/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தென்னையில் நோய்களை கட்டுப்படுத்தும் எதிர் உயிர்கள்! ஆராய்ச்சி நிலைய பேராசிரியர்கள் விளக்கம்
/
தென்னையில் நோய்களை கட்டுப்படுத்தும் எதிர் உயிர்கள்! ஆராய்ச்சி நிலைய பேராசிரியர்கள் விளக்கம்
தென்னையில் நோய்களை கட்டுப்படுத்தும் எதிர் உயிர்கள்! ஆராய்ச்சி நிலைய பேராசிரியர்கள் விளக்கம்
தென்னையில் நோய்களை கட்டுப்படுத்தும் எதிர் உயிர்கள்! ஆராய்ச்சி நிலைய பேராசிரியர்கள் விளக்கம்
ADDED : ஆக 13, 2024 01:36 AM
பொள்ளாச்சி;தென்னையில் மழைக்கால நோய்களை கட்டுப்படுத்தும் எதிர் உயிர்கள் குறித்து, ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர்கள் தெரிவித்தனர்.
ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலைய தலைவர் சுதாலட்சுமி, இணை பேராசிரியர்கள் லதா, மீனா ஆகியோர் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தென்னையில் மழைக்காலங்களில் குருத்தழுகல், அடித்தண்டழுகல் மற்றும் சாறுவடிதல் ஆகியவை முக்கிய நோய்களாகும். பாக்டீரியா மற்றும் பூஞ்சாண வகையை சார்ந்த நோய் காரணிகள் பெருகி, அதிகமான நோய்களை உண்டாக்குகின்றன. இத்தகைய சூழ்நிலையில் நோய்களிலிருந்து தென்னையை பாதுகாப்பது மிக முக்கியமாக கருதப்படுகிறது.
வேளாண்மையில் அதிகளவு ரசாயன பூசணக்கொல்லிகளை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு, ரசாயனங்களின் எச்சம் காரணமாக நோய்காரணிகள் அதிக வீரியம் பெறுகின்றன.
மேலும், ரசாயனங்கள், உணவுப் பொருட்களில் தங்கி உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கிறது. ஆனால், உயிர் எதிர்கொல்லிகளை பயன்படுத்துவதால் அத்தகைய சீர்கேடு ஏற்படுவதில்லை. ஒருங்கிணைந்த பயிர் நோய் மேலாண்மையில் எதிர் உயிர்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.
உயிரியல் முறை நோய் மேலாண்மை என்பது, நுண்ணுயிர்களை கொண்டு நோய் காரணிகளை அழித்து பயிர்களை பாதுகாப்பதாகும். இவை பிற உயிரினங்களுக்கு தீங்கு விளைவிப்பதில்லை. இவற்றுள் பூசணங்களும், பாக்டீரியாக்களும் அடங்கும்.
தீவிர வேளாண்மையில் மண், வேர் மற்றும் இலை வாயிலாக பரவும் நோய்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. எனவே, எதிர் உயிர்களை கொண்டு தென்னையை தாக்கும் பலவிதமான நோய்களுக்கு எதிர்பாற்றல் அளிக்க முடியும்.
டிரைக்கோடெர்மா விரிடி (டி -அஸ்பெர்ல்லம்) என்பது பூசண வகையை சேர்ந்த நுண்ணுயிரியாகும். இது மண் மற்றும் வேர் வாயிலாக பரவும் நோய்களிலிருந்து தென்னையை பாதுகாக்கிறது.
இதுதென்னையின் நோய்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் கட்டுப்படுத்துகிறது. இது டிரைக்கோடெர்மின், டிரைக்கோவிரிடின், செஸ்கூடெர்பினா ெஹப்டாலிக் அமிலம் மற்றும் டெர்மாடின் போன்ற நோய் எதிர்ப்பு பொருட்களை உற்பத்தி செய்து பயிர் நோய்களை நேரடியாக கட்டுப்படுத்துகிறது.
டிரைக்கோடெர்மாவிரிடி நோய் கிருமிகளை எதிர்த்து அழிப்பதுடன் பயிரின் வேர் மற்றும் பயிர் வளர்ச்சிக்கு தேவையான ஹார்மோன்கள், பிற வளர்ச்சி ஊக்கிகளை சுரப்பதனால் பயிர் வளர்ச்சி மற்றும் மகசூலை அதிகரிக்கச் செய்கின்றது.
இது பிற பாக்டீரியா நுண்ணுயிர் உரங்களுடன் பிற எதிர் உயிரிகளுடன் கலந்து உபயோகிக்கலாம். டிரைக்கோடெர்மா விரிடி, 200 கிராம் அளவை, ஒரு கிலோ வேப்பம்புண்ணாக்கு மற்றும் மக்கிய சாண எருவுடன் கலந்த மண்ணில் இட்டு தென்னை அடிதண்டழுகல் மற்றும் சாறுவடிதல் நோய்களை கட்டுப்படுத்தலாம்.
பேசில்லஸ் சப்டிலிஸ் பயிர்களுக்கு நன்மை தரக்கூடிய பாக்டீரியா வகையினை சார்ந்த நுண்ணுயிரியாகும். பேசில்லஸ் தென்னையின் நோய்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் கட்டுப்படுத்துகிறது.
இது நோய்களை கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஹார்மோன்களான ஆக்ஸின், ஜிப்ராலின் மற்றும் இன்டோ அசிடிக் அமிலம் ஆகியவற்றை சுரந்து பயிர்களின் வளர்ச்சியை அதிகரிக்கிறது.
பேசில்லஸ் சப்டிலிஸ், 200 கிராம் பவுடரை மக்கிய சாண எருவுடன் கலந்து நோய் தாக்கிய மரங்களை சுற்றி மண்ணில் இட்டு தென்னை குருத்தழுகல், அடித்தண்டழுகல், சாறுவடிதல், சாம்பல் இலைப்புள்ளி, இலை அழுகல் மற்றும் கேரளா வேர் வாடல் நோய்களில் இருந்து பாதுகாக்கலாம்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.