/
உலக தமிழர்
/
அமெரிக்கா
/
செய்திகள்
/
ஹூஸ்டன் பாரதி கலை மன்ற சித்திரை சிறப்பு நிகழ்ச்சி
/
ஹூஸ்டன் பாரதி கலை மன்ற சித்திரை சிறப்பு நிகழ்ச்சி
ஏப் 30, 2024

செந்தமிழும் சித்திரையும் கைகோர்த்து, வந்திருந்து விருந்தொன்றை ஹூஸ்டன் தமிழ்க்குடிக்கு தந்து சென்ற இனியதோர் நிகழ்வு, சென்ற ஏப்ரல் 14ஆம் நாள் நடைப்பெற்றது. பொன் விழா ஆண்டில் அழகாய் பவனி வரும் ஹூஸ்டன் பாரதி கலை மன்றம், சித்திரைத் திருநாளில் செவிக்கு உணவு அளித்து செம்மையாக சித்திரையை வரவேற்று மகிழ்ந்தது.
ஐம்பெரும் விழாவாக தொடங்கி நாள் முழுதும் தொடர்ந்த இப்பெருவிழாவை பாரதி கலை மன்றத் தலைவர் டாக்டர்.விஜயா இராமச்சந்திரன் ( விஜி திரு) செயற்குழுவுடன் இணைந்து அனைவரையும் வரவேற்று இனிதாக தொடங்கி வைத்தார்.
ஏப்ரல் 14ஆம் தேதி மதிய நேரம், பி.கே.எம் கோல்டன் குரூப்பின் (BKM Golden Group) சிறப்பு நிகழ்ச்சியாக, இதயநோய் மருத்துவர் சொக்கலிங்கம் ”இதயம் காக்கும் இனிய வாழ்க்கை” என்ற தலைப்பில் மிக சுவாரசியமாக பயனுள்ள தகவல்களை பற்றி உரையாற்றினார். பார்வையாளர்கள் அனைவரும் கலந்துரையாடும் வகையில் அவர் உரையாடிய முறை அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. ஹூஸ்டன் இதய மருத்துவர், Dr. வடுகநாதன் Dr. சொக்கலிங்கத்தை அறிமுகம் செய்து வைத்தார். Golden group ஒருங்கிணைப்பாளர்கள் சௌமியா கணேஷ்ராமும், ரவி பெரியசாமியயும் அவரை வரவேற்று சிறப்பித்தார்கள். BKM ன் முதல் செயலாளர் பாலகிருஷ்ணன் பதாகை வழங்கி சிறப்பித்தார்.
அதைத் தொடர்ந்து, பாரதி கலை மன்ற தமிழ்ச் சபையும் (BKM Tamil Sabai), அருள்மிகு மீனாட்சி திருக்கோயில் நிர்வாகமும், இணைந்து, தமிழ்ப் பேரறிஞர் சாலமன் பாப்பையா, “உயிரோவியமே” என்ற உன்னதத் தலைப்பில் உரையாற்ற ஏற்பாடு செய்திருந்தது. தமிழ்ச் சபை ஒருங்கிணைப்பாளர்கள் ராஜி வாஞ்சியும், திருமதி. ஸ்வர்ணலதா மகேஷும் பொன்னாடை போர்த்தி வரவேற்றார்கள். BKM நிர்வாக இயக்குனர் கணேஷ் ரகு வரவேற்புரையை இயற்றினார். மீனாட்சி திருக்கோவிலின் தலைவர் சுந்தர் அருணாசலம் வாழ்த்தி வரவேற்றார். ஹூஸ்டன் தமிழ் இருக்கை செயற்குழு சார்பாகவும் வரவேற்பு வழங்கப்பட்டது. 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற சிறந்த குறளுக்கேற்ப 'மதங்கள் கடந்து, மானுடம் பேணுதலே மகத்துவம்', 'சமத்துவ சிந்தனையே என்றும் சிறக்கும்' என பல உயரிய கருத்துக்களை உயிரோவியம் உரை வழி செவி சேர்த்தார் பேராசிரியப் பெருந்தகையாளர்.
