நீச்சல் பயிற்சிக்கு போறீங்களா... நீங்கதான் தெரிஞ்சுக்கணும் இதை!
நீச்சல் பயிற்சிக்கு போறீங்களா... நீங்கதான் தெரிஞ்சுக்கணும் இதை!
PUBLISHED ON : ஏப் 26, 2026

நீர்நிலையோ, நீச்சல்குளமோ பிறரின் கண்காணிப்பில்லாமல் நீச்சல் பயிற்சி செய்யக்கூடாது என்கிறார் நீச்சல் பயிற்சியாளர் சரவணன்.
அவர் கூறியதாவது:
* உடலின் ஒட்டுமொத்த தசைகளையும் இயங்க வைக்கும் அரிய வகை உடற்பயிற்சிகளுள் ஒன்று நீச்சல் பயிற்சி. ஐந்து வயது குழந்தை முதல் அனைவரும் நீச்சல் பயிற்சி செய்யலாம்.
* நீச்சல் குளங்களில் பயிற்சியாளர், லைப் கார்டு கண்காணிப்பில் இருப்பது அவசியம். நீர்நிலைகளில் தனியாக நீந்துவதைத் தவிர்க்க வேண்டும்.
* நீச்சல் பயிற்சிக்கு முன் உடலை தயார் செய்ய, 5 -10 நிமிடங்கள் லேசான வாம்- அப் உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். இது தசை பிடிப்பைத் தடுக்கும்.
* நீச்சல் முடிந்ததும் உடனடியாக வெளியே வரக்கூடாது. சிறிது நேரம் உடலை தளர்த்தும் வகையில் மெதுவாக சில நிமிடங்கள் நீந்தி வெளியே வர வேண்டும்.
* நீச்சலுக்கு முன்பும், பின்பும் நன்றாக குளித்து விட வேண்டும். பயிற்சிக்கு முன், பின் மற்றும் இடையிலும் போதுமான அளவு நீரை குடித்து உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டும்.
* சாப்பிட்ட பின் குறைந்தது ஒன்று, இரண்டு மணி நேரம் கழித்தே நீந்த வேண்டும். ஒவ்வொருவரின் உடல்நலம், பயிற்சியாளரின் அறிவுறுத்தலுக்கேற்ப எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பயிற்சி பெறலாம். ஆழம் தெரியாத நீர்நிலைகளில் இறங்கவே கூடாது.
நீச்சல்... யாருக்கு கூடாது?
வலிப்பு, தோல் நோய் பாதிப்பு உள்ளவர்கள் நீச்சல் குளத்திற்கு செல்வதை தவிர்க்க வேண்டும். சளி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு, தொற்று நோய்கள், தோலில் வெட்டுக்காயங்கள் உள்ளவர்கள், சரியாகும் வரை நீச்சல் குளத்திற்கு செல்லக்கூடது. மற்றவர்களுக்கும் தொற்று பாதிப்பு ஏற்படக்கூடும். ஏதேனும் உடல்நிலை பாதிப்பு இருந்தால் மருத்துவரை ஆலோசித்துவிட்டு நீச்சல் பயிற்சியில் ஈடுபடலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
