/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
நவீன உலகில் பெண்களும் தொழிலதிபர்களாக மாறலாம் - வழிகாட்டுகிறார் ஆஞ்சலின் டேவிட்
/
நவீன உலகில் பெண்களும் தொழிலதிபர்களாக மாறலாம் - வழிகாட்டுகிறார் ஆஞ்சலின் டேவிட்
நவீன உலகில் பெண்களும் தொழிலதிபர்களாக மாறலாம் - வழிகாட்டுகிறார் ஆஞ்சலின் டேவிட்
நவீன உலகில் பெண்களும் தொழிலதிபர்களாக மாறலாம் - வழிகாட்டுகிறார் ஆஞ்சலின் டேவிட்
UPDATED : மார் 08, 2026 12:08 PM
ADDED : மார் 08, 2026 05:55 AM

''இன்றைய நவீன உலகில், பெண்களின் சமூக பங்களிப்பு என்பது மிக வேகமான மற்றும் ஆச்சர்யம் தரக்கூடிய மாற்றங்களை ஏற்படுத்துவதாக மாறியிருக்கிறது. இது வெறும் மாற்றமல்ல, ஒரு சமூகப் புரட்சி'' என்கிறார், யெஸ் இண்டியா கேன் அமைப்பின் மூலம், பெண்களின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்துக்கான வழிகாட்டியாக விளங்கும் ஆஞ்சலின் டேவிட்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
திருப்பூர், பருத்தி ஆடைகளின் தலைநகரம். ஆனால், இன்றைய கால மாற்றத்திற்கேற்ப, இந்நகரம் பாலியஸ்டர் மற்றும் நவீன துணி தொழில் நுட்பத்தின் முக்கிய மையமாக உருவெடுத்து வருகிறது. உலகத் தரத்தில் தயாரிக்கப்படும் பாலியஸ்டர் துணிகளை பயன்படுத்தி, உயர்தர மற்றும் நவீன வடிவமைப்புகளுடன் ஆடைகளை தயாரித்து, சொந்தமாக புதிய பிராண்ட்களை உருவாக்கும் வாய்ப்பு பெண்களுக்கு கிடைத்திருக்கிறது.
உள்ளூர் சந்தையோடு நின்றுவிடாமல், டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் உலக சந்தையை அடைய முயற்சிக்க வேண்டும். இணைய வழி விற்பனை, சமூக ஊடகங்கள் ஆகியவை, உலகச்சந்தையின் கதவுகளை திறந்து வைத்துள்ளன. ஒரு பெண் தொழில் முனைவோராக மாறும் போது, அது அவளது குடும்ப வருமானத்தை உயர்த்துவதோடு மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த சமூகத்தின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும்.
போட்டி நிறைந்த உலகில் வெற்றி பெறுவதற்கு, கடின உழைப்பு மட்டும் போதாது; அது புத்திசாலித்தனமான உழைப்பாகவும் இருக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஆடைகளை வடிவமைத்தல், உற்பத்தியைத் திட்டமிடுதல் மற்றும் சந்தைப்படுத்துதல் போன்றவற்றை மிக எளிமையாக, துல்லியமாக செய்து முடிக்க முடியும். தொழில்நுட்பத்தை தழுவும் பெண்களே வருங்காலத்தை ஆள்வார்கள்.
பெண்களும், ஆண்களும் சமத்துவம், பரஸ்பர மரியாதை மற்றும் இணைந்து செயல்படும் மனப்பாங்கு ஆகியவற்றின் அடிப்படையில் உருவாவதே முன்னேற்றம். வாய்ப்புகள், அறிவு மற்றும் தலைமைத்துவம் சமமாக பகிரப்பட்டால், சமூகங்கள் மேலும் வலுவாகவும் புதுமையானதாகவும் வளரும்.
திருப்பூரில் இயங்கும் எங்கள் அமைப்பு, பெண்களுக்கு வெறும் பயிற்சியை மட்டும் வழங்காமல், அவர்களை தொழில் முனைவோராக மாற்றும் முழுமையான வழிகாட்டுதலை வழங்குகிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.

