகா, சூரிய நமஸ்காரம் செய்து வந்தாலும் புதிதாக ஏதாவது கற்றுக் கொள்ள வேண்டும், உடலை பலப்படுத்த வேண்டும் என்று விரும்பினேன்.
அப்போது தான் தமிழர் மரபின் அடிமுறை பற்றி தெரிந்து கொண்டேன். கர்லா கட்டை பற்றியும், அதன் பயிற்சி முறையான மெய்பாடம் பற்றியும் தெரிந்தது. மெய்பாடம் என்பது சுவாச முறையுடன் கூடிய கர்லாவை கொண்டு சுழற்றும் உடற்பயிற்சி முறை.
அப்போது கொரோனா ஊரடங்கு. நான் புதுடில்லியில் இருந்து ஆன்லைன் வழியாக கற்க முயற்சித்தேன். பிறகு புதுச்சேரி ஜோதி என்பவரிடம் கற்றுக் கொண்டேன். மெய்பாடம் பயிற்சியாளராக மாறி நான் பிறருக்கு கற்றுக் கொடுக்க துவங்கினேன். ஒன்று, இரண்டு என நாளுக்கு நாள் என்னிடம் பயிற்சி பெறுவோர் அதிகரித்தனர்.
2022 ஜனவரியில் முதல் தமிழ் பேசும் சர்வதேசபெண் பயிற்சியாளராக அங்கீகரிக்கப்பட்டேன். 2022 டிசம்பரில் அரை மணி நேரத்தில் கர்லா கட்டையில் 1700 முறை முன்புற சுற்று செய்து உலக சாதனை படைத்தேன். இதை 'அசிஸ்ட் வேர்டு ரெக்கார்டு' அமைப்பு அங்கீகரித்தது.
என்னிடம் நெதர்லாந்து, மெக்சிகோ, மலேசியா, சிங்கப்பூர், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் இருந்து ஆன்லைன் மூலம் கற்றுக் கொள்கின்றனர். நேரடி பயிற்சியும் தருகிறேன். என்னுடைய பயிற்சி கூடம் புதுச்சேரியில் உள்ளது. www.swathikarlakattai.com இணையதளத்தில் அணுகலாம்.
இந்த பயிற்சியால் உடல் பல வகைகளில் நன்மை அடைகிறது. பெண்களுக்கு மாதவிடாய் பிரச்னைகள், மூட்டுவலி, முதுகுவலி போன்ற பிரச்னைகள் மெய்பாடம் செய்து நன்றாக சாப்பிட்டால் குணமாகும். ஆண்களுக்கு பணியின் போது நீண்ட நேரம் உட்கார்ந்தே இருப்பதால் ஏற்படும் முதுகுவலி, தோள்பட்டை வலியையும் குணப்படுத்தும். அவர்களது உயரத்திற்கு ஏற்ற எடையை தொடர்ந்து பராமரிக்க உதவும். கோயில் சிலைகளில் உள்ள அங்கலட்சணத்தை மெய்பாட பயிற்சிகள் தரும், என்றார்.
