ADDED : மார் 15, 2026 10:35 AM

அப்பா மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., கட்சி துவங்கிய போது மைக்செட் அமைத்தவர் என்றால், மகனோ மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்ற இசைக்கச்சேரிகளுக்கு சவுண்ட் இன்ஜினியராக பணிபுரிந்து வருபவர். எஸ்.பி.,பாலசுப்பிரமணியம் அளித்த ஊக்கத்தால் பாடகராகவும் உயர்ந்திருக்கிறார். பாடகியான மனைவியுடன் இணைந்து முழுநேர தொழிலாக ஜனரஞ்சிதா இசைக்குழுவை துவக்கி இசைக்கச்சேரிகளை நடத்தி வருகிறார்.
இந்த இசை ஜோடி... மதுரை ஆசிக்முகமது - ஜாஸ்மின் பாத்திமா.
இசைப்பயணம் தொடர்பாக தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக ஆசிக்முகமது மனம் திறந்ததாவது...
அப்பா ஹமீது. திருப்பரங்குன்றத்தில் ஹமீது ரேடியோஸ் என்ற பெயரில் மைக்செட் சவுண்ட் சிஸ்டம் நடத்தியவர். மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., திருப்பரங்குன்றத்தில் அ.தி.மு.க.,வின் அரசியல் மாநாட்டை நடத்தினார். யாரும் அப்போதைய ஆளுங்கட்சிக்கு பயந்து மைக்செட் அமைக்க முன்வரவில்லை. அப்பா தைரியமாக முன்வந்தார். இதை அறிந்த எம்.ஜி.ஆர்., மனம் நெகிழ்ந்து, இனி இப்பகுதியில் எங்கு கூட்டங்கள் நடந்தாலும் நீங்கள் தான் மைக்செட் அமைக்கணும் எனக் கூறி விட்டார். எம்.ஜி.ஆர்., கூட்டங்கள் என்றாலே ஹமீது ரேடியோஸாக தான் இருக்கும்.
அப்பாவுடன் சவுண்ட் சிஸ்டம் அமைக்க நானும் செல்வேன். இத்துறையில் தொழில் நுணுக்கங்களை கற்று கொள்ள சவுண்ட் இன்ஜினியரிங் பட்டம் முடித்தேன். தற்போதைய நவீன தொழில் நுட்ப புரட்சிக்கு இசைக்கச்சேரிகளுக்கு சவுண்ட் சிஸ்டம் அமைத்து வருகிறேன்.
இசைக்கச்சேரிகளுக்கு செல்லும் போது மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடல்களை கேட்டு அவரை போல பாட ஆசை ஏற்பட்டது. அதற்கு ஏற்றாற் போல என்னுடைய வாய்ஸ் அமைந்ததால் நானும் கச்சேரிகளில் பாட துவங்கினேன்.
ஒரு முறை வானொலி அறிவிப்பாளர் அப்துல் ஹமீது சிங்கப்பூரில் இசைக்கச்சேரி நடத்திய போது, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பங்கேற்றார். அவர் வருவதற்கு முன் ஒத்திகை பார்த்து கொண்டிருந்தோம். அப்போது எஸ்.பி. பாலசுப்பிரமணியம் போல ஒத்திகைக்காக என்னை பாட அழைத்தனர். நான் பாடிக்கொண்டிருந்த போது அரங்கிற்கு வந்த எஸ்.பி.பி., வெளியில் நின்று நான் பாடுவதை கேட்டுகொண்டிருந்துள்ளார். பிறகு மேடை ஏறியதும் என்னை அழைத்து நன்றாக பாடியதாக கூறி 'தொடர்ந்து பாடு' என ஊக்கம் கொடுத்தார். அன்று துவங்கிய இசைப் பயணம் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்கிறது.
மனைவி ஜாஸ்மின் பாத்திமாவும் பாடகி. டிவி நிகழ்வுகளில் சிறந்த பாடகி விருது பெற்றவர். விளம்பர படங்களிலும் பாடியிருக்கிறார். இரு குடும்பத்தினருக்கும் அறிமுகம் இருந் ததால் திருமணம் செய்து கொண்டோம் . கச்சேரிகளில் ஒன்றாக எங்களின் இசை பயணம் தொடருகிறது.
பாடகர்கள் மனோ, உன்னிகிருஷ்ணன், உன்னிமேனன், பி.சுசீலா, ஜானகி கச்சேரிகளுக்கு சவுண்ட் சிஸ்டம் அமைத்து பாடியும் இருக்கிறேன்.
நாகர்கோவில் கிருஷ்ணன் கோயில் விழாவில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைந்த பிறகு நடந்த இசைக்கச்சேரியில் அவர் பாடிய தேரே மேரே பீச் ேஹ ஹிந்தி பாடலை பாடிக் கொண்டிருந்தேன். கூட்டத்தில் இருந்த முதியவர் உங்கள் குரல் எஸ்.பி.பி., போல இருக்கிறது என பாராட்டி ரூ.100 ஐ எடுத்து கொடுத்தது என்னை நெகிழ்ச்சியடைய வைத்தது. இன்றளவும் அந்த ரூபாயை பத்திரப்படுத்தி வருகிறேன்.
நன்றாக பாடக்கூடிய இளைஞர்கள் சரியான வாய்ப்பு இன்றி திறமைகளை மழுங்கடித்து கொள்கின்றனர். அப்படிப்பட்டவர்களை என் இசைக்கச்சேரிகளில் மேடை ஏற்றி பாட வைத்து வருகிறேன். ரசிகர்கள் விரும்பும் வகையில் இசைச் சேவையை தொடர்வது தான் என் ஆசை என்றார்.
இவரை வாழ்த்த 80981 13221

