தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/விருந்தினர் பகுதி/நாடகம் கற்றுத் தருவது என்ன - பார்த்திப ராஜாவின்'நெடும்பயண' அனுபவங்கள்

நாடகம் கற்றுத் தருவது என்ன - பார்த்திப ராஜாவின்'நெடும்பயண' அனுபவங்கள்

நாடகம் கற்றுத் தருவது என்ன - பார்த்திப ராஜாவின்'நெடும்பயண' அனுபவங்கள்


ADDED : மே 26, 2024 11:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 26, 2024 11:06 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மொழி, இலக்கியம், வரலாறு என 46 நுால்கள் எழுதி உள்ள பார்த்திபராஜா அடிப்படையில் தமிழ் பேராசிரியர், பலர் போற்றும் நாடக நடிகர். சொந்த ஊர் ராமநாதபுரம் பெருவாக்கோட்டை. திருப்பத்துார் துாய நெஞ்சக்கல்லுாரியில் பணிபுரிகிறார். 'நெடும்பயணம்' நாடகம் எழுதிய இவருடன் உரையாடியதில் இருந்து...

* நாடகங்கள் மீது ஈர்ப்பு எப்படி...


கருமை நிறம், மெலிந்த உடல்வாகோடு இருக்கும் நாடக கலைஞர்கள் ஒப்பனை செய்த பின் மகாராஜாவாகவோ, தெய்வம் போன்றோ மாறுகின்றனர். இதை நான் அருகில் அமர்ந்து பார்த்தேன். கண் முன்னால் ஒரு மனிதனால் இன்னொரு மனிதனாக மாற முடியுமா என்ற ஆச்சரியம் அடைந்தேன். நாடக தமிழை படிக்க விரும்பினேன். சென்னைக்கு படிக்க வந்த பின் தொழில் முறை நாடக கலைஞர்களிடம் அறிமுகமானேன். ஆர்.எஸ்.மனோகரிடம் பழகும் வாய்ப்பு கிடைத்தது. நவீன நாடகங்கள், புரிசை கண்ணப்பதம்பிரானின் தெருக்கூத்து பார்த்தேன். கல்லுாரியில் படித்த காலத்திலும், பேராசிரியர் ஆன பிறகும் நாடகம் எழுத, இயக்க, நடிக்க என 25 ஆண்டுகளாக பயணித்து கொண்டிருக்கிறேன்.

* நவீன நாடகங்கள் என்றால் என்ன


புராணம், இதிகாசத்தை அப்படியே சொல்வது நவீன நாடகங்கள் இல்லை. அதில் சமகால தேவை என்ன உள்ளது என்ற கேள்வி கேட்பது தான் நவீன நாடகம். இசை, வசனங்கள், பாடல்களை கையாளும் விதம் புதுமையாக அணுகப்பட வேண்டும். அந்த வகையில் நான் 'நெடும் பயணம்' என்ற நாடகம் எழுதினேன்.

முல்லைக்கு தேர் கொடுத்த பாரி மன்னன் ஆட்சி செய்தது பரம்பு மலை. சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் அவனுடைய மகளை மணமுடிக்க கேட்கின்றனர். அவர் மறுக்கிறார். போரில் பாரி கொல்லப்பட்ட பின், அவரது நண்பர் புலவர் கபிலர் இரு மகள்களை திருமணம் செய்து கொடுக்க ஒவ்வொரு மன்னனாக பார்க்கிறார்.

இன்னொரு பகுதியாக திருப்பத்துார் ஜவ்வாது மலை உள்ளது. நிறைய சந்தன மரங்கள் இருந்தன. நாளடைவில் மரங்கள் வெட்ட வெட்ட அம்மக்கள் வளத்தை இழந்தனர். அங்கிருந்த பூர்வகுடிகள் பிழைப்புக்காக பெங்களூருவுக்கு கட்டட கூலிகளாக இடம்பெயர்கின்றனர். இரு தரப்பு மக்களும் ஏன் மலையை விட்டு வருகிறோம் என உணர்ச்சிப்பூர்வ வசனங்கள் மூலம் விவரிப்பர். இது தான் நெடும் பயணத்தின் கதை.

* நாடக பயிற்சிகள் உண்மையில் ஆளுமையை மேம்படுத்துகிறதா


கீச்சு கீச்சு குரல், தெளிவில்லாத பேச்சு சிலருக்கு இருக்கும். இதை சரி செய்ய நாடகத்திற்கு நாம் எடுக்கும் குரல் பயிற்சி உதவும். ஒரு நடிகன் எப்படி குரலை, உடல், மனதை பயன்படுத்த வேண்டும் என நாடக பயிற்சி கற்று தருகிறது. உடல், குரல், மனம் மூன்றையும் ஒரே நேர்கோட்டில் யார் செயல்பட வைக்கிறாரோ அவர் வெற்றிகரமான நடிகராக மேடையில் நிற்க முடியும்.

வெற்றி பெறும் வரை போராடுவதையும், கூட்டு உழைப்பையும் நாடகங்கள் கற்று தரும். 25 பேர் நாடகம் நடிக்கும் போது ஒருவருக்கு வராததை பெரிதுபடுத்தாமல், எப்படி சமாளிப்பது என்பதை விவாதிப்பதன் மூலம் கூட்டு உழைப்பு சாத்தியமாகிறது.

* நீங்கள் எழுதிய புத்தகங்கள்...


நெடும்பயணம் நுால் பலரது கவனத்தை பெற்றது. காயாத கானகத்தே நுால் இசை நாடகத்தை பற்றியது. சங்கரதாஸ் சுவாமிகள் வரலாற்றை எழுதினேன். நடிகர் நாசர் நுாலுக்கு அணிந்துரை எழுதினார்.

* இளைய தலைமுறைக்கு நாடகம் மீது ஈர்ப்பு வர என்ன செய்யலாம்


அவர்களுக்கு என்ன தரப்படுகிறதோ அதில் இருந்து தான் அவர்கள் உருவாகின்றனர். இது தான் உன் கலை, மரபு, வேர் என உணர்த்த வேண்டும். அப்படி உணர்த்தினால் அவர்கள் இறுக பற்றிவிடுவர் என்பது என் நம்பிக்கை.

paarthibaaraja@yahooo.co.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us