PUBLISHED ON : மே 23, 2026

திருப்பூர், அரசு ஆரம்பப்பள்ளியில், 1964ல், 4ம் வகுப்பு படித்தேன். பள்ளியில் புதிதாக சேர்ந்திருந்த ஆசிரியை இந்திராணி, எங்கள் வகுப்பாசிரியராக நியமிக்கப்பட்டார். வகுப்பறையில் மாணவர்களை அன்புடன் கவனித்துக் கொண்டார்.
ஒரு நாள், நான் உள்ளிட்ட நான்கு மாணவர்கள், ஆசிரியை வீடு எங்குள்ளது என்பதை தெரிந்து கொள்ள விரும்பினோம். அறியாத வயதின் ஆர்வக் கோளாறால், பள்ளி முடிந்ததும் ஆசிரியையை பின் தொடர்ந்து சென்றோம். பள்ளியில் இருந்து 2 கி.மீ., துாரத்தில் அவர் வீடு இருந்தது.
வீட்டின் அருகில் சென்ற போது, அவர் எங்களை கண்ணுற்று திடுக்கிட்டார். 'எப்படி வந்தீர்கள்...' என்று கேட்டார். நாங்கள் உண்மையை ஒப்புக் கொண்டோம். 'இவ்வளவு துாரம் எல்லாம் வரக்கூடாது. வழிமாறி சென்றுவிடும் வாய்ப்புண்டு.பெரியவர்களின் துணையோடு தான் எங்கும் செல்ல வேண்டும்...' என்று அறிவுரை கூறினார்.
வீட்டில் அமர வைத்து, காரப்பொரி மற்றும் காபி கொடுத்து, கனிவுடன் உபசரித்தார். பின், எங்கள் வீடு வரை அழைத்து வந்து, பெற்றோரிடம் ஒப்படைத்தார். அவர் கூறிய அறிவுரை பசுமரத்தாணி போல மனதில் பதிந்தது.
என் வயது, 71. சிறுதொழில் நிறுவனம் நடத்தி வருகிறேன். ஆசிரியை இந்திராணி கூறிய அறிவுரையையே என் பேரக்குழந்தைகளுக்கும் கூறி, அவர்களை வழிநடத்தி வருகிறேன். ------
-பி.ராமசாமி, திருப்பூர்.தொடர்புக்கு: 99948 13620
