/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
இணையவழி திருக்குறள் பன்னாட்டுக் கருத்தரங்கம் - உலகச் சாதனை நிகழ்வு
/
இணையவழி திருக்குறள் பன்னாட்டுக் கருத்தரங்கம் - உலகச் சாதனை நிகழ்வு
இணையவழி திருக்குறள் பன்னாட்டுக் கருத்தரங்கம் - உலகச் சாதனை நிகழ்வு
இணையவழி திருக்குறள் பன்னாட்டுக் கருத்தரங்கம் - உலகச் சாதனை நிகழ்வு
ஜூன் 27, 2024

துபாய் : தேசிய கல்வி அறக்கட்டளை - கல்லிடைக்குறிச்சி, திருநெல்வேலி, உலகத் தமிழர்கள் இணைய வழிப் பேரவை, துபாய், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் திருக்குறள் இருக்கை, அகழ் கலை இலக்கிய மன்றம் - பெரம்பலூர் ஆகிய அமைப்புகள் இணைந்து இவர்களுடன், சென்னை விஜிபி உலக தமிழ்ச் சங்கம், திருமாஞ்சோலை பதிப்பகம், மதுரை - இந்தியா, தமிழ்ச்சங்கம் உகாண்டா கிழக்கு ஆப்ரிக்கா, மற்றும் தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சி போன்ற அமைப்புகள் ஒன்றினைந்தும் திருக்குறளுக்கான மாபெரும் பன்னாட்டு கருத்தரங்கை இணையவழியில் நடத்தினர்.
23.06.2024 காலை 10 மணி முதல், இரவு 10 மணி வரை தொடர்ச்சியாக 12 மணி நேரம் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருக்குறளின் 1330 குறட்பாக்களுக்கும், 1330 கதைகளை எழுதிய 133 எழுத்தாளர்கள் கலந்து கொண்டு தங்கள் கதைகளை பகிர்ந்தனர். மேலும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிஙகப்பூர், மலேசியா, இத்தாலி, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, உகாண்டா, சவுதி அரேபியா, துபாய் போன்ற 24 நாடுகளைச் சேர்ந்த சேர்ந்த தமிழ் ஆளுமைகள் தமிழ் அமைப்புகள் என்று அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திருக்குறளின் பெருமைகளை எடுத்துரைத்தனர்.
துவக்க விழாவில், சென்னை வி.ஜி.பி குழுமம் மற்றும் வி. ஜி.பி உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் வி. ஜி. சந்தோஷம் தலைமையுரை வழங்க, திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் என். பஞ்சநதம் சிறப்புரையாற்றி துவக்கி வைத்தார். கவிஞர் மஸ்கட் பஷீர், திருநெல்வேலி மாவட்ட அரசு அருங்கட்சியம் காப்பாளர் சத்தியவள்ளி, ஆஸ்திரேலியா உச்சநீதிமன்ற வழக்கறிஞர் முனைவர் சந்திரிகா சுப்பிரமணியன், அமெரிக்கா எழுத்தாளர் நெல்லை அன்புடன் ஆனந்தி, முத்தமிழச் சங்கத் தலைவர் ஷா வாழ்த்துரை வழங்கினர்.
பிறகு 24 நாடுகளைச் சேர்ந்த தமிழ் அமைப்புகளின் தலைவர்கள், தமிழ் ஆர்வலர்கள், கல்வியாளர்கள் மற்றும் பேராசிரியர்களுடன், 1330 குறட்பாக்களுக்கும், 1330 கதைகளை உருவாக்கிய 133 எழுத்தாளர்களும் இணைந்து திருக்குறளின் வாழ்வியல் அறநெறி கருத்துக்களை கதைகள் மூலம் உரை நிகழ்த்தினர். தொடர்ச்சியாக 12 மணி நேரம், ஓர் உலக சாதனை நிகழ்ச்சியாக இந்த கருத்தரங்கம் நடந்தது.
இந்தக் கருத்தரங்கத்தின் நிறைவு விழாவில் திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் மு. கிருஷ்ணன் சிறப்புரை ஆற்றினார். தமிழ்நாடு மாநில ஆட்சிமொழி ஆணைய முழு நேர உறுப்பினர் அ. முகமது ஜியாவுதீன் தலைமை தாங்கி சிறப்புரை வழங்கினார். துபாய் கர்டின் பல்கலைக்கழக ஆராய்ச்சி இயக்குனர் பேராசிரியர் சித்திரை பொன் செல்வன், ஓமன் அரபு திறந்தவெளி பல்கலைக்கழகப் பேராசிரியர் கபாலி சுப்பிரமணியன், சவுதி அரேபிய தமிழ்ச் சங்கத் தலைவர் சுரேஷ் பாரதி, இத்தாலி பேராசிரியர் அந்தோணிபிள்ளை மற்றும் பல நாடுகளின் தமிழ் ஆளுமைகள் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கி நிறைவு செய்தனர்.
இந்த 12 மணி நேர தொடர் கருத்தரங்கை, உலகச் சாதனை கருத்தரங்காக கிராண்ட் யுனிவெர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் “Grand Universe Book of Records” அங்கீகரித்து நிர்வாக இயக்குனர் வழக்கறிஞர் எம்.ஷேக் முகம்மது உலகச் சாதனை சான்றிதழை வழங்கினார்.
இந்த உலகச் சாதனை சான்றிதழை தமிழ்நாடு மாநில ஆட்சிமொழி ஆணைய முழு நேர உறுப்பினர் அ. முகமது ஜியாவுதீன் தலைமையில் வழங்கியது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக இருந்தது.
திருக்குறள் உலக மக்கள் அனைவரும் கொண்டாடும் ஒரு அற இலக்கியம். அந்த அற இலக்கியத்தில் இல்லாத வாழ்வியல் நெறிகளே இல்லை. இதனை மக்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். மேலும், இதனுடைய கருத்துக்களை கதைகள் மூலம் இந்த உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்தக் கருத்தரங்கம் உருவாக்கப்பட்டது. மேலும் இந்த நோக்கத்தை நிறைவேற்ற எப்பொழுதும் பாடுபட வேண்டும் என்ற உறுதி மொழியுடன் இந்த பன்னாட்டுக் கருத்தரங்கம் இனிதே நிறைவுற்றது.
உலகத் தமிழர்கள் இணைய வழிப் பேரவை, துபாய் அமைப்பின் தலைவர் முனைவர் ஆ. முகமது முகைதீன், மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியல்துறைத் தலைவர் முனைவர் போ. சத்தியமூர்த்தி மற்றும் அகழ் கலை இலக்கிய மன்றத்தின் நிறுவனர் செ. வினோதினி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினர். இணை ஒருங்கிணைப்பாளர்கள் கவிஞர் கீதா சீராம் முனைவர் தி. பிரேமலதா, கவிஞர் உமர் பாரூக், கவிஞர் இதயா, முனைவர் ப. பூஞ்சோலை கவிஞர் இர . தேன் மொழி கலந்து கொண்டனர். நிகழ்வில் இறுதியில் முனைவர். ஆ முகமது முகைதீன் நன்றியுரை வழங்கி நிகழ்வை வெற்றிகரமாக நிறைவு செய்தார்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement