/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
'பரதம் ஒரு கலை மட்டுமல்ல; அது ஒரு அடையாளம்' கலை பயணத்தில் 'சாய் கிருஷ்ணா' சந்தியா
/
'பரதம் ஒரு கலை மட்டுமல்ல; அது ஒரு அடையாளம்' கலை பயணத்தில் 'சாய் கிருஷ்ணா' சந்தியா
'பரதம் ஒரு கலை மட்டுமல்ல; அது ஒரு அடையாளம்' கலை பயணத்தில் 'சாய் கிருஷ்ணா' சந்தியா
'பரதம் ஒரு கலை மட்டுமல்ல; அது ஒரு அடையாளம்' கலை பயணத்தில் 'சாய் கிருஷ்ணா' சந்தியா
UPDATED : மார் 08, 2026 06:31 AM
ADDED : மார் 08, 2026 05:37 AM

'பரத கலையில் என்ன இருக்கு என, சாதாரணமாய் சிலர் கேட்ட கேள்வி தான், என்னை பரதக்கலையை ஆழ்ந்து படித்து, கற்பிக்கும் சூழலை ஏற்படுத்திக் கொடுத்தது' என்கிறார், திருப்பூர் சாய் கிருஷ்ணா நுண்கலைக்கூட நிறுவனர் டாக்டர். சந்தியா சங்கர்.
பரத கலையின் தனது அர்ப்பணிப்பு குறித்து அவர் கூறியதாவது:
நான், 6 வயதில் இருந்தே பரதம் கற்றுக்கொள்ள துவங்கினேன்; தொடர்ந்து, பயிற்சி பெற்று வந்தேன். என், 23 வயதில் அரங்கேற்றம் செய்தேன்; அதன் பிறகு தான், அந்த கலையில் உள்ள அத்தனை விஷயங்களையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில், கற்ற கலையை எந்த சூழ்நிலையிலும் விட்டுவிடக் கூடாது என்ற எண்ணம் உருவானது.
திருமண ஏற்பாடு நடந்த சமயத்தில், என் கணவரிடம், திருமணத்துக்கு பிறகும் நான் தொடர்ந்து நடனமாட வேண்டும்; நடனக்கலையை கற்றுக் கொண்டே இருக்க வேண்டும்; பிறருக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற என் விருப்பத்தை தெரிவித்தேன். அவரும் அதை ஏற்று, என்ன சிறப்பான முறையில் ஊக்குவித்தார்.
அதன் விளைவாகத்தான், கடந்த, 17 ஆண்டுகளாக எங்களின் நுண்கலைக் கூடம் தொய்வின்றி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த கலையை ஆழமாக கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆழ்மனதின் விருப்பத்தின் விளைவாகத்தான், அதில் நான் டாக்டர் பட்டமும் பெற்றேன். துவக்கத்தில், 4 மாணவர்கள் தான் எங்கள் கலைக்கூடத்தில் பயின்றனர்.
படிப்படியாக மாணவர் எண்ணிக்கை உயர்ந்து, நுாற்றுக்கணக்கானோர் நடனம் பயின்றனர்; தற்போது, 130 பேர் நடனம் பயின்று வருகின்றனர். 'பரதக்கலை என்பது பொழுதுபோக்குக்கான விஷயம்; அப்படி அதில் என்னதான் இருக்கிறது?' என மிகச்சாதாரணமாக கேள்வியெழுப்புகின்றனர். அது ஒரு கலை மட்டுமல்ல; ஒருவரின் அடையாளமாக மாறுகிறது. பரதக்கலையை கற்றுக் கொள்வதன் வாயிலாக தன்னம்பிக்கை வளர்கிறது; ஆளுமைத்திறன் கூடுகிறது.
நவராத்திரியில் தொடர்ந்து 9 நாட்கள், சிவராத்திரியில், இரவு முழுக்க என, எங்கள் கலைக்கூட மாணவிகள், கோவில்களில் நடன நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.
இன்றைய இளைய தலைமுறை அறிந்திராத, நமது பாரம்பரியத்தின் அங்கமாக விளங்கும் இதிகாச கதைகளையும் நாட்டிய நாடகமாக மிகுந்த சிரத்தையெடுத்து நடத்தி வருகிறோம்.
பரதக் கலையுடன் கர்நாடக இசை, மிருதங்கமும் கற்றுக் கொடுக்கிறோம். 'என்னால் முடியும்' என்ற எண்ணம் மட்டும் இருந்தால் போது, இந்த கலையை கற்றுக்கொள்ள முடியும்.

