PUBLISHED ON : ஏப் 19, 2026

சிசேரியன் போது முதுகில் போடப்படும் ஊசியால், பின்னாளில் முதுகு தண்டுவடத்தில் வலி ஏற்படுகிறது என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மையல்ல என, அரசு மருத்துவமனை உடலியல் மற்றும் மறுவாழ்வு பிரிவு மருத்துவர் பத்மராணி தெரிவித்தார். யாருக்கு பிசியோதெரபி சிகிச்சை தேவை?
எலும்பு முறிவு ஏற்பட்ட பிறகு, பழையபடி அப்பகுதியை செயல்பட வைக்க,பக்கவாதம், நரம்பு பாதிப்பு, முடக்குவாதம், எலும்பு தேய்மானம் போன்ற நோய்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு; பிறவியிலே கால் வளைந்து பிறப்பது; கை, கால் போன்ற உறுப்புகள் சரியாக செயல்படாமல் இருப்பவர்களுக்கு, வயதானவர்களுக்கு, எலும்பு, தசைகளில் பாதிப்பு இருந்து, அறுவை சிகிச்சையை சிறிது காலம் தள்ளி வைக்க முடிவெடுப்பவர்களுக்கு,உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க நினைப்பவர்களுக்கு பிசியோதெரபி சிகிச்சை தேவை.
சிசேரியனுக்கு பிறகு முதுகு வலி ஏற்பட காரணம் என்ன?
சிசேரியனுக்கு முன்பு முதுகில் போடப்படும் ஊசியால் தான் முதுகு தண்டுவடத்தில் வலி ஏற்படுகிறது என்ற எண்ணம் பலருக்கும் இருக்கிறது; அது உண்மையல்ல. அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட ஆய்வுகள் ஏதுமில்லை.
அனைத்து அறுவை சிகிச்சைக்கும், மயக்க ஊசி செலுத்தப்படுகிறது. மாதவிடாய் காரணமாக பெண்களுக்கு அதிக ரத்தபோக்கு வெளியேறுகிறது. கால்சியம், இரும்பு சத்து குறைபாட்டை சமன்படுத்தாததால், வலி ஏற்படுகிறது.
இரவு நேரங்களில் வேலை செய்யும் பலர், பகலில் துாங்குவதால், சூரிய ஒளியில்இருந்து நேரடியாக உடலுக்குகிடைக்கும் விட்டமின் டி போதிய அளவில் கிடைப்பதில்லை.
கீரை, பால், பால் சார்ந்த பொருட்கள், காய்கறி அதிகளவில் உணவில் சேர்க்க வேண்டும்.
கம்ப்யூட்டரில் வேலை செய்யும் பலர், சரியான கோணத்தில் நீண்ட நேரம் உட்காராத பட்சத்தில், முதுகு, தோள்பட்டையில் வலி ஏற்படலாம்.
இதை பிசியோதெரபி சிகிச்சையில் குணப்படுத்தலாம். ஆறு வாரம் முறையாக சிகிச்சை பெற்றால், மாற்றத்தை உணர முடியும்.
- டாக்டர் எஸ்.பத்மராணி
உதவி பேராசிரியர், உடலியல் மற்றும் மறுவாழ்வு சிகிச்சை பிரிவு,
அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, கோவை.
99528 91794
padmarani795@gmail.com

