/
உலக தமிழர்
/
அமெரிக்கா
/
செய்திகள்
/
விறகு அடுப்பில் பொங்கல் வைத்து கொண்டாடிய ஆஸ்டின் தமிழ்ச் சங்கம்
/
விறகு அடுப்பில் பொங்கல் வைத்து கொண்டாடிய ஆஸ்டின் தமிழ்ச் சங்கம்
விறகு அடுப்பில் பொங்கல் வைத்து கொண்டாடிய ஆஸ்டின் தமிழ்ச் சங்கம்
விறகு அடுப்பில் பொங்கல் வைத்து கொண்டாடிய ஆஸ்டின் தமிழ்ச் சங்கம்
ஜன 25, 2025

'உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து'(1032)
என்கிற குறளுக்கேற்ப ஆஸ்டின் தமிழ்ச் சங்கம் உழவர் திருநாளை, தைப் பொங்கல் திருநாளை ஊர்கூடி பொங்கல் வைக்கும் விழாவாக ஜனவரி 18 ஆம் தேதியன்று அமெரிக்க, டெக்சாஸ் மாகாண தலைநகர் ஆஸ்டினில் உள்ள ஹிந்து கோவிலில் மிகவும் கோலாகலமாக நடத்தியது. ஆஸ்டின் மாநகரத்தில் முதல் முறையாக விறகு அடுப்பில் பொங்கல், பாரம்பரிய பறை இசை, கும்மி நடனம், சிலம்பம், உறியடி, பொங்கல் பாடல்கள், கோலப்போட்டி என ஒரு தமிழகத்து கிராமமே உருவாகிவிட்டது. நடுக்கும் குளிரிலும், பலத்த காற்றிலும் கூட மக்கள் சரியான நேரத்திற்கு வந்து பொங்கல் வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய தொடங்கி விட்டார்கள்.
ஆஸ்டின் தமிழ்ச் சங்கம் பொங்கல் வைத்த 40 குடும்பங்களுக்கும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட அடுப்பு, விறகு, பொங்கலுக்கு தேவையான பொருட்கள், கரும்பு என அனைத்தையும் வழங்கினர்.
ஜர்னிமேன் குரூப்பின் நிறுவனரும், தலைவருமான சாம் குமார் தலைமையில் அவரது மனைவி ஹேமா குமார் அடுப்பில் அக்னியை ஏற்றி பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார். காலை 9 மணிக்குத் தொடங்கி மதியம் 12 மணிக்கு இனிதே நிறைவுற்றது.
ஆதி தாளம் குழுவின் பறை இசையுடன் கலகலப்பாக தொடங்கிய விழாவில் தொடர்ந்து, ரைகல் நடனக் குழுவின் கும்மி நடனம், பொங்கல் பாடல், வாகை குழுவின் சிலம்பாட்டம் நடைபெற்றது. காற்றில் கோலப்பொடி பறந்தாலும் எங்கள் முயற்சியில் பின்வாங்க மாட்டோம் என போட்டியாளர்கள் குளிரிலும் விடாது அழகான கோலங்களை வரைந்து கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு அடுப்பில் பானையில் பால் பொங்கிய போது குலவை சத்தமும், பறை இசையும், பொங்கலோ பொங்கல் என்ற ஆரவார குரலும் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
அதே சமயத்தில் மற்றொரு புறம் நீண்ட வரிசையில் காத்திருந்து உறியடித்தல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சிறுவர்கள் காட்டிய உற்சாகம் காணக் கண்கொள்ளா காட்சியாக இருந்தது.
வருகை தந்திருந்த அனைவரும் தங்கள் பிள்ளை பருவத்திற்கே அழைத்து சென்று விட்டதாக கூறினார்கள். இந்தியாவிலிருந்து வந்திருந்த பெற்றோர்கள் தமிழ்நாட்டிற்கே சென்று விட்டது போல் ஒரு உணர்வை கொடுத்து விட்டதாக கூறி மெய்சிலிர்த்தார்கள்.
பொங்கல் பண்டிகை உழவர்களின் தன்னலமற்ற உழைப்பையும், தமிழர்களின் நன்றி மறவாமை பண்பினை உலகிற்கு பறை சாற்றுவதாகவும் உள்ளது என்றால் மிகையாகாது.
தமிழர்களின் பண்பாட்டு பெருமைகளையும் தனித்துவத்தையும் பேசும் பொங்கல் பண்டிகையை கொண்டாட்டமாக மட்டும் நினைக்காமல் அமெரிக்காவில் வளர்ந்து வரும் அடுத்த தலைமுறை குழந்தைகளும் பாரம்பரிய பொங்கல் கொண்டாட்டத்தை அனுபவித்து தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த ஆஸ்டின் தமிழ்ச் சங்கத்திற்கு அனைவரும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் , நன்றிகளையும் தெரிவித்தார்கள்.
- நமது செய்தியாளர் மகா ரமேஷ்
Advertisement