பாரதி கலை மன்றம் தம் உறுப்பினர்களின் படைப்பாற்றலை காட்சிப்படுத்த வெளியிட்டு வரும் தமிழ்ச்சாரல் இதழை, BKM இலக்கிய இயக்குனர்கள் ராஜி வாஞ்சியும், ஸ்வர்ணலதா மகேஷும் இணைந்து மிக சிறப்பாக வடிவமைத்த சித்திரை மலரை, சாலமன் பாப்பையா வெளியிட்டு சிறப்பித்தார். பொன் விழா ஆண்டின் “பொன் மலராய்” பூத்திருக்கும் தமிழ்ச்சாரல் இதழ் நன்னெறி பல கற்று எந்நேரம் அதை மக்களிடையே பரப்பும் பேராசிரியரால் வெளியிடப்பட்டது பெருமைமிகு தருணமாக அமைந்தது.
சிறப்பான சித்திரைப் புத்தாண்டு விழாவின் சிகரமாக திகழ்ந்தது, சாலமன் பாப்பையா தலைமையில் நடைபெற்ற பட்டிமன்றமாகும். 'குழலினிது, யாழினிது என்பர்தம் மழலை சொல் கேளாதார்' என்பதற்கேற்ப, கண்ணின் மணியாய் வளர்க்கப்படும் பிள்ளைகளுக்கும் பெற்றோருக்குமான உறவு, இக்காலச் சூழலில் அல்லலா? ஆனந்தமா? என்று இரு அணிகள் பட்டிமன்ற மேடையில் அலசி ஆராய்ந்தனர். அல்லலே அணியில் கணேஷ் ரகு, பாஸ்கர் பாண்டியராஜ், ஜெயா மாறன்; ஆனந்தமே அணியில், விஜி ராஜா, மேகநாதன் வளவன், ஆனந்த் விஸ்வநாதன் நகைச்சுவையும், கருத்தாக்கமுமாக பட்டிமன்றத்தை சிறக்கச் செய்தனர். பார்வையாளர்கள் மனம் விட்டு சிரித்தும், சீரிய கருத்துக்களுக்கு சிந்திக்குமாறும் நல்லதொரு நிகழ்வாக நடந்தேறியது.
செவிக்கு உணவு ஈயும் முன்னர் சிறிது வயிற்றுக்கும் ஈயும் வண்ணம் சிறப்பான சிறுதானியங்களை கொண்டு சிற்றுண்டிகளை செய்து வரும் போட்டி நடத்தப் பட்டது. BKM யூத் கிளப் (BKM Youth Club) ஒருங்கிணைப்பாளர்கள் ரவி பெரியசாமி, சௌமியா கணேஷ்ராமும் இணைந்து இந்த நிகழ்ச்சியை திறம்பட திட்டமிட்டு அழகாக நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள்!செயலாளர் உஷா வாசு இந்த விழாவினை மிக சிறப்பாக நடத்த உதவிய அனைவருக்கும், மற்றும் தங்கள் சிறப்பான உதவியை அளித்த தன்னார்வலர்களுக்கும் BKM சார்பாக நன்றியைத் தெரிவித்தார். விழா இறுதியில் மீனாட்சி திருக்கோயில் ஏற்பாடு செய்திருந்த இரவு உணவு மிக சிறப்பாக அமைந்திருந்தது!
பாரதி கலை மன்றம், 50 ஆம் ஆண்டு பொன் விழா கொண்டாட்டங்களை (BKM 50 Golden Jubilee Year Celebrations) வரும் ஆகஸ்ட் 30, 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய மூன்று நாட்கள், தமிழ்க் கலை பண்பாட்டின் திருவிழாவாக நடத்த திட்டமிட்டு உள்ளது. ஐம்பதாம் ஆண்டு பொன்விழாக் கொண்டாட்டங்களுக்கு அடித்தளமாக, முதல் செங்கலாக இந்த ஐம்பெரும் விழா நடந்தேறியது எனலாம். நிதி திரட்டும் நிகழ்வாக மலர்ந்த இந்த ஐம்பெரும் விழா சித்திரை திருநாளைத் தித்திப்புச் சுவையோடு துவக்கி வைத்தது என்றால் மிகையில்லை. தகவல்: ராஜி வாஞ்சி, இலக்கிய இயக்குனர், BKM 2024
- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்
Advertisement