PUBLISHED ON : மே 31, 2026

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் நேரம் தொடங்கி விட்டது. புதிய வகுப்பு, புதிய பாடம், புதிய நட்பு என பல எதிர்பார்ப்புகளுடன் பிள்ளைகளும் அவர்களைத் தயார்படுத்த பல வேலைகளுடன் பெற்றோர்களும் ஓடிக் கொண்டிருப்பர்.
இந்த ஓட்டத்திற்கு நடுவே சிலவற்றை மறந்து விடாமல் கவனிக்க வேண்டும். பற்களும் பற்கள் சார்ந்த பராமரிப்பையும் பலரும் கடந்து செல்கின்றனர். எளிமையான செயல்களும் பழக்கங்களும் பற்களின் ஆரோக்கியத்தைக் காப்பாற்றி குழந்தைகளுக்கு ஆனந்த சிரிப்பைத் தரும்.
முதலாவதாக, விடுமுறையில் உணவுப்பழக்கத்தில் உள்ள மாறுதல்களால் பற்களில் பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. வீட்டில் இருக்கும் நேரம், பிள்ளைகள் இனிப்பு அதிகமாக சாப்பிடுவர். வெளியில் சாப்பிடுவதும் அதிகமாக இருக்கும். விடுமுறையில் பயணம் செல்லும் போது பற்களை கவனிப்பதும் குறைந்துவிடும். இவை அனைத்தும் சேர்ந்து பற்களை கொஞ்சம் சேதப்படுத்தி இருக்கலாம். நல்ல விஷயம் என்னவென்றால் சரியான நேரத்தில் கண்டுபிடித்தால் சிறிய சிகிச்சை அல்லது சிகிச்சை செய்யாமலேயே சரிசெய்து விடலாம்.
பற்களும் ஈறுகளும் சுத்தமாக உள்ளதா என பார்த்துக் கொள்ளுங்கள். விளையாடும் போது விழுந்தாலோ அடிபட்டிருந்தாலோ பற்கள் உடைந்துள்ளனவா என பல் டாக்டரிடம் காட்டி சோதனை செய்ய வேண்டும். விடுமுறையின் போது பல்வரிசை சீரமைப்பு சிகிச்சை செய்ய ஆரம்பித்தவர்கள் பள்ளி செல்லும் போது, அதற்குரிய டூத்பிரஷ் வைத்து சரியாக சுத்தம் செய்ய வேண்டும். இரவில் பல்துலக்க வேண்டும். சாப்பிட்டவுடன் தண்ணீரால் கழுவும் பழக்கத்தை வழக்கமாக்க வேண்டும்.
சத்தான உணவு, முறையான சுத்தம், சரியான பராமரிப்பு இவை மூன்றும் இருந்தால் பற்களும் வாயும் அதன்மூலம் உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
- டாக்டர் ஜெ. கண்ணபெருமான் நளா பல் மருத்துவமனை மதுரை. 94441 54551